செவ்வாய், 6 ஜனவரி, 2015

சங்கரராமன் கொலை வழக்கு: தீர்ப்பை எதிர்த்து களமிறங்கும் சமூக சேவகர்!


புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார் மேலாளர் சங்கரராமன். இந்த கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்ற இந்த வழக்கு புதுச்சேரி மாநிலத்துக்கு மாற்றப்பட்டு தலைமை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை அரசு மேல்முறையீடு செய்யவில்லை. இந்நிலையில், சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த சமூக சேவகர் வாராகி என்பவர் புதுவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு புதுவை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேல்முருகனிடம் தாக்கல் செய்யப்பட்டது. வாராகி அளித்துள்ள மனுவில், ''எனக்கு சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பின் சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் அளிக்க வேண்டும். டாக்டர் மன்மோகன் சிங், சுப்பிரமணிய சுவாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோரை விடுதலை செய்ததற்கு எதிராக எந்த குடிமகனும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கில் அரசு தரப்பு மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்த்து நான் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய விரும்புகிறேன். எனவே, வழக்கு தொடர்பான தீர்ப்பு நகல்கள் மற்றும் ஆவணங்களை எனக்கு அளிக்க வேண்டும்" என்று கூறி உள்ளார். அட்டர்னி ஜெனரல் கருத்து சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீடு செய்யத் தகுதியற்றது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார். சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் விஜயேந்திர சரஸ்வதி ஆகியோரை கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி புதுச்சேரி நீதிமன்றம் விடுவித்தது. அப்போது மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் அவகாசமிருந்தது. தொடக்கத்தில் மேல்முறையீடு செய்ய புதுச்சேரி அரசு ஆர்வமற்று இருந்தது. அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முன்னாள் துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அனுமதியளித்தார். இதுகுறித்து வீரேந்திர கட்டாரியா கூறும்போது தனக்கு இந்த வழக்கு பற்றி முழு விவரங்களும் சொல்லப்படவில்லை என்றார். இந்தப் பின்புலத்தில்தான் புதுச்சேரி அரசு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலமாக இந்த விஷயத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கோரியது. காஞ்சி சங்கராச்சாரியார்களை விடுவிப்பதற்கு விசாரணை நடத்தப்பட்ட விதம், சாட்சியங்கள் உருவாக்கப்பட்ட விதம் உள்ளிட்ட‌ 20 காரணங்களைப் பட்டிய லிட்டுள்ளது புதுச்சேரி நீதிமன்றம். மேலும் 189 சாட்சியங்களில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 83 பேர் பிறழ்சாட்சியங்கள் ஆயினர். எனவே இந்த வழக்கு மேல்முறையீடு செய்யத் தகுதியற்றது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சங்கரராமன் கொலை வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட உள்ளதால் வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: