ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

திமுக மா சே நந்தகுமார் எம்.எல்.ஏ. உல்லாச கப்பலில் இலங்கைக்கு சுற்றுலா

minnambalam.com  - Aara : ஒவ்வொரு வருடமும் திமுக தலைமைக் கழகம் நடத்தும் முப்பெரும் விழா பற்றிய அறிவிப்பு இன்று (செப்டம்பர் 2) அறிவாலயத்தில் இருந்து வெளியாகியிருக்கிறது.
அதன்படி இந்த முறை வேலூரில் செப்டம்பர் 17 ஆம் தேதி  முப்பெரும் விழா நடக்க இருக்கிறது. திமுகவில் தலைமைக் கழகம் நடத்தும் ஒரே விழாவான முப்பெரும் விழாவுக்காக வேலூர் திமுக எவ்வாறு தயாராகிறது என்பதற்காக வேலூர் திமுக நிர்வாகிகள் சிலரைத் தொடர்புகொண்டோம்.
சிலரது எண்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தன. சிலரிடம் பேசியபோது,
“வேலூர்  மாவட்டச் செயலாளரான நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்டத்திலுள்ள திமுக நிர்வாகிகளை சொகுசுக் கப்பலில் இலங்கைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். அவர் வந்தபிறகுதான் முப்பெரும் விழா ஏற்பாடுகள் சூடுபிடிக்கும்” என்றனர்.


என்னது, இலங்கைக்கு திமுக நிர்வாகிகள் சொகுசு சுற்றுலாவா என்று நாம் மேலும் விசாரிக்கத் தொடங்கினோம். நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள்,
“வேலூர்  மாவட்ட செயலாளர் நந்தகுமார் கடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் தனது மாவட்டத்துக்கு உட்பட்ட நிர்வாகிகளை துபாய்க்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். அவ்வப்போது இதுபோல நிர்வாகிகளை சுற்றுலா அழைத்துச் சென்று குளிர்விப்பது அவருக்கு வழக்கம்.

அதேபோல இப்போது கடந்த 29 ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பலில் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். ஐந்தாறு நாட்கள் சுற்றுலா முடித்துவிட்டு மீண்டும் செப்டம்பர் முதல்வாரம் சென்னை திரும்புகிறார்கள்.
ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் மற்றும் தனக்கு நெருக்கமான நிர்வாகிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார் நந்தகுமார். இதில் என்ன விசேஷம் என்றால்… நந்தகுமார் தனது அக்மார்க் ஆதரவாளர்களை மட்டுமே இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆட்கள், கார்த்தி எம்.எல்.ஏ.வின் ஆட்கள், எம்பி கதிர் ஆனந்தின் ஆட்கள், குடியாத்தம் எம்.எல்.ஏ.அமுலுவின் ஆட்களை எல்லாம் இந்த டூரில்  கூட்டிச் செல்லவில்லை என்று திமுக நிர்வாகிகளுக்குள்ளேயே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.


வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அணைக்கட்டு பாபு, வேலூர் மாநகர துணை மேயர் சுனில்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமார்த்தாண்டன், குடியாத்தம் நகராட்சி சேர்மன் சவுந்தரராஜன் ஆகியோர் இலங்கைக்கு சொகுசு சுற்றுலா சென்றவர்களில் சிலர். திமுக இளைஞரணி அமைப்பாளர் தேர்வின்போது பொதுச் செயலாளர் துரைமுருகன் சிபாரிசை எதிர்த்து தனது ஆதரவாளரான ராஜமார்த்தண்டனை இளைஞரணி அமைப்பாளர் ஆக்கினார் நந்தகுமார் என்பது இங்கே நினைவுபடுத்த வேண்டிய விஷயம். இலங்கையில் தனது ஆதரவாளர்களிடம் சில முக்கியமான விஷயங்கள் பற்றி  ஆலோசனையும் நடத்தியிருக்கிறார் நந்தகுமார். அதில் குறிப்பாக  வேலூர் தொகுதியின் அடுத்த எம்பி வேட்பாளர் யார் என்பது உள்ளிட்ட விஷயங்களும் உண்டு” என்கின்றனர் நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள்.

சொகுசுக் கப்பலிலும், இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் முகப்பு உள்ளிட்ட இடங்களிலும் போட்டோ எடுத்து அதை வேலூரில் இருக்கும் தங்களது ஆதரவாளர்களுக்கு நிர்வாகிகள் அனுப்பி வைக்க… இங்கே அவற்றை வயிற்றெரிச்சலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்  சுற்றுலா வாய்ப்பு கிடைக்காத நிர்வாகிகள்.

சமீபத்தில் மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி ராமநாதபுரத்தில் நடந்த பாகப் பொறுப்பாளர்கள் மாநாட்டுக்கு முன்பு… தனது மாவட்டத்திலுள்ள அனைத்து பாகப் பொறுப்பாளர்களையும் குற்றாலத்துக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்று அமர்க்களப்படுத்தினார். இதையே தென் மாவட்டம் முதல் சென்னை வரை திமுக மாசெக்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் குற்றாலம் என்ன இலங்கைக்கே சுற்றுலா அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி திமுக நிர்வாகிகளை  சொகுசுக் கப்பலில் ஏற்றியிருக்கிறார் வேலூர்  மாசெவும் எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார். வேலூரைப் பற்றி அறிந்து மற்ற மாவட்ட திமுக நிர்வாகிகளும், தங்களது மாவட்டச் செயலாளர்களிடம் வெளிநாட்டு டூர் டிமாண்ட் வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அரசியல் கட்சியினர் ஊரு விட்டு ஊர் போயி பாத்திருக்கோம். நாடு விட்டு நாடு டூர்னா திமுகவில் நந்தகுமார் வேற லெவல்தான்!
–ஆரா

கருத்துகள் இல்லை: