திங்கள், 18 டிசம்பர், 2023

இன்று ஒரே நாளில் 78 எம்பிக்கள் சஸ்பெண்ட்! .. இந்தியா நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில்

tamil.oneindia.com - Vigneshkumar : டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று ஒரே நாளில் 78க்கும் மேற்பட்ட எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே நாளில் இத்தனை எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நுழைந்த சிலர் புகை வரும் குப்பிகளை வீசி ரகளை செய்தனர். அதேபோல இன்னும் சிலர் நாடாளுமன்றத்திற்கு வெளியே ரகளை செய்தனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டானது.
Amid Protests Over Breach 31 Opposition MPs Suspended From Lok Sabha
நாடாளுமன்றத்தில் நடந்த மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இது பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். அவர்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

சஸ்பெண்ட்: இதற்கிடையே இப்போது நாடாளுமன்றம் நடந்து வரும் நிலையில், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். அவர்கள் அமைதி காக்கச் சபாநாயகர் பல முறை சொல்லிய போதிலும், அவர்கள் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதையடுத்து 33 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் லோக்சபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய குளிர்கால கூட்டத்தொடர் முழுக்க அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் கடந்த வாரம் 13 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இப்போது மேலும் 35 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

லோக்சபாவில் 33 பேர்: திமுகவில் இருந்து ஆ ராசா, தயாநிதி மாறன், கணேசன் செல்வம், சி.என். அண்ணாதுரை, தமிழச்சி தங்கபாண்டியன், பழனிமாணிக்கம், எஸ் ராமலிங்கம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், திரிணாமுல் எம்.பி.க்கள் கல்யாண் பானர்ஜி, ககோலி கோஷ் தஸ்திதார், சவுகதா ரே மற்றும் சதாப்தி ராய் என லோக்சபாவில் இருந்து மட்டும் 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ராஜ்யசபாவில் 45 பேர்: அதேபோல நாடாளுமன்ற நடவடிக்கைகளைச் சீர்குலைத்தாக கூறி ராஜ்யசபாவிலும் 45 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் கே.சி.வேணுகோபால் என மொத்தம் 45 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களில் 34 பேர் எஞ்சிய குளிர்கால கூட்டத்தொடர் முழுக்க இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 எம்.பி.க்கள் சிறப்புரிமைக் குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இன்று ஒரே நாளில் லோக்சபாவில் 33 எம்பிக்கள், ராஜ்யசபாவில் 45 எம்பிக்கள் என மொத்தம் 78 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே நாளில் இத்தனை எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்..

பதவிநீக்கம் தொடர்பாக ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் பேசும் போது, "அனைத்து எம்.பி.க்களும் சபையில் விதிகளின்படி நடந்து கொள்ள வேண்டும். விதிகளுக்குப் புறம்பாகத் தயவு செய்து நடந்து கொள்ளாதீர்கள், இந்த சபையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்" என்று மட்டும் தெரிவித்தார்.

மொத்தம் 92 பேர் சஸ்பெண்ட்: கடந்த வாரம் இதே விவகாரத்தில் லோக்சபாவில் இருந்து 13 எம்பிக்களும் ராஜ்யசபாவில் இருந்து ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 92ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Protests Over Breach Opposition MPs Suspended: Opposition MPs Suspended latest

கருத்துகள் இல்லை: