வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

வவுனியாவில் அதிக வெப்பம் பதிவு ! யாழில் வெப்பத்தினால் முதியவர் உயிரிழப்பு

வீரகேசரி : கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக வெப்பமான வானிலை வவுனியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
இதன்படி, வவுனியா மாவட்டத்தில் 37.7 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறைந்த வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 12.6 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அதிகளவான மழைவீழ்ச்சி மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
இதன்படி, மொனராகலை மாவட்டத்தில் 63.7 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் 50 மீல்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

யாழில் நிலவும் அதிக வெப்பத்தினால் முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக  ஒருவர் வியாழக்கிழமை (10) உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நபரை வீட்டார் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அதிக வெப்பம் காரணமாக குருதி ஓட்ட குறைவினால் மரணம் சம்பவித்துள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: