வெள்ளி, 22 டிசம்பர், 2023

அந்த பெண்களின் சதை இன்னமும் போலீஸாரின் பல் இடுக்கில் இருக்கும்.. வீரப்பன் ஆவணப்படம் அதிர வைக்குது!

tamil.filmibeat.com - Mari S :சென்னை: ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள கூச முனிசாமி வீரப்பன் ஆவணப்படத்தில் நக்கீரன் கோபால் பேசிய அந்த வசனத்தை நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
சின்ன பொண்ணை துரத்திக் கொண்டு ஒரு கர்நாடக போலீஸ் அம்மணமா ஓடுறான். அத்தனை வீடுகள் இருக்கு, ஊர் மக்கள் உள்ளனர். யாருமே நம்மை எதுவுமே செய்ய முடியாத என அதிகாரத்திமிர் அவனுக்கு எவ்ளோ இருக்கும் எனக் கேட்டுள்ளார்.
போலீஸ்காரர்கள் கொடுத்த சித்ரவதைகள் போதாது என மகனை வைத்து அம்மாவையும், அப்பாவை வைத்து மகளையும் வன்புணர்வு செய்ய வைத்த கொடுமைகள் எல்லாம் வொர்க்‌ஷாப் பெயரில் நடந்துள்ளதாக அந்த டாக்குமென்ட்ரி சீரிஸில் காட்ட காட்ட ஈரக்குலையே நடுங்குவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Veerappan: Nakkeeran Gopal says still some flesh struck in Special Force Task Police teeth

ஹிட்லரை விட மோசம்: இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ஹிட்லர் படையினர் தான் இப்படி இரக்கமே இல்லாமல் பெண்களையும் சிறுமிகளையும் வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர். காஷ்மீரிலும், ஈழத்திலும் இதே போன்ற அட்டூழியங்களை ராணுவத்தினர் செய்துள்ளனர். ஆனால், அதிரடிப் படையினர் என்கிற பெயரில் போலீஸார் எப்படி இவ்வளவு மோசமான காரியங்களை மனசாட்சியே இல்லாமல் செஞ்சாங்கன்னு தான் தெரியல என நக்கீரன் கோபால் கொந்தளித்துள்ளார்.

சிறுநீர் நாற்றம்: ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் நிர்வாணப்படுத்தி ஒரு வாரத்துக்கு மேல் கட்டிப் போட்டு அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அவர்கள் சிறுநீர் கழிக்கவும், மலம் கழிக்கவும் கூட தனியாக அனுமதிக்காத நிலையில், அங்கேயே அவர்கள் அத்தனையும் செய்து அந்த இடமே ஒரே நாற்றம் எடுத்து இருந்ததாக அந்த டாக்குமென்ட்ரியில் பேசியுள்ளனர்.

பற்களில் பெண்களின் சதை: உச்சகட்டமாக நக்கீரன் கோபால் கர்நாடக போலீஸாரும் தமிழ்நாடு போலீஸாரும் எந்தளவுக்கு கொடுமையை வீரப்பன் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் கொடுத்தார்கள் என சொல்ல வரும் போது, இன்னமும் சிலரது பற்களில் அந்த ஊர் பெண்களின் சதை இருக்கும் என வெடித்துச் சிதறி உள்ளார்.

தண்டனைக்கு பதில் பரிசு: 108 கோடி ரூபாய் மதிப்பில் ஜெயலலிதா வீரப்பனை கொன்றவர்களுக்கு விழா நடத்தி பரிசுகளை வழங்கினார். ஆனால், அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதாசிவம் விசாரணை கமிஷன் வைத்தும் அதில் கொடுக்க வேண்டும் என சொல்லப்பட்ட எந்தவொரு நிதியுதவியும் வழங்கவில்லை. கொடூரமாக மக்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு மெடல், வீடு, சம்பள உயர்வு என கொடுத்தார்கள் என்றும் நக்கீரன் கோபால் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் அதிமுகவினருக்கு எதிராக பிரச்சார பொருளாகவே இந்த டாக்குமென்ட்ரி தொடர் தற்போது மாறியிருக்கிறது. முதல் சீசனே இப்படி இருக்கு அடுத்த சீசன் எப்படி இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: