சனி, 8 ஜூலை, 2023

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடிப் பெண்களுக்கு உதவும் உயிர்த் தொகை..” : முதலமைச்சர் நெகிழ்ச்சி !

 கலைஞர் செய்திகள் -  Prem Kumar : கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது ஒரு கோடிப் பெண்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் உயிர்த் தொகை ஆகும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “தமிழ்நாடு வரலாற்றிலும் இவ்வளவு பெரிய திட்டம் இது வரை உருவாக்கப்பட்டது இல்லை என்று சொல்லத் தக்க வகையிலான மாபெரும் திட்டத்தை தொடங்கி நடத்துவதற்கான முதல் கட்டக் கூட்டத்தில் நாம் அனைவரும் பங்கெடுத்துள்ளோம்.
தலைமுறை தலைமுறைக்கு பயனளிக்கப் போகிற மகத்தான மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டத்தை வகுப்பதற்காக நாம் கூடியிருக்கிறோம். எல்லார்க்கும் எல்லாம் என்ற நோக்கத்துடன் செயல்படும் திராவிட மாடல் கோட்பாட்டின் அடிப்படையிலான இந்த அரசு செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களுக்கும் ஒரு பொது நோக்கு உண்டு. அதுதான் சமூக நீதியாகும்.



நீதிக்கட்சி காலம் தொடங்கி இன்று வரை சமூகநீதியானது தமிழ்நாட்டை வழிநடத்தும் கோட்பாடாக உள்ளது. இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட அரசினையும், அதன்மூலம் பல புதுமையான, புரட்சிகரமான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி, ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்குவதில் நீண்ட நெடிய வரலாற்றினை கொண்டமாநிலம் தமிழ்நாடு . சமூக அநீதிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தது தான் சமூகநீதியாகும்.

சாதிய ஏற்றத் தாழ்வு கொண்ட ரத்த பேதமும் - ஆண் பெண் வேறுபாட்டை விதைக்கும் பால் பேதமும் - இந்தியாவின் சமூக வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகளாக காலம் காலமாக இருந்து வந்துள்ளது. வரலாற்றின் முந்தையப் பக்கங்களில் பதிவான பிற்போக்கு சிந்தனைகளால், செயல்களால் தமிழ்ச் சமுதாயம் பெரிதளவு பாதிப்புக்குள்ளாகி இருந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

இந்த பாதிப்பு சாதியரீதியான, மதரீதியான வேறுபாட்டை மட்டுமல்ல, சமூகத்தின் சரிபங்காகத் திகழும் மகளிரின் வாழ்க்கைத்தரத்தையும், அடையாளத்தையும், சுயமரியாதையையும் எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளாக்கி இருந்தது என்பதை நான் இங்கு அதிகமாக விளக்கத் தேவையில்லை. தொடக்க காலத்திலிருந்தே தாய்வழிச் சமூக முறைதான், மனிதகுலத்தை வழிநடத்திவந்திருக்கிறது.

உழவுக் கருவிகளைக் கண்டுபிடித்து, வேளாண்சமூகமாக மாறிய போதுகூட, பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே அமைந்திருந்தது. ஆனால், காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கல்வியறிவு மறுக்கப்பட்டது.

பெண்குலத்தின் உழைப்புநிராகரிக்கப்பட்டது. பூட்டிய இரும்புக் கூட்டின் கதவினைத் திறந்து, பெண் அடிமைத்தனத்தைத்தகர்த்து, அவர்களுக்கான சமூக, பொருளாதாரச்சுதந்திரத்தை மீட்க எத்தனையோ சமூகச்சீர்திருத்தவாதிகள் பணியாற்றினார்கள். 'மேட்டுக்குடியைச் சேர்ந்த ஒருவன், ஏழையை அடித்தால் நான் ஏழையின் பக்கம் நிற்பேன்.

ஏழை ஒருவன் தனது வீட்டில் தனது மனைவியை அடித்தால் அவன் மனைவி பக்கமாக நிற்பேன். யார் பக்கம் நிற்கிறேன் என்பதே எனது நிலைப்பாடு" என்று சொன்ன தந்தை பெரியார் - இந்த நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையை விதைத்தார். அதனை அரசின் திட்டங்களாக பேரறிஞர் அண்ணாவும், தமிழினத் தலைவர் கலைஞரும் திட்டங்களாகச் செயல்படுத்திக் கொடுத்தார்கள். குறிப்பாக,முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில், பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

* பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வேண்டும் என்று 1929-ஆம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை 1989-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமாக்கினார். இதுதான் பெண்ணினத்திற்கு திராவிட இயக்கம் வழங்கிய மாபெரும் அதிகாரக் கொடை. இதுதான் ‘திராவிட மாடல்’!

* தலைவர் கலைஞர் அவர்களுடையஆட்சிக்காலத்தில் 1973-ஆம் ஆண்டு ஆண்கள் மட்டுமே பங்கெடுத்து வந்த காவல் துறையில், பெண்களுக்கும் பணிப்பொறுப்புகள் வழங்கப்பட்டன.

* பெண்களுக்கு அனைத்து அரசுப் பணிகளிலும் 30 சதவீத இடஒதுக்கீடுவழங்கப்பட்டது.

* மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, உள்ளாட்சிஅமைப்புகளே அடிப்படையானது என்பதனை நன்குஉணர்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்,நாட்டிலேயே முதல்முறையாக உள்ளாட்சிஅமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீதஇடஒதுக்கீட்டினை வழங்கினார்கள்.

* ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கினார்.

* ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரிவரை இலவசக் கல்வியும் வழங்கியதும் அவரே!

* ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக, மகளிரை நியமித்ததும் திராவிட முன்னேற்றக் கழக அரசு தான்.

* அதோடு மட்டுமல்லாமல், டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு உதவித்திட்டம், மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண உதவித்திட்டம், டாக்டர் தருமாம்பாள் கைம்பெண் மறுமணத் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழைக் கைம்பெண்களின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டம் – என எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்த அரசு திராவிட முன்னேற்றக் கழக கலைஞரின் அரசு.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டங்களை எல்லாம், மகளிர் நலனையும், அவர்களது மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு செயல்படுத்திக் காட்டிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களது அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையிலும், அவரது நூற்றாண்டு விழாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்திலும், இந்த மகத்தான மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி, நமது அரசு இத்திட்டத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது பெயரைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறது என்பதை நான் இந்த நேரத்தில் அறிவிப்பதில் பெருமையடைகிறேன்.

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், நான் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லை என்பதுதான். அதுவரை 40 விழுக்காடாக இருந்த பெண் பயணிகளின் எண்ணிக்கை, இப்போது 61 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

இதன் மூலமாக, பெண்களுக்கான அன்றாடச் செலவு பெருமளவு குறைந்துள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்கள் – காய்கறி – பூ - மீன் எனச் சிறு வியாபாரங்களுக்குச் செல்லும் தாய்மார்கள் - கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள் - உற்றார் உறவினர்களைச் சந்திக்கச் செல்லும் பெண்கள் எல்லாம் - இந்தத் திட்டத்தால் இன்று பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி எண்ணற்ற திட்டங்களை மகளிருக்காக நாம் செயல்படுத்தி வந்தாலும், உலகளாவிய பாலினஇடைவெளி அறிக்கையில் (Global Gender Gap Report -2023), தரவரிசைப்படுத்தப்பட்ட 146 நாடுகளில், இந்தியா 127-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதும் மிகவும் கவலைக்குரிய

செய்தியாகும். இதற்கு முக்கியகாரணமாக பெண்களின் பொருளாதார நிலைமையும், கல்வி நிலையுமே உள்ளன. இந்த இரு காரணன்கங்களில் முன்னேற்றம் காணாமல் சமூகத்திலும், குடும்பங்களிலும் மகளிர் உரிய அங்கீகாரம் பெறஇயலாது. இதற்காகத்தான் நமது அரசு பெண்களின்உயர்கல்வியினை இடைவெளியின்றி தொடர்ந்து பயிலஉதவும் வகையில், உயர் கல்வியினை நிறைவு செய்யும்காலம் வரை, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும்“புதுமைப்பெண்” என்ற முன்னோடித் திட்டத்தைச்செயல்படுத்தி அதன்மூலம் மாதந்தோறும் ஏறக்குறையஇரண்டு இலட்சம் மாணவியர் பயனடைந்துவருகிறார்கள்.

இந்த வரிசையில் மகளிருக்கு மகுடம் சூட்டும் வகையில் மகளிர் உரிமைத் தொகையை மாதம் தோறும் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இல்லறப் பொறுப்புகளுடன் பணிகளுக்குச் சென்று, அதன்மூலம் தங்கள்குடும்பங்களின் உயர்வுக்கு உழைத்து வரும் மகளிரின்உழைப்பை முறையாக அங்கீகரிக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தோம்.

சொன்னதைச் செய்யத் தொடங்கிவிட்டதன் அடையாளம் தான் இந்தக் கூட்டம். கடந்தசட்டமன்ற கூட்டத்தொடரின் போது, “தமிழ்நாட்டில்மேற்கொள்ளப்பட்ட சமூகநீதித் திட்டங்களிலேயே ஒருமாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில்நிலைபெறவுள்ள, ஏறத்தாழ ஒருகோடி குடும்பத்தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும்வகையில் அமைந்திடும் மகளிர் உரிமைத் தொகை”என்ற திட்டத்தை அறிவித்தேன். மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் இந்தத் திட்டத்தின் மூலம்,

நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரேநாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய விளிம்பு நிலையில் வாழும் பெண்கள் என பல்வேறு வகையில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் பெண்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறவுள்ளார்கள்.

இந்தத் திட்டத்தை முறையாகசெயல்படுத்துவதற்காக கடந்த 2023-2024 – ஆம் ஆண்டுவரவு-செலவு அறிக்கையில் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாகஇன்றையதினம் இந்தத் திட்டத்தைச் சீரிய முறையில்செயல்படுத்திட வேண்டிய வழிமுறைகள் குறித்தும்ஒவ்வொரு துறைகளின் பங்களிப்பு குறித்தும், மாவட்டநிர்வாகத்தின் பொறுப்புகள் குறித்தும் உங்கள்அனைவருக்கும் இன்று தெளிவாகஎடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தலைமைச் செயலகத்தில் ஆற்றவேண்டிய பணிகளான அரசாணை வெளியிடுதல், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் என்றுஎடுத்துச்சொல்லப்பட்ட ஒவ்வொரு துறைகளுக்கானபங்களிப்பினையும் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிய முறையில்செயல்படுத்தப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இத்தகைய ஒரு மாபெரும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தினை வெற்றிகரமான ஒரு திட்டமாகச் செயல்படுத்திக் காட்டுவதில், மாவட்ட ஆட்சித் தலைவர்களாகிய உங்களின் பங்கு முக்கியமானது.

இந்தத் திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் நாளன்று தொடங்கப்படவுள்ளது. இன்னும் இரண்டு மாத காலமே உள்ளதால், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இதனை தங்களது தலையாய பணியாகக் கொண்டு, கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு, திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரையில், இத்திட்டத்திற்கென வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உரிய பயனாளிகளைக் கண்டறிவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் இத்திட்டத்தத்தின் பயன்களைப் பெற கிட்டத்தட்ட ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்களைப் பெற பொது விநியோகக் கடை தோறும் சிறப்பு முகாம்களை நீங்கள் நடத்திட வேண்டும்.

இம்முகாம்களில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், எந்த வொரு அசம்பாவித சம்பவமும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நீங்கள் செய்திட வேண்டும்.

சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களாகிய சாலையோரங்களில் குடியிருப்பபோர், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர ஆதரவற்றோர் இத்திட்டத்தில் பயன் அடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். அவர்களிடம்குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற தரவுகள் இல்லையென்றாலும் கூட, அவற்றைப் பெறுவதற்கு உரிய வழிவகை செய்து, இந்த மகளிர் உதவித் தொகை அவர்களுக்குக் கிடைப்பதற்கு உதவி புரிய வேண்டும்.

தலைமைச் செயலாளர் அவர்களது தலைமையில் மாநில அளவில் இத்திட்டத்தைக் கண்காணிக்கவும்,ஒருங்கிணைக்கவும் ஏற்படுத்தப்படவுள்ள மாநிலக் கண்காணிப்புக்குழு, தேவைப்படும் ஒருங்கிணைப்புப் பணிகளை செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மகத்தான திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள மகளிரின் சமூக பொருளாதார நிலைமை பெருமளவில் மேம்படும் என நான் உறுதியாக நம்புகிறேன். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களது வழியில் செயல்படும் நமது அரசு, மகளிர் வாழ்வில் என்றென்றும் ஒளியேற்றிடும் விளக்காக அமையும் என இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற சிறந்த, உன்னதமான, முன்னோடித் திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டை ஒன்றிய அளவில் மட்டுமல்ல - உலக அளவிலும் முதல் மாநிலமாக மாற்றிடுவோம் - அதற்காகநாம் அனைவரையும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம் .

எந்த திட்டமாக இருந்தாலும் அதனை அறிவிப்பது எளிது. செயல்படுத்துவது கடினம். முறையாகத் திட்டமிட்டால் செயல்படுத்துவதும் எளிதாக ஆகும். என்ன செய்கிறோம் என்பதற்கு இணையானது எப்படிச் செய்கிறோம் என்பது ஆகும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற உன்னதமான திட்டத்தை எந்த விதமான புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் தொடங்கி அலுவலர்கள் வரை அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது ஒரு கோடிப் பெண்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் உயிர்த் தொகை ஆகும். அதனை மனதில் வைத்து அனைவரும் அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்று கேட்டு விடை பெறுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: