திங்கள், 2 மார்ச், 2015

புலியூர் முருகேசன் ! ஜெயமோகன் : சாதியதிகாரம் இடைநிலைச்சாதியினரின் கைகளுக்குச் சென்றுவிட்டதையே

ஊர் திரும்பியபின்னர்தான் புலியூர் முருகேசன் அவர் எழுதிய கதைக்காகத் தாக்கப்பட்டதை அறிந்தேன். ஒருவகை கொந்தளிப்பும் பின்னர் ஆற்றாமையும்தான் ஏற்பட்டது. இனி சாதியவாதிகள் கிளம்பி எழுத்தாளர்களுக்கு பாடம் எடுக்கத் தொடங்குவரகள் என எதிர்பார்க்கலாம்.
மீண்டும் ஒரே கதைதான். இலக்கியத்தில் சமூகம் பற்றி எழுதாதே. எழுதினால் மனம்புண்படுகிறது. ஆகவே ‘யார் மனதையும் புண்படுத்தாமல்’ எழுது. அது ரமணிசந்திரன் போல ‘எல்லார் மனதையும் குளிர்விப்பதாக’ இருந்தால் சாலவும் நன்று
ஒருவகையில் இதுவும் நல்லதே. தமிழ்ச்சமூகம் ‘சாதியற்ற’ முற்போக்கு சமூகமாக ஆகிவருகிறது என்ற பிரமை இங்கே சிலரால் உருவாக்கப்பட்டிருந்தது. அப்படி அல்ல, இது இன்னமும் பிகாரை விட பிற்போக்கான சாதியசமூகம் தான் என்பதும் சாதியதிகாரம் இடைநிலைச்சாதியினரின் கைகளுக்குச் சென்றுவிட்டதையே இங்கு முற்போக்காக கொண்டாடிக்கொண்டிருந்தோம் என்பதும் தெளிவாகியிருக்கிறது.

இங்குள்ள உண்மையான அதிகாரம் என்பது சாதிய அமைப்புகளுக்குத்தான் என்பதும் வெளிப்படையாகியிருக்கிறது. அரசியல் கட்சிகள் கூட அந்தச் சாதியமைப்புகளின் மேல் அமைந்திருக்கும் மேற்கட்டுமானங்கள் தான்.
இனிமேலாவது பசப்பல்கள் இல்லாமல் இதைப்பற்றி பேசுவது அறிவுலகுக்கு நல்லது.
இந்தத் தருணத்தில் புலியூர் முருகேசனுக்கு என் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மாதிரி தருணங்களில் அரசிடம் முறையிடுவதையே ஒரு குடிமகன் செய்யமுடியும். ஆனால் தமிழ் மாநிலத்தில் இன்று ஓர் அரசு இருப்பதாகவே தெரியவில்லை என்ற நிலையில் என்ன செய்வது?  jeyamohan.in

கருத்துகள் இல்லை: