புதன், 27 ஏப்ரல், 2011

சாய்பாபாவுக்கு பிரதமர், சோனியா அஞ்சலி: இன்று காலை 9.30க்கு பாபா உடல் அடக்கம்

புட்டபர்த்தி: பகவான் சாய்பாபாவின் உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் புட்டபர்த்தியில் நேற்று அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 9,30 மணிக்கு பாபாவின் உடல், பிரசாந்தி நிலையத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

சாய்பாபா, கடந்த 24ம் தேதி காலை புட்டபர்த்தியில் உள்ள மருத்துவமனையில் ஸித்தியடைந்தார். புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை தரிசிக்க பொதுமக்கள் நேற்று நள்ளிரவு வரை அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை 6 மணி வரை மட்டுமே பொதுமக்கள், பாபா உடலை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், தரிசன நேரம் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர், தனி விமானம் மூலம் புட்டபர்த்திக்கு நேற்று வந்தனர். ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர், பிரதமரையும், சோனியாவையும் வரவேற்று பிரசாந்தி நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பிரதமரும், சோனியாவும், பாபாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷே, இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்கா, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், சுவாமி நித்யானந்தா, இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட பலரும் பாபாவுக்கு நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 9.30க்கு பாபா உடல் அடக்கம்: பாபாவின் உடல் இன்று காலை 9.30 மணியளவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. மாநில அரசு, பாபாவுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்ய உள்ளது. பாபாவின் இறுதிச் சடங்குகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்றுள்ளனர். இறுதிச் சடங்கின் போது மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி, கவர்னர் நரசிம்மன், பா.ஜ., தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பாபாவின் உடல், அடக்கம் செய்யப்படும் நிகழ்ச்சியை பிரமாண்ட எல்.சி.டி.,"டிவி' மூலம் பக்தர்களுக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் கூடத்தில் ஒன்பது அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு, பாபா உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. 21 நாட்கள் முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு, பாபாவின் நினைவாலயம் இங்கு அமைக்கப்படும்.

மாண்டியாவில் மறுபிறப்பு: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர்ஜி, தற்போது ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது அமைப்பின் சார்பில் சத்தியோஜதா சுவாமிகள், சாய்பாபாவுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார். ரவிசங்கர்ஜி, ஜெர்மனியிலிருந்து விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடுகையில், "சாய்பாபா, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மறுபிறப்பு எடுப்பார். 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொதுவாழ்வில் அவர் ஈடுபடுவார்' என்றார்.

கருத்துகள் இல்லை: