வியாழன், 26 மே, 2022

அடி தாங்க முடியல.. மனைவியிடம் இருந்து காப்பாத்துங்க: CCTV ஆதாரத்துடன் நீதிமன்றம் சென்ற காதல் கணவன்!

 கலைஞர் செய்திகள்  : ராஜஸ்தானில் மனைவி அடிப்பதாகப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் அஜித் சிங் யாதவ். பள்ளி தலைமையாசிரியரான இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவைச் சேர்ந்த சுமன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இதையடுத்து இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுள்ளது. ஆனால் சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டில் இருக்கும் போது கணவன் யாதவை, சுமன் அடித்து வந்துள்ளார்.


ஒரு கட்டத்தில் மனைவியின் அடியைத் தாங்கிக் கொள்ள முடியாத யாதவ் வீட்டில் சி.சி.டி.வி வைத்து ஆதாரங்களைத் திரட்டியுள்ளார். தொடர்ந்து மனைவி அடித்துக் கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த யாதவ் வீட்டில் இருந்த சி.சி.டி.வி ஆதாரத்துடன் மனைவி குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அஜித் சிங் யாதவுக்கு போலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த சம்பவம் குறித்து அஜித் சிங் யாதவ்," ஆசிரியர் பணியின் கண்ணியத்தால் மனைவியின் வன்முறையைச் சகித்துக் கொண்டேன்.

ஆனால் இப்போது எனது மனைவி எல்லைகளைத் தாண்டிவிட்டார். அதனால்தான் நான் நீதிமன்றம் நாடினேன். மனைவி சுமன் என்னை அடித்தாலும் நான் ஒரு முறைகூட அவரை எதிர்த்து அடித்ததில்லை. நான் ஒரு ஆசிரியர். ஒரு பெண் மீது ஆசிரியர் கையை உயர்த்தி அடித்தால் அது சட்டத்திற்கும், கலாச்சாரத்திற்கும் எதிரானது என்பதை உறுதியாக நம்புகிறவன் நான்" என தெரிவித்துள்ளார். மேலும் அஜித் சிங் யாதவை அவரது மனைவி தாக்கும் சி.சி.டி.வி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கருத்துகள் இல்லை: