திங்கள், 24 ஜூலை, 2023

அதானி அம்பானிக்காக மணிப்பூரில் கலவரம்: திருமாவளவன்

 minnambalam.com - monisha  : அதானி, அம்பானி மணிப்பூரில் நிலம் வாங்கும் அளவிற்கு சட்டத்தை மாற்றியமைக்க அரசே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்களுக்கு நடைபெற்ற கொடுமைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்துள்ளது. அந்த வகையில், மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணிப்பூர் வன்முறையில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜூலை 24) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். இதில் 500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் முதல்வரை கைது செய்ய வேண்டும். தார்மீக பொறுப்பேற்று பிரதமர், உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன் ”ஆர்.எஸ்.எஸும் பாஜகவும் நுழைந்த ஊர் நல்லாவே இருக்காது. ஊரையே அழித்து விடுவார்கள். ஒற்றுமையை சிதைத்து விடுவார்கள். அப்படித்தான் தற்பொழுது மணிப்பூரில் செய்து இருக்கிறார்கள்.

மணிப்பூரில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக மாநிலத்தில் இருந்த இரண்டு பழங்குடியின சமூக மக்களை பிளவுபடுத்தி ஆட்சியை அமைத்திருக்கிறார்கள். அதானி, அம்பானி போன்றவர்கள் மணிப்பூர் சட்டத்தின்படி அந்த பகுதியில் நிலம் வாங்க இயலாது. அந்த சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்பதற்காக இந்த பழங்குடிகளுக்கு இடையே மோதலை அரசாங்கமே முன்னின்று நடத்தி இருக்கிறது. இது அரச பயங்கரவாதம்.

மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட போதும் நிர்வாணமாக அழைத்து வந்த பொழுதும் நமக்குத் தான் ஐயோ, பாவம் அந்த பெண் மனம் எப்படி இருந்ததோ என பெண்ணாகவே மாறி யோசிப்போம். ஆனால் அவர்கள் இதனை வேறு விதமாக சிந்திப்பார்கள்.

80 நாட்களுக்கு மேலாக மணிப்பூரில் வன்முறை நிகழ்வு இருக்கிறது. மாநில அரசு இதனைத் தடுத்து இருக்கலாம். ஆனால் அவர்கள் முன் நின்று நடத்துகிறார்கள். அமைதி திரும்பினால் அவர்களுக்கு ஆதாயம் இல்லை என்று மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

மணிப்பூரில் கலவரம் செய்து அதன் வழியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பலன்பெறும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன்.

நாங்கள் சிறிய கட்சிதான், மாநில கட்சி தான். ஆனால், கொள்கையில் இமாலயம் போல உறுதியானவர்கள், பெரியவர்கள். அம்பேத்கரின் மாணவனாக, பெரியார் பிள்ளையாக இதை சொல்வது எனது கடமை.
மணிப்பூரில் நிகழும் கலவரத்தை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் தமிழ்நாட்டிலும் இதே போல நிலைமை வரும்” என பேசினார்.

கருத்துகள் இல்லை: