ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

கோபாலபுரத்தில் விஜயகாந்த் கலைஞர் சந்திப்பு !

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்தார். இந்த சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் நடைபெற்றது. விஜயகாந்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். விஜயகாந்த்துடன் சுதீஷ், தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி உள்ளிட்டோர் சென்றனர். இந்த சந்திபுக்குப் பின்னர் செய்தியாளர்களை விஜயகாந்த் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாகவும், செம்மரக் கட்டை கடத்தியதாக தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், தமிழக மீனவர் பிரச்சனை, தமிழக ஏழை விவசாயிகள் பிரச்சனை, நில கையகப்படுத்துதல் மசோதா, முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக கலைஞருடன் ஆலோசனை நடத்தினோம்.
நாளை (திங்கள்) பிரதமரை டெல்லியில் சந்திக்க உள்ளேன். அதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து இந்த சந்திப்பில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க உள்ளேன். முதலாவதாக மூத்த தலைவர் கலைஞரை சந்தித்தேன். அவரும் தனது கட்சியின் சார்பாக பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால் முதல்வர் தனியாக சென்று பிரதமரை சந்தித்துள்ளார். ஆகையால்தான் அதிமுகவைத் தவிர அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து அழைப்பு விடுக்கிறேன் என்றார். படங்கள்: அசோக் nakkheeran.in

கருத்துகள் இல்லை: