சனி, 17 ஜூன், 2023

இலங்கையில் ஆங்கிலமும் தேசிய மொழியாகிறது - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அறிவிப்பு

\

 தேசம் நெட்  :  முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கும் திருகோணமலை திரியாய் விகாரைக்கும் தொல்பொருள் தேவைகளுக்காக 5000 ஏக்கர் காணி உரிமை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் முறையான  ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கு 3000 ஏக்கர் நிலமும் திருகோணமலை திரியாய் விகாரைக்கு 2000 ஏக்கர் நிலமும் கோரப்பட்டுள்ளது.

வனவளத் திணைக்களம், காணி திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுக்குச் சொந்தமான பெருமளவிலான காணியை விஞ்ஞான ரீதியான காணி எனக் கூறுவதன் அடிப்படை என்ன என்பதை உடனடியாகக் கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் நிறுவப்பட்ட தொல்பொருள் செயலணியினால் இந்தப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தொல்பொருள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இந்தப் பகுதி ஒதுக்கப்பட வேண்டுமென செயலணி முடிவு செய்துள்ளது.

பௌத்த தலைநகராக கருதப்படும் அனுராதபுரம் மகா விகாரை அல்லது தனித்துவமான நாகரிகத்தின் பாரம்பரியமிக்க சிகிரியாவுக்குக் கூட இல்லாத காணிகளை குருந்தூர் மலை விகாரையும் திரியாய் விகாரையும் ஏன் கோருகின்றன என்பதை விஞ்ஞான தரவுகளுடனும் ஆதாரங்களுடனும் ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் குழுவைநியமித்துள்ளார்.

hirunews.lk  :  அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற 2018 - 2022ஆம் கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிகழ்வில் தேசிய பாடசாலைகளுக்கான ஆயிரத்து 729 நியமனங்களும் மேல் மாகாணத்திற்கான 626 நியமனங்களும் வழங்கப்பட்டன.
அதனையடுத்து, ஏனைய 8 மாகாணங்களுக்குமான நியமனங்களும் வழங்கப்பட்டதோடு மொத்தமாக இன்றைய தினத்தில் 7 ஆயிரத்து 342 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில், நாட்டிற்குள் 2050ஆம் ஆண்டிற்கு பொருத்தமான கல்வி முறையை உருவாக்குவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதற்கான முதன்மைக்காரணி மனித வளம் என வலியுறுத்திய ஜனாதிபதி, மனித வளத்தை தயார்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களை சார்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டிற்குள் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்திலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
 

கருத்துகள் இல்லை: