சனி, 1 ஜூலை, 2023

திடீரென வெடித்த டயர்.. பற்றி எரிந்த பேருந்து 0 25 பேர் உடல் கருகி உயிரிழப்பு . மகாராஷ்டிரா

 கலைஞர் செய்திகள் - KL Reshma :  மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் அமைந்துள்ளது யவமத்மா. இங்கு இருந்து புனே நோக்கி பேருந்து ஒன்று சுமார் 33 பயணிகளுடன் நேற்று இரவு கிளம்பி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து சம்ருத்தி மகாமார்க் சாலையில் இன்று அதிகாலை நேரத்தில் சென்றது. அப்போது அந்த பேருந்து புல்தானா என்ற இடத்தில் வந்தபோது, திடீரென அதன் தடயர் யார் வெடித்தது.
இதனால் நிலைதடுமாறிய பேருந்து அருகில் சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி சாலையோரம் கவிழ்ந்தது.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கடும் காயமடைந்தனர். தொடர்ந்து அதில் இருந்து வெளியே வர முயன்றபோது, அந்த பேருந்தின் டீசல் டேங்கில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றிக்கொண்டது. இதனால் அந்த பேருந்து மளமளவென எரிய தொடங்கியது.

இதனால் பயணிகள் வெளியே வரமுடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதையடுத்து பேருந்து பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்புத்துறை, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், நீண்ட முயற்சிக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள்ளும் 25 பயணிகள் சடலமாக மீட்கப்பட்டு, அவர்களது உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு இறந்தவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதால், அனைத்தும் டி.என்.ஏ., பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை சுமார் 2 மணி அளவில், நடந்த இந்த கோர சம்பவமானது அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: