திங்கள், 15 ஏப்ரல், 2024

பாஜகவுக்கு 175-200 இடங்கள்தான்! ஜூன் முதல் வாரத்தில் கிடைக்கப் போவது ...

 Annamalai Arulmozhi  ; இந்தியாவுக்கு ஒரு நற்செய்தி!
400 இடங்கள் கிடைக்கும் என்று சொல்லுபவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் கிடைக்கப் போவது 175-200 இடங்கள்தான்!
பி.ஜே.பி.,க்குக் கிடைக்கப்போகிற தேர்தல் முடிவுபற்றிய கணிப்பை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘‘400-ன்னு சொல்றாங்க,
மே கடைசி வரை காத்திருக்க
அது 250 ஆகக் குறையும்.
ஜூன் முதல் வாரம் 175-200 ஆகும்.
நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழ விலையைச் சொன்னேன்.’’
- மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு.
- பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அரசின் பத்தாண்டுகால மக்கள் விரோத, ஜனநாயக ஒழிப்பு இந்திய அரசமைப்புச் சட்ட ஒழிப்பு ஆட்சி முடிவுக்கு வருவதுபற்றி இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வரும் செய்திகளும், நிலவரங்களும் கட்டியம் கூறுகின்றன!


அதற்குரிய காரணங்களை வைத்துத்தான் உண்மைகள் உலாவரும் எதார்த்த நிலைமையை நாம் விளக்கி வாக்காளப் பெருமக்களுக்குக் கூறவேண்டியது, அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சமூகநலத் தொண்டனின் இன்றியமையாக் கடமையாகும்.
மேலே மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ்.ஒய்.குரேஷி கூறுகிறார்!
தொலைக்காட்சிகள், பத்திரிகை சாம்ராஜ்யம்மூலம் திட்டமிட்ட பொய்மூட்டைகளைப் பரப்புகிறார்கள்
ஏனென்றால், 400, 370 என்றெல்லாம் கார்ப்பரேட் பெருமுதலாளிகள்மூலமாக நடத்தப்படும் தொலைக்காட்சிகள், பத்திரிகை சாம்ராஜ்யம்மூலம் திட்டமிட்ட பொய்மூட்டைகளைப் பரப்பி - அப்பாவி வாக்காளர்களை ஏமாற்ற நினைப்பது ஒருபோதும் நடவாது. அது வாக்காளர்களுக்கு மனோதத்துவ தாக்குதல்!
‘திராவிட மாடல்’போல சாதனை மாடல் அல்ல, பிரதமர் மோடி அரசு. அது ஒரு ‘விளம்பர மாடல்’ என்பதை நாடும், வாக்காளர்களும் உணர்ந்துள்ள நிலையில், முன்பு ஏமாந்த இணைய தள இளைஞர்களும் இப்போது ஏமாறத் தயாராக இல்லை!
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, அவரது ‘‘குஜராத் ஆட்சி பிம்பம்‘’, - திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மிக ‘பூதாகரமாக’ ஊதிப் பெருக்கி வாக்காளர்களை நம்ப வைத்தது!
தேசிய கூட்டணி (என்.டி.ஏ.) கட்சிகளும் சேர்ந்தன.
ஆனால், 2019 இல் இருந்ததைவிட 2024 இல் (அடுத்த அய்ந்தாண்டுக்குள்) சேர்ந்திருந்த கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டன!
நாடாளுமன்ற, சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை மிரட்டி...
தோற்றாலும் ஆளும் கட்சியில் பதவி, நாடாளுமன்ற, சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை மிரட்டி பா.ஜ.க.வில் கட்சித் தாவல்மூலம் ஆட்சி கவிழ்ப்பு, ஆட்சி அமைப்பு - ஆளுநர்கள் இதற்குத் துணை போகின்ற அரசமைப்புச் சட்ட விரோத நடத்தைமூலம் பா.ஜ.க. காவி ஆட்சிகளை அமைத்தன.
2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்குமுன் இதை மக்கள் நன்கு புரிந்து வருகின்றனர்.
உலக நாடுகளின் வன்மையான கண்டனங்களும் நாளும் வலுத்து வருகின்றன! கூட்டணிக் கட்சிகள் சுருங்கி விட்டன. முன்பு போலல்லாது - எதிர்க்கட்சிகள் இப்படி (இந்தியா கூட்டணிமூலம் ஒருங்கிணைத்து) ‘‘யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது’’ என்ற புரிந்துணர்வுடன் களமாடி ஓரணியில் திரண்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் 40 இடங்களைக்கூட பா.ஜ.க.வால் பெற முடியாது!
மிக அதிகமான 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் முன்பு போல, 80 இடங்களில் பாதிகூட பெற முடியாது என்பதை பா.ஜ.க.வே உள்வட்டாரத்தில் உணர்ந்துள்ளது.
முக்கிய எதிர்க்கட்சிகளான சமாஜ்வாடி, காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டு ஒன்றுபட்டு நிற்கும் நிலை அங்கே!
பீகாரிலும் அதேபோன்ற ஒருங்கிணைப்பு ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கூட்டில்லை.
மகாராட்டிரத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு பா.ஜ.க.வின் ஆட்சிக் கனவை கலைத்து, மோடியின் தூக்கத்தைக் குலைக்கும் நிலை!
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கெனவே மேகாலயா, நாகலாந்து போன்றவற்றில் பா.ஜ.க.வுக்கு போட்டியிட வேட்பாளர்களே கிடைக்காது, பின்வாங்கிக் கொண்ட நிலை! டில்லி, பஞ்சாப் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை; கோபம் உண்டு!
அரியானாவில் கூட்டு உடைந்து, பா.ஜ.க. தனித்து விடப்பட்டுள்ளது.
குஜராத்தில், ஒன்றிய அமைச்சரின் வாய்க்கொழுப்பால்...
எல்லாவற்றையும்விட, குஜராத்தில் ஜாதி ஆணவத்தோடு பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சர் - வேட்பாளர் போட்டியிடத் தயாராக இருந்த ரூபாலா என்பவர், வாய்க் கொழுப்புப் பேச்சு, பல மாநில ராஜ்புத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (பல மாநிலங்களிலும்) பகிரங்கமாக பா.ஜ.க.வை எதிர்க்க, வெளியே வந்து முழங்கும் நிலை.
பட்டிதார் சமூகத்திற்கும், ராஜ்புத்திர சமூகத்திற்கும் இவர்களே ஜாதி அடிப்படைப் பிரிவினையை இவர்களது பொறுப்பற்ற பேச்சால் உருவாக்கும் நிலை!
அதனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் குஜராத்தில் சமரசம் செய்ய மூன்று நாள்கள் முகாமிட்டு முட்டுக் கொடுக்க முனைந்துள்ளார்!
உட்கட்சிப் பிரச்சினைகள் மிக அதிகம்!
மகாராட்டிரம், நாக்பூர் பகுதிகளில் ‘ரோடு ஷோ’நடத்திட பிரதமர் மோடி போகமாட்டார்! அங்கே போட்டியிடும் மூத்த அமைச்சர் நிதின்கட்கரியின் ஆதரவாளர்கள் பிரதமர் மோடி படத்தையோ, பெயரையோ பயன்படுத்தவில்லை என்பதால், நிலைமை விபரீதமாக இருக்கிறது. (ஒரே கட்சிக்குள் அரசியல் மோதல்).
பா.ஜ.க. எதிர்ப்பு ஓட்டுகள்  சிதறுவதைத் தடுக்க...
பா.ஜ.க.வை, மோடி அரசை எதிர்க்கும் பல எதிர்க்கட்சிகள் - பா.ஜ.க. எதிர்ப்பு ஓட்டுகள் சிதறுவதைத் தடுக்க, ஒரு வேட்பாளரை நிறுத்தும் முடிவு செய்து தீவிரமாக உழைக்கும் தென்மாநிலங்கள் உலகறிந்த நிலை!
பா.ஜ.க.வுக்கு கதவு சாத்திடும் - தமிழ்நாடு என்ற இந்த சமூகநீதி மண்ணான பெரியார் மண் - ‘திராவிட மாடல்’ ஆட்சியின் புகழ் - அதன் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் உலகப் புகழ்பெற்ற தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியைப்பற்றி குறைகூற எத்தனை முறை மோடி படையெடுத்து - முகாமிட்டு ‘ரோடு ஷோக்களை’ நடத்தினாலும், ‘‘தாமரை, பாறையில் முளைக்காது’’ என்பது உலகறிந்த உண்மை!
மக்களின் மனோபாவத்தை அளந்த  ஓர் முக்கிய அறிவிப்பு!
எனவே, குரேஷியின் தேர்தல் கணக்கு மக்களின் மனோபாவத்தை அளந்த ஓர் முக்கிய அறிவிப்பு!
ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு அமையவிருக்கும் ஜனநாயகப் பாதுகாப்பு ஆட்சியை தி.மு.க. கூட்டணியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி ஆட்சியை மக்கள் அமைப்பது நிச்சயம்!
பா.ஜ.க. முன்பு பெற்ற 37 சதவிகித வாக்குகளைக் கூட எட்டிப் பார்ப்பது கேள்விக் குறி
முந்தைய பா.ஜ.க. ஆட்சியினர் 37 சதவிகித வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்தனர். இப்போது நாடு முழுவதும் 37 சதவிகித வாக்குகளைக் கூட எட்டிப் பார்ப்பது கேள்விக் குறியாகும்!
கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
10-4-2024 சென்னை

கருத்துகள் இல்லை: