திங்கள், 28 நவம்பர், 2011

லண்டன் ரங்கநாதன் தெருவில் இருந்து…


சென்னை ரங்கநாதன் தெரு வெறிச்சோடி கிடக்கும் இந்த நேரத்தில், லண்டனுக்கு அருகிலுள்ள ரங்கநாதன் தெருவை ஒருமுறை சற்றி வரலாம், வாருங்கள்!
லண்டனிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒரு சிறிய நகரம், நியூகாஸில். முழுப்பெயர் Newcastle Upon Tyne & Wear.  ஊரைச் சுற்றி ஆறு; ஆற்றின் மேல் அமைந்திருக்கும் நகரம் என்று பொருள். வருடத்தில் முக்கால் வாசி நேரம் குளு குளுதான். சூரியன் வருவதும் தெரியாதும், விலகுவதும் தெரியாது.
நகரத்தின் மையப்பகுதியை சிட்டி செண்டர் என்று அழைக்கிறார்கள். இங்குதான் நியூகாஸிலின் ரங்கநாதன் தெரு, Northumberland Street உள்ளது. குட்டி கடைகள் முதல் பெரிய கடைகள் வரை ஒரு சேர இங்கே அணிவகுத்து நிற்கின்றன. பேருந்து மற்றும் ரயில் மூலமாக இந்தத் தெருவை அடையலாம். பேருந்தில் வருபவர்கள் Pilgrim Street என்று கேட்டு இறங்க வேண்டும். ரயிலென்றால் Monument என்ற நிலையத்தில் இறங்கவேண்டும்.
நடைபாதையில் ஆக்கிரமிப்பு இல்லை. திடீரென்று சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டும் வழக்கம் இல்லை. மின்சார வெட்டில்லை. குளிரும் இளம் தூறலும் சர்வ சாதாரணம் என்றாலும் சாலைகளில் குட்டைகளோ குளங்களோ இல்லை. எறும்புக் கூட்டம் போல் மக்கள் வரிசை வரிசையாக குவிந்துகொண்டிருப்பார்கள். சனி, ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம்.
அனைத்து வயதினருக்கும், அனைத்து விருப்பங்களுக்கும் தீனிபோடும் இடம் இது. சாப்பாட்டுப் பிரியர்களுக்கு மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங், க்ரெக்ஸ் போன்ற ஜாம்பவான்களும், சுவையான சிற்றுண்டிகளும் கிடைக்கும். ஜவுளிக்கு ப்ரைமார்க், மார்க் & ஸ்பென்சர், பீகாக். வீட்டு உபயோகப் பொருள்களுக்கு க்லாஸ்ஹோல்ஸன், W.H ஸ்மித், பிசி கர்ரி வோல்ட், அர்கோஸ், ஃபென்விக், பூட்ஸ் மருந்தகம் என்று பல கடைகள். எல்டன் ஸ்கொயர் என்னும் மிகப்பிரிய வணிக வளாகம் இந்தத் தெருவுக்கு மிக அருகில் இருக்கிறது.

குழந்தைகளை யாரும் தோளில் தூக்கி வருவதில்லை. அதற்கென்றே இருக்கும் வண்டிகளில்தான் (ப்ராம் / ஸ்ட்ராலர்) அழைத்து வருகிறார்கள். என்றாலும், சாலைகள் அகலாமாக இருப்பதால், இடிபடாமல் வண்டிகளை உருட்டிக்கொண்டு செல்லலாம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகளுக்கும் நல்ல வசதி செய்து தரப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் இவர்களுக்கென்றே தனியாக லிஃப்ட் வசதி உள்ளது.
நம் ஊரைப்போல வீதிகளில் படம் வரைவது, நடனமாடுவது, வேடிக்கை பார்த்துவிட்டு காசு போடாமல் போவது ஆகிய நிகழ்ச்சிகள் வார இறுதியில் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு நாள், தெருமுனையில் அழகான மாடி பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தால் ஜாப் ஃபேர். இங்கும் வேலை தேடுவோர் கணிசமாக இருக்கிறார்கள் என்பது புரிந்தது.
நான் மிகவும் வியந்துப் பார்தத ஒரு கடை, Argos. ஏனெனில் இங்கு விற்பனையே மிக வித்தியாசமாகயிருக்கும். கடையில் நுழைந்தவுடன் அங்கிருக்கும் மானிட்டரின் அருகில் செல்லவேண்டும் (கடையின் அளவைப் பொறுத்து சில இடத்தில் 5 அல்லது 10 மானிடர்கள் இருக்கின்றன). தொடுதிரை மூலம் ஷாப்பிங் செய்யவேண்டும். என்னென்ன வாங்கலாம்? விலை என்ன? ஸ்டாக் இருக்கிறதா? இதே பொருள் வேறு எந்த கிளையிலுள்ளது? அனைத்துக்கும் ஒரு சில விநாடிகளில் பதில் கிடைத்துவிடுகிறது.  மானிடருக்கு அருகில் இருக்கும் பென்சில், பேப்பரை எடுத்து நமக்கு தேவையான பொருள்களின் விவரத்தை எழுதி எடுத்துக்கொண்டு (பென்சிலை அங்கேயே வைத்துவிட்டு) பணம் செலுத்தும் இயந்திரத்தில் விவரங்களைத் தட்டச்சு செய்யவேண்டும். கூட்டிப் பார்த்து எவ்வளவு என்று மெஷின் சொல்லும். செலுத்திவிட்டு, அது கொடுக்கும் ரசீதை வாங்கிக்கொள்ளவேண்டும். உங்கள் சரக்கு எந்த கவுண்டரில் கிடைக்கும் என்பதை அறிவிக்க ஒரு பெரிய எலெக்ட்ரிக் டிஸ்ப்ளே உள்ளது. ரசீதைக் காண்பித்து பையை வாங்கிக்கொண்டு கிளம்பலாம். மற்ற கடைகளைவிட இங்கு விலையும் கூட்டமும் ஓரளவு குறைவு.
சரவணா ஸ்டோர்ஸ் மாதிரியான ஒரு கடைதான் Primark. இங்கு அதிக அளவில் இந்தியர்களைப் பார்க்கலாம். வாங்குபவர்களாகவும் விற்பவர்களாவும் அவர்கள் இருக்கிறார்கள். மற்ற கடைகளைப் பார்க்கும்போது இங்கு துணி மணிகளின் விலை கணிசமாக குறைவு என்பதால் கூட்டம் அலைமோதும். இவ்வளவு குறைவாக தருகிறார்கள் என்றால் மட்டமான பொருளாகத்தான் இருக்கும் என்று சந்தேகிப்பவர்களும், அப்பப்பா இந்தக்கூட்டத்தோடு யார் மல்லுகட்டுவார்கள் என்று அஞ்சுபவர்களும் ஒதுங்கியே இருப்பார்கள். நான் பார்த்தவரை, ஆங்கிலேயர்கள் கணிசமான அளவில் இங்கு வருகிறார்கள். எனில், அங்கலாய்த்து ஒதுங்குபவர்கள் யார் என்று பார்த்தால், அட இந்தியர்கள்!
இன்னொரு ஆச்சரியம், இங்கு அடுக்குமாடி கட்டடங்கள் எதுவும் கிடையாது என்பது. பெரும்பாலும் தரைத்தளம். மிஞ்சி மிஞ்சிப் போனால், முதல் தளம். அவ்வளவுதான். ஆனால், ஒவ்வொரு கட்டடமும் பரந்து விரிந்து பிரமாண்டமாகப் பயமுறுத்தும். குறிப்பாக, தரைத்தளம் பெண்களுக்கான பிரிவாக இருக்கும். முதல் தளத்தில் ஆண்களுக்கும் குழந்தைகளுக்குமான பண்டங்கள் அணிவகுக்கும்.
துணிக்கடை இயங்கும் விதமும் அலாதியானது. கடையின் முகப்பில், நூற்றுக்கணக்கான பெரிய பைகள் அடுக்கப்பட்டிருக்கும்.  உள்ளே நுழையும்போதே அவரவர் தேவைக்கேற்ப பைகளை எடுத்துக்கொண்டு, பிடித்த துணிகளை அள்ள ஆரம்பிக்கலாம். பிறகு,  உடை சரியாகப் பொருந்துகிறதா என்பதை டிரைலர் ரூமில் சோதித்துக்கொள்ளலாம்.  இங்கு அழகான பெண்மணி ஒருவர் நின்றுகொண்டிருப்பார் (ஆண்கள் பகுதியிலும்). வரிசையில்தான் செல்ல வேண்டும்; அவரிடம் சென்று, மொத்தம் எத்தனை துணிகளைப் பரிசோதிக்கவேண்டும் என்பதைச் சொல்லவேண்டும். உடனே ஒரு அட்டையை எடுத்து இயந்திரத்தில் செருகி, நாம் குறிப்பிடும் எண்ணை அழுத்திக்கொடுப்பார்கள்.  டிரைலர் ரூமில் உடையைப் போட்டுப் பார்த்துவிட்டு, திரும்ப வரும்போது அந்த அட்டையையும், தேர்ந்தெடுக்காத உடைகளையும் அவரிடம் கொடுத்துவிட வேண்டும்.  மிச்சத்தை எடுததுக்கொண்டு நேராக பில்லிங் பகுதிக்கு செல்லவேண்டும். அங்கு மறுபடியும் வரிசை. காத்திருந்து பணம் கட்டிவிட்டு நடையைக் கட்டிவிடலாம். பிடிக்காத, ஒத்துவராத உடைகளை இரண்டு வாரங்களுக்குள் ரசீதுகொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.
பொதுவாக ஆங்கிலேயர்கள் சரியான நேரத்தில் கடையைத் திறக்கிறார்கள், மூடுகிறார்கள். வார நாட்களில் இந்தத் தெருவில் இரவு ஏழு மணிக்கு மேல் கூட்டமிருக்காது. வெறிச்சோடியிருக்கும். வாரயிறுதியில் அதிக நேரம் திறந்துவைத்திருப்பார்கள் என்று நினைத்தால் தவறு. ஒரு சனிக்கிழமை 5 மணிக்குச் சென்று பார்த்து, ஏமாந்து வீடு திரும்பினோம். பிறகுதான் தெரிந்தது. மாலை 4 மணிக்கு மேல் ஒரு கடைகூட இங்கே திறந்திருக்காது.
ப்ரைமார்க்குக்கு எதிரிலேயே, போட்டியாளரான Mark & Spencer அமைந்துள்ளது. ஒருவகையில் இக்கடை எல்லா வணிகர்களுக்குமே போட்டிதான். ஏனெனில் இங்கு துணிகள் மட்டுமின்றி ஏராளமான தின்பண்டங்களும் கிடைக்கும். நொறுக்குத்தீனி பிரியர்களுக்கு ஒரு பிரிவு. கேக், பஃப், ரொட்டி என்று ஒரு பேக்கரி பிரிவு. காய்கறிகளுக்கும் கனிகளுக்கும் ஒரு பிரிவு. வீட்டு மளிகைக்கு ஒரு பிரிவு. பூனை, நாய் உணவுகள் ஒரு பக்கம். பூங்கொத்துகளுக்கும் நாளிதழ்களுக்கும் ஒரு பிரிவு. இப்படிப் பல பிரிவுகள் அமைந்துள்ளன. காலை கடை திறந்தவுடன் உள்ளே நுழைந்தால் வேண்டியதை வாங்கிவிட்டு, சாப்பிட்டுவிட்டு, இன்னபிற விஷயங்களையும் முடித்துவிட்டு சாவகாசமாக வீடு திரும்பலாம். இக்கடைக்கு மொத்தம் மூன்று வித நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சாலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். முதலில் சென்றபோது நான் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்.
ஒரு நாள் ப்ரைமார்க்கில் ஷாப்பிங் முடித்துக்கொண்டு Burger King சென்றோம். சைவம் சாப்பிடுபவர்களுக்கென்றே இப்பொழுது எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு ஐட்டமிருக்கிறது. மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து, நான்கைந்து முறை கேட்டுவிட்டு, வெஜ் மீல் டீல் ஆர்டர் செய்தோம். இதில் வெஜ் பர்கர், பிரெஞ்ச் ஃப்ரை, ஜஹாங்கீர் க்ளாஸில் கோக், பெப்ஸி அல்லது ஸ்ப்ரைட் இருக்கும். விலை 3.99 பவுண்ட்ஸ். இதை நம் ஊர் பணத்துக்கு மாற்ற முயன்றால் தலைச்சுற்றல் வரும் என்பதால் விட்டுவிடுங்கள். இங்கு ஐம்பது பேர் அமர்ந்து சாப்பிடலாம். இருபது பேர் நின்றுகொண்டு கொரிக்கலாம். சாப்பிட்டு முடித்து, குப்பைகளைக் கொட்டிவிட்டு, ப்ளாஸ்டிக் தட்டை அதற்குரிய இடத்தில் சேர்க்கவேண்டும். மேஜைகளை மட்டும் அவர்களே துடைத்துக்கொள்கிறார்கள்.
புத்தகப் பிரியர்களுக்கு, W H Smith நல்ல இடம். இங்கு ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே கிடைக்கின்றன. புத்தக ஆர்வம் இல்லாதவர்களும் இங்கே நுழைவார்கள். காரணம், கடைகளில் வெப்பமூட்டப்பட்டிருக்கும். நானும்கூட குளிரில இருந்து தப்புவதற்காகவே இங்கே சென்றேன். புத்தகங்களுக்கு இணையாக மாத, நாளிதழ்கள் கொட்டிக்கிடக்கின்றன. குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக முதல் தளம். பொடிசுகள் முதல் டீனேஜ் வரை ரகவாரியாக புத்தகங்கள் அடுக்குகள். வாழ்த்து அட்டைகளும் ஏராளம் குவிந்திருக்கிறது. பல வண்ணங்களில், அழகான குறுஞ்செய்திகளுடன்.  ஸ்டேஷனரி, சாக்லெட், பிஸ்கட், குளிர் பானம் ஆகியவையும் கிடைக்கின்றன. வெறும் கை வீசிக்கொண்டு வந்தால் ஒருமாதிரியாகப் பார்ப்பார்களோ என்று நினைத்து, சாக்லெட்டும் பெப்ஸியும் வாங்கிக்கொண்டு நகர்ந்தேன்.
அநேகமாக ஒவ்வொரு வாரமும் இங்கு சென்றுகொண்டிருக்கிறேன். சென்ற வாரம் சென்றபோது, வண்ண விளக்குகளும், மயக்கும் அலங்காரங்களும் கண்களைக் கொள்ளை கொண்டன.  இன்னும் நேரமிருக்கிறது என்றாலும் எல்லோரும் தயாராகிவிட்டார்கள். Merry Christmas!
0
R. விஜய்

கருத்துகள் இல்லை: