புதன், 31 மார்ச், 2010

ஐ.ம.சு.மு 65% வாக்குகளால் வெற்றியீட்டும்; களனி பல்கலை கருத்துக்கணிப்பில் தகவல்

ஐ.ம.சு.மு 65% வாக்குகளால் வெற்றியீட்டும்; களனி பல்கலை கருத்துக்கணிப்பில் தகவல்
களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு, நாடளாவிய ரீதியில் நடத்திய கருத்துக்கணிப்பின் பிரகாரம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 65 வீத வாக்குகளையும் ஐக்கிய தேசிய முன்னணி 28 வீத வாக்குகளையும் பெறும் என அறிவிக்கப்படுகிறது.

கருத்துக்கணிப்பின் பிரகாரம் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு எந்தவித ஆசனங்களையும் பெறாது என களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு கலாநிதி ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, வடக்கு, கிழக்கு உட்பட சகல தேர்தல் தொகுதிகளிலும் நடத்திய சுயாதீனமான கருத்துக் கணிப்பில் பல்வேறு வயது மட்டங்களைச் சேர்ந்த 16 ஆயிரம் பேர் உட்படுத்தப்பட்டனர். நாடு முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினை வெற்றிபெறும் கட்சி எது என்பது உட்பட 12 கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நடத்திய கருத்துக்கணிப்பை விட இம்முறை தேர்தலில் மக்களின் ஆர்வம் குறைவாகக் காணப்பட்டது. நாடு முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் மக்கள் திருப்தி தெரிவித்தனர்.

நாம் நடத்திய கருத்துக் கணிப்பின் படி ஐ.ம.சு.முன்னணி 129 ஆசனங்களையும் ஐ.தே. முன்னணி 55 ஆசனங்களையும் வடக்கு, கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் 12 ஆசனங்களையும் பெறும். இதன்படி ஐ.ம.சு.முன்னணி 16 அல்லது 17 தேசியப் பட்டியல் ஆசனங்களை பெறலாம். இந்தக் கணிப்பு தேர்தல் தினமாகும் போது 1-5 வீதங்களினால் கூடிக் குறையலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாம் நடத்திய கணிப்பீடுகள் பெருமளவு ஒத்ததாக அமைந்தன.

இந்தப் பெறுபேறுகளின்படி ஐ.ம.சு. முன்னணி சுமார் 145 ஆசனங்களைப் பெற்று 2/3 பெரும்பான்மை பலத்திற்கு நெருக்கமான அதிகாரத்தை பெறும்.

ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறும் தேர்தல் முடிவுகளின் சரியான பிரதியாக இந்த முடிவு அமையாது. 95 வீதம் இதனை ஒத்ததாகவே முடிவு அமையும்.

கருத்துகள் இல்லை: