புதன், 29 ஏப்ரல், 2015

பாஜக, பிரேமலதா, சுதீஷ் ஏற்பாட்டில் டெல்லிக்கு விஜயகாந்த் அடித்த விசிட்!

பிரதமர் சந்திப்பு விவகாரத்தில், திடீர் திருப்பமாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன் கைகோர்த்து சென்ற கட்சிகள், இப்போது அவர் மீது அதிருப்தியில் இருக்கின்றன. மேகதாது அணை உள்ளிட்ட பொதுப் பிரச்னைகளுக்காக, பிரதமரை சந்திக்க சென்ற குழுவில், 10 கட்சிகள் இடம்பெற்றன. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அழைப்பை ஏற்று, இந்த கட்சிகளின் சார்பில், பிரதிநிதிகள் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.குழுவுக்கு யார் தலை மை என்பதில், 'ஈகோ' பார்க்காமல், தி.மு.க., உள்ளிட்ட பெரிய கட்சிகளும் இதில் இடம்பெற்றன. தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்ட, புதிய அத்தியாயம் துவங்கியதாக, அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. ஆனால், அந்த பேச்சும், அத்தியாயமும் டில்லியிலேயே முறிந்து போனது. தமிழகத்தின் ஒட்டு மொத்த எதிர்கட்சிகளையும்  சினிமா செட்  ப்ரோபெர்டிகளாக யூஸ் பண்ணி விஜயகாந்த் டெல்லிக்கு போனது  பாஜக பிரேமலதாவின் கூட்டு தயாரிப்பாகும் .
டில்லி சென்ற கட்சிகளுக்கு இடையே பிளவு தெரியத் துவங்கியதுடன், இந்த விஷயத்தில் முன்னின்று செயல்பட்ட, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, அக்கட்சிகளுக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. ஒதுங்கிய தலைவர்கள்: இதன் பின்னணி தகவல்கள் பற்றிய விவரம் வருமாறு:பிரதமரை சந்தித்த பின், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க முடிவு செய்யப்பட்டது; அதை, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டில் நடத்தலாம் என முடிவானதும், தி.மு.க., - எம்.பி., கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், த.மா.கா., மூத்த நிர்வாகி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் ஒதுங்கிக் கொண்டனர்.பிரதமரை சந்திக்க வந்த குழுவினர், பொதுவான இடத்தில் பேட்டி அளிக்காமல், பா.ஜ., அமைச்சர் வீட்டுக்கு சென்றதை, இவர்கள் விரும்பவில்லை. ஏற்கனவே இந்த சந்திப்பு, பா.ஜ., தலைவர்கள் வகுத்த திட்டப்படி நடப்பதாக, மனிதநேய மக்கள் கட்சி சந்தேகத்தை கிளப்பியதுடன், டில்லி பயணத்தை புறக்கணித்து இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, விஜய காந்தையும், அவரது மனைவி, மைத்துனரை மட்டும், பிரதமர் தனியாக சந்தித்து பேசினார்; இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது பற்றிய தகவல், குழுவில் இடம்பெற்ற கட்சியினருக்கு தெரிவிக்கப்படவில்லை.
இதனால் ஏற்பட்ட அதிருப்தியை, டில்லியிலேயே, திருச்சி சிவா வெளிப்படுத்தினார். அவர் அளித்த பேட்டியில், 'இந்த குழுவுக்கு யார் தலைமை என்றில்லை; இது, ஒரு கூட்டு முயற்சி' என, கூறினார்.தி.மு.க., தலைமையின் அறிவுறுத்தல்படியே, அவரது பேட்டி இப்படி காட்டமாக இருந்துள்ளது. மறுநாள் வெளியான கட்சி பத்திரிகையிலும், இந்த செய்திக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. மேலும், பத்திரிகையாளர் சந்திப்பில், விஜய காந்த் நடந்து கொண்ட விதம், அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது; அவர் மாறவில்லை என்பதையே, இது காட்டுகிறது என, தி.மு.க., தரப்பில் கூறப்படுகிறது. இதெல்லாம், குழுவில் உள்ள பெரிய கட்சியான தி.மு.க.,வுக்கு, கோபத்தை ஏற்படுத்தியதற்கான ஆதாரங்கள். இதுகுறித்து, குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் கூறுகையில், 'தமிழக நலன் சார்ந்த பிரச்னைக்காக, எல்லாரும் குழுவாக வந்த இடத்தில், விஜயகாந்தும், அவரது மனைவி, மைத்துனரும், பிரதமரை தனியாக சந்தித்து பேசுவது பொருத்தமற்றது; அரசியல் நாகரீகமற்றது; பிரதமரும், இதை அனுமதித்திருக்கக் கூடாது;இந்த தனிப்பட்ட சந்திப்பு தான், விஜயகாந்தின் திடீர் டில்லி பயணத் திட்டத்தின் பின்னணியில், பா.ஜ., இருப்பதாக கூறப்படும் சந்தேகத்தை வலுப்படுத்தி விட்டது. விஜயகாந்தை முன்னிலைப்படுத்தவும், அதன்மூலம் தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேடவும், பா.ஜ., போட்ட திட்டம் இது என்பது, வெளிச்சத்துக்கு வந்துவிட்டது' என்றனர் அத்துடன் டில்லி யில், நிருபர்கள் சந்திப்பில், ஆளுங்கட்சி, 'டிவி' நிருபரை பார்த்த வுடனே,'டென்ஷன்' ஆன
விஜயகாந்த், பொறுமை இழந்ததால், பிரதமரை சந்தித்த விஷயத்திற்கு கிடைத்து இருக்க வேண்டிய முக்கியத்துவம், அவரது கோபத்திற்கு கிடைத்து, குளறு படியை ஏற்படுத்தி விட்டது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் முக்கிய கட்டத்தில், மத்திய அரசு உள்ளது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவையும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதாவையும், எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என, பா.ஜ., துடிக்கிறது. எனவே, அ.தி.மு.க.,வின் அதிருப்தியை சம்பாதிக்க, எக்காரணம் கொண்டும் பா.ஜ., விரும்பாது என்பதே, அனைவரது எண்ணமாகவும் இருந்தது.
ஆனால், அ.தி.மு.க., வின் நேர் எதிரியான விஜயகாந்திற்கு திடீரென, பா.ஜ., முக்கியத்துவம் தந்துள்ளதால், குழப்பம் ஏற்பட்டது. அதிலும், விஜயகாந்துடன் கூட்டணி சேர துடிக்கும் தி.மு.க.,வுக்கு, தானாகவே ஒரு வாய்ப்பை, பா.ஜ., ஏற்படுத்தி தந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த பின்னணியில், குழுவாக பேசி முடித்த பின், விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகிய மூவர் மட்டும், சில நிமிடங்கள் பிரதமருடன் பேசினர். அப்போது, சில விஷயங்களை, விஜயகாந்த் தரப்பு, கோடிட்டு காட்டியதாகவும் கூறப்படுகிறது. பிரதமரை சந்திக்க, விஜயகாந்த் சென்ற போது, எதிரில் வந்த, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'வாருங்கள்... சந்திப்போமே' என, அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, டில்லி பயண ஏற்பாட்டில் மாறுதல்கள் செய்யப்பட்டு, அன்றைக்கு மாலையே, மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை, விஜயகாந்த் உள்ளிட்ட மூவர் குழு, சந்தித்து பேசியது. நேற்று, பார்லிமென்ட்டுக்கு மீண்டும் மூன்று பேரும் வந்திருந்தனர். மூவர் குழுமதியம் 1:00 மணிஅளவில், அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி ஆகியோரை, மூவர் குழு சந்தித்தது. வெளியில் வந்த விஜயகாந்த், "தமிழக பிரச்னைகள் மற்றும் திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை, மத்திய அமைச்சர்களிடம் வைத் தேன்,” என்றார்.மேகதாது பிரச்னைக்காக, எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் விஜயகாந்த் மேற் கொண்ட டில்லி பயணம், அவரது தனிப்பட்ட பயணமாக மாறியது.- நமது சிறப்பு நிருபர் -தினமலர்.com

கருத்துகள் இல்லை: