வியாழன், 27 ஜூலை, 2023

ஆசையாக வளர்த்த தாத்தா - பாட்டி தலைகளை பணத்திற்காக வெட்டிய பேரன் கேரளாவில் கொடூரம்

tamil.samayam.com  : பாம்புக்கு பால் வார்த்திருக்கீங்களே! தாத்தா - பாட்டியின் தலையை வெட்டி விளையாடிய கொடூரப் பேரன்!
திருவனந்தபுரம்: தாய் - தந்தை விட்டுச் சென்ற நிலையில் 2 வயதில் இருந்து தன்னை வளர்த்த தாத்தா - பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரனை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்.kerala grand parents
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாயரங்காடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா (75). இவரது மனைவி ஜமீலா (64). இவர்களின் மகளான நிமிதாவுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், அவர்களின் திருமண வாழ்க்கை விரைவிலேயே கசந்ததால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வேறு வேறு திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டனர்.


இதனால் நிமிதாவின் 2 வயது மகனான அக்மல் அனாதையாக மாறினான். தந்தை - தாய் சரியில்லாததால் பேரனின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என கவலையடைந்த தாத்தா - பாட்டியான அப்துல்லா - ஜமீலா தம்பதியர் அக்மலை 2 வயதில் இருந்து தனது வீட்டில் வைத்து வளர்க்க ஆரம்பித்தனர்.

அதிக செல்லம்: தாய் - தந்தை இல்லாத பிள்ளை என்பதால் அக்மலுக்கு அவர்கள் அதிகம் செல்லும் கொடுத்து வளர்த்தனர். பெரிய அளவில் தனக்கு வருமானம் இல்லாத போதும், தனது சக்திக்கு மீறி பெரிய தனியார் பள்ளியில் அக்மலை படிக்க வைத்தார் அப்துல்லா. ஆனால், வளர வளர அக்மலின் குணம் மாற தொடங்கியது. பள்ளிப் பருவத்திலேயே சிகரெட், மது, கெட்ட சகவாசம் என பாதை மாறத் தொடங்கினான். அப்பொழுதே அக்கம்பக்கத்தினர் அவனை விடுதியில் சேர்த்து விடுமாறு கூறினர்.

போதைக்கு அடிமை: ஆனால் பேரனை தனியே விட அவர்களுக்கு மனது இல்லை. இதனிடையே, தீய நண்பர்களின் சகவாசம் அதிகமானதால் பாதியிலேயே கல்லூரியை விட்டு நின்றான் அக்மல். பின்னர், மது, சிகரெட்டை தாண்டி போதை ஊசி, ஹெராயின் போன்ற போதை பழக்கத்துக்கு அக்மல் அடிமையானான். 28 வயது ஆன போதும் எந்த வேலைக்கும் போகாமல் தினமும் போதைப்பொருட்கள் வாங்க பணம் தரக்கோரி தாத்தா - பாட்டியை அவன் மிரட்டி வந்தான்.

தாத்தா பாட்டி மீது தாக்குதல்: ஒருகட்டத்தில், அவனுக்கு பணம் தருவதை அவர்கள் நிறுத்தினர். இதனால் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் விற்று போதைப்பொருட்களை வாங்கி அக்மல் பயன்படுத்தி வந்தான். இந்நிலையில், வீட்டில் எந்தப் பொருட்களும் இல்லாததால் தாத்தா அப்துல்லாவிடம் கடந்த திங்கள்கிழமை பணம் கேட்டுள்ளான் அக்மல். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியிருக்கிறார் அக்மல். இதனால் ஆத்திரமடைந்த அக்மல், தாத்தா என்றும் பாராமல் அவரை மூர்க்கத்தனமாக தாக்க தொடங்கினான்.

தலையை துண்டித்த கொடூரம்:
அதை தடுக்க வந்த பாட்டி ஜமீலாவையும் அவன் தாக்கினான். ஒருகட்டத்தில், தாத்தா - பாட்டி இருவரும் எழுந்திருக்க முடியாமல் இருந்த நிலையில், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து அவர்களின் தலைகளை அப்படியே துண்டித்தான். பின்னர் அந்த தலைகளை வீட்டில் ஆங்காங்கே தூக்கி எறிந்து விளையாடிவிட்டு அங்கிருந்து தப்பியோடினான். இதையடுத்து, வீட்டுக்கு வந்த அப்துல்லா - ஜமீலா தம்பதியரின் மகன் தாய் தந்தை கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தப்பியோடிய அக்மலை போலீஸார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: