புதன், 22 நவம்பர், 2023

ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர்”: குட்டு வைத்த உச்சநீதிமன்றம்

 கலைஞர் செய்திகள் -  KL Reshma  :  * 2017-இல் கோவா, மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றாலும் பா.ஜ.க.ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஆளுநர்கள் உதவி செய்தனர்.
* 2020-இல் மத்தியப் பிரதேசம், 2022 இல் மகாராஷ்டிரம் என ஆளுநர்கள் உதவியுடன், அதிகார பலத்துடன் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல்கள்தான் இந்தியாவின் பலமாகும். வாக்காளர்களின் மனநிலை, உணர்வு தேர்தலில் வெளிப்படுகிறது. ஆனால் ஆளுநர்களின் செயல்பாட்டால் தேர்தலின் நோக்கமே அடிபட்டுப் போகிறது.
* சில ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டக் கொள்கைகளை மீறி குற்றம் புரிகின்றனர். தொங்கு சட்டமன்றத்தில் முதல்வரை நியமனம் செய்வது முக்கியமானப் பிரச்சினையாகும். அவர்களுக்கு ஜனநாயக அடிப்படைகள், மக்களின் தீர்ப்பு பற்றி எல்லாம் அக்கறையில்லை. ஏறத்தாழ, அனைத்து ஆளுநர்களுமே பதற்றமும், மிகை உணர்ச்சி கொண்டவர்களாகவும், அரசியல் சார்புடன் செயல்படு பவர்களாகவும் இருக்கின்றனர்.

* கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் போன்றவர்கள் தங்களது சொந்த அரசுகளுக்கே சவால் விடும் வகையில் செயல்பட்டனர். ஜெகதீப் தன்கர், தலைமைச் செயலாளரையும், காவல்துறை தலைவரையும் ஆளுநர் மாளிகைக்கு கட்டளையிட்டு வரவழைத்தார்.

* பல்கலைக் கழக வேந்தர் நியமனம் குறித்த சட்டத்தை திருத்தம் செய்ய கேரள மாநில அரசு விரும்பும் போது ஆளுநர் ஆரீப், பல்வேறு பல்கலைக் கழக வேந்தர்களை பதவி நீக்கம் செய்கிறார். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை ஆளுநர்கள் உருவாக்கினார்கள். உருவாக்கிக் கொண்டும் வருகிறார்கள்.

ஆளுநர்களின் நடத்தைகள் குறித்து உச்சநீதிமன்றம் பலமுறை கொட்டியும் இருக்கிறது. குட்டியும் இருக்கிறது. திட்டியும் இருக்கிறது. ஆனால் இவர்கள் திருந்துவதாக இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலையில் மாநில அமைச்சரவை எடுத்த முடிவை ஏற்காமல் ஆளுநர் காலதாமதம் செய்ததை உச்சநீதிமன்றம் கண்டித்து அவர்களை நீதிமன்றமே விடுதலை செய்ததைப் பார்த்தோம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு - ஒரே தீர்ப்பை வழங்கியது.

The reference of the recommendation of the Tamil Nadu Cabinet by the Governor to the President of India two and a half years after such recommendation had been made is without any constitutional backing and is inimical to the scheme of our Constitution, whereby "the Governor is but a shorthand expression for the State Government' as observed by this Court'.

- '' கவர்னர் என்பது மாநில அரசின் சுருக்கெழுத்து மட்டுமே'' என்று முன்பொரு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சொன்னதையே பேரறிவாளன் வழக்கிலும் நீதிபதிகள் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை: