திங்கள், 18 டிசம்பர், 2023

மாமியாரை துன்புறுத்திய மருமகள் கைது .. கேரளாவில் ... வைரலாக பிரபலமான வீடியோ

May be an image of 1 person

மலையோரம் செய்திகள்  :   சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்ட காணொளி ஒன்றில் தென்பட்ட மாமியாரை கீழே தள்ளி விட்டு தாக்கிய மருமகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பு.
கேரள மாநிலத்தில் 80 வயதான மாமியாரை ஆசிரியையான மருமகள் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், இருக்கையில் அமர்ந்திருக்கும் மாமியாரை எழுந்து போகச் சொல்லி திட்டிய மருமகள், ஒருகட்டத்தில் மாமியாரை கட்டிலில் இருந்து கீழே தள்ளிவிடுகிறார்.
அதை அவரின் கணவர் வீடியோ எடுத்துள்ளார். கீழே விழுந்துகிடந்த மூதாட்டி தன்னை தூக்கிவிடும்படி கேட்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இதுகுறித்து 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கொல்லம் மாவட்ட போலீஸ் எஸ்.பி-க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தியதில் தாக்குதலுக்குள்ளான மூதாட்டி கொல்லம் மாவட்டம் தேவலக்கரையைச் சேர்ந்த ஏலியாம்மா வர்க்கீஸ்(80) என தெரியவந்தது. அவரை தாக்கிய மருமகள் மஞ்சுமோள் தாமஸ் என்பவர், இரண்டு எம்.ஏ பட்டம் பெற்றிருப்பதாகவும், சவறா பகுதியில் தனியார் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. தெக்கும்பாகம் போலீஸ் அவரை கைது செய்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “மூதாட்டி ஏலியம்மா வர்க்கீசுக்கு ஜெய்ஸ் என்ற மகன் உள்ளார். ஜெய்ஸின் மனைவிதான் மஞ்சுமோள் தாமஸ். ஆறரை ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மருமகள் தாக்கத் தொடங்கி உள்ளார். வீட்டில் சுத்தமாக இருக்கவில்லை எனக்கூறி தாக்குவது வழக்கம். தன்னை தாக்குவதை தட்டிக்கேட்கும் மகனையும் மருமகள் தாக்கியதாக ஏலியம்மா வர்க்கீஸ் தெரிவித்துள்ளார். இப்போது வெளியான வீடியோ ஓராண்டுக்கு முன்பு நடந்த தாக்குதல் என தெரியவந்துள்ளது.

சமீபத்தில் அவரை மருமகள் முகத்தில் கைகளால் இடித்ததுடன், ஷூ காலால் மாமியாரின் கைகளை மிதித்து, கம்பியால் அடித்துள்ளார். அடிபட்டு கீழே விழும் ஏலியம்மா வர்க்கீஸை காலால் மிதித்துள்ளார் மருமகள். வார்டு உறுப்பினர் உதவியுடன் ஏலியம்மா வர்க்கீஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மஞ்சுமோள் தாமஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.
தொடர்ந்து மஞ்சுமோள் தாமஸை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது குழந்தைகளை பராமரிப்பதற்காக ஜாமீன் வேண்டும் என மஞ்சுமோள் தாமஸ் கூறியுள்ளார். ஆனால், அவரை 14 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் திருவனந்தபுரம் அட்டகுளங்கரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மஞ்சுமோள் தாமஸின் இரண்டு குழந்தைகளும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மஞ்சுமோளின் கணவர் ஜெய்ஸ் ஆன்லைன் மெடிக்கல் ஃபீல்டில் பணிபுரிந்து வருகிறார். ஜெய்ஸ்-க்கும், மஞ்சு மோளும் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டவர்கள். மூதாட்டியை தாக்கியதை அவரது உறவினர் ஒருவர் வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கேரளா சமூகநலத்துறை அமைச்சர் பிந்து கூறுகையில், “முதியோர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஏலியம்மாளுக்கு தகுந்த பாதுகாப்பும், தேவையான சட்ட உதவியும் செய்துகொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளேன்” என்றார். இதற்கிடையே மஞ்சுமோளை ஆசிரியர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது பள்ளி நிர்வாகம்.

கருத்துகள் இல்லை: