ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

நாங்குநேரி தங்கையுடன் வெட்டுப்பட்ட மாணவர்.. இப்போது எப்படி இருக்கு? களநிலவரம் இதுதான்

tamil.oneindia.com  - Nantha Kumar R ; திருநெல்வேலி: நாங்குநேரியில் சாதி பாகுபாட்டால் தங்கையுடன் சேர்த்து 12ம் வகுப்பு மாணவனை மாணவர் கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.
இந்நிலையில் தான் நாங்குநேரியில் மக்கள் பீதியில் உள்ளதும், அங்கு நிலவும் தற்போதைய நிலை என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது ‛டாக் ஆப்தி டவுன்' ஆக மாறி இருப்பது நாங்குநேரி தான். திருநெல்வேலி மாவட்டத்தில் நாகர்கோவில் செல்லும் வழியில் நாங்குநேரி அமைந்துள்ளது.
வழக்கம்போல் கடந்த 9ம் தேதி காலை நேர சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை நாங்குநேரி அமைதிப்பூங்காவாக தான் இருந்தது.
மக்கள் அனைவரும் தங்களின் பணிகளுக்கும் சென்று வந்தனர்.

மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு வழக்கம்போல் சென்று வந்தனர்.
ஆனால் கடந்த 9 ம் தேதி இரவில் தான் நாங்குநேரியில் நெஞ்சை பதைபதைக்கும் சம்பவம் அரங்கேறியது.
அதாவது நாங்குநேரி பெருந்தெருவில் உள்ள அம்பிகா என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த சிறுவர்கள் சிலர் அங்கிருந்த அவரது மகன் சின்னத்துரையை (வயது 17) அரிவாளால் சரமாரியாக வெட்டினர். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டுகள் விழுந்தன. உடலில் இருந்து சொட்டிய ரத்தம் வீட்டு தரையில் வழிந்தோடியது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சின்னத்துரையின் தங்கையான 14 வயது சந்திரா செல்வி ‛‛அண்ணா'' என வேகமாக ஓடி சின்னத்துரையை மீட்க முயன்றார். அப்போது அந்த கும்பல் அவரையும் இரக்கமின்றி வெட்டியது. அவரது உடலில் இருந்தும் ரத்தம் சொட்டியது. இதை பார்த்த உறவினர் கிருஷ்ணன் ஓடிவந்து சிறுவர்களை பிடிக்க முயன்றபோது அவரை தள்ளிவிட்டு அந்த கும்பல் ஓடியது.

இதில் மாரடைப்பில் கிருஷ்ணன் உயிரிழக்கவே, ரத்தத்தில் துடிதுடித்த சின்னத்துரை மற்றும் சந்திரா செல்வி ஆகியோர் மீட்கப்பட்டு அருகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் தான் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது வள்ளியூரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சின்னத்துரை 12ம் வகுப்பு படித்து வருவதும், சில மாணவர்கள் அவரை சாதி ரிதீயாக துன்புறுத்தி வந்ததும் தெரியவந்தது. அதாவது பட்டியலினத்தை சேர்ந்தவர் (தலித்) எனக்கூறி அவரை மிரட்டி கடைகளுக்கு அனுப்பி சாப்பாடு உள்ளிட்ட பொருட்களை வாங்க வைத்ததும் தெரியவந்தது.

இத்தகைய தொடர் தொல்லையால் மனம் உடைந்த சின்னத்துரை மனஉளைச்சலுக்கு ஆளாகி பள்ளி செல்வதை நிறுத்தினார். தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சென்னைக்கு வேலைக்கு செல்வதாகவும் அவர் குமுறியுள்ளார். இத்தகைய சூழலில் பள்ளி நிர்வாகம் தலையீட்டால் மீண்டும் அவர் பள்ளிக்கு சென்றார். சின்னத்துரையை துன்புறுத்தியவர்களை பள்ளி நிர்வாகம் கண்டித்த நிலையில் அந்த மாணவர்கள் தான் சின்னத்துரையையும், அவரது தங்கை சந்திரா செல்வியையும் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் நாங்குநேரி என்ற ஊர் தமிழ்நாடு முழுவதும் பேசும் பொருளாகி உள்ளது. பேனா பிடித்து எழுத வேண்டிய கைகளில் அரிவாள் பிடித்து சாதிய பாகுபாட்டால் தன்னுடன் படிக்கும் மாணவரையும், அவரது தங்கையையும் பள்ளி மாணவர்கள் வெட்டிய சம்பவம் உண்மையிலேயே தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என அனைவரும் இந்த சம்பவத்துக்கு வருத்தத்துடன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான் தங்கையுடன் மாணவர் சின்னத்துரை வெட்டுப்பட்ட நிலையில் நாங்குநேரி எப்படி உள்ளது? என்பது பற்றிய களநிலவரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாங்குநேரியில் பாதிக்கப்பட்டவர்கள் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். அங்கு மொத்தம் 50 வீடுகளில் தலித் மக்கள் வசிக்கின்றனர். நாங்குநேரியை பொறுத்தமட்டில் சின்னத்துரையையும், அவரது தங்கையையும் வெட்டிய சமுதாயத்தினர் தான் பெரும்பான்மையாக உள்ளனர்.

உண்மையில் தற்போது நடந்த இந்த சம்பவம் என்பது தலித் மக்களின் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சிகிச்சை பெற்று மருத்துவமனையில் பெருந்தெருவின் பெரியவர்கள் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க மீடியாக்கள் பெருந்தெரு மற்றும் அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் பேட்டி எடுக்க தயாராக உள்ளனர். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கூற மீடியாக்கள் கோருகின்றன. ஆனால் யாரும் பேட்டி கொடுக்க தயாராக இல்லை.

எங்கே மீடியாக்களிடம் பேசினால் தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் பிரச்சனை வருமோ, தங்களின் குழந்தைகளும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் நிலையில் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என ஒருவித அச்ச உணர்வில் அவர்கள் உள்ளனர். மேலும் சம்பவம் நடந்ததில் இருந்து பெருந்தெரு மக்கள் மிகவும் அமைதியாக உள்ளனர். அதாவது எந்தவித போராட்டமும் இன்றி இயல்பு வாழ்க்கையை வாழ்கின்றனர். சம்பவம் நடந்த மறுநாளில் இருந்தே இந்த அமைதி நிலவி வருகிறது.

மாணவருக்கு அரிவாள் வெட்டு பரபரப்புக்கு இடையே நாங்குநேரியில் மற்றொரு பகீர்! பெட்ரோல் குண்டு வீச்சுமாணவருக்கு அரிவாள் வெட்டு பரபரப்புக்கு இடையே நாங்குநேரியில் மற்றொரு பகீர்! பெட்ரோல் குண்டு வீச்சு

இன்னும் சொல்லப்போனால் சம்பவம் நடந்த பரபரப்பு என்பது அந்த ஊரில் கொஞ்சமும் இல்லை. எனினும் சம்பவத்தின் கோர தாக்குதல் குறித்த பயம் என்பது மக்கள் மத்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அரசு மக்களின் அச்ச உணர்வை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக பார்வையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

English summary
The incident in Nanguneri where a class 12 student along with his younger sister was beheaded by a gang of students due to caste discrimination has shocked the entire Tamil Nadu. In this case, people are in panic in Nanguneri, what is the current

கருத்துகள் இல்லை: