ஞாயிறு, 22 மே, 2022

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க திமுகவுக்கு 72 மணி நேரம்தான் கெடு: அண்ணாமலை எச்சரிக்கை!

 கலைஞர் செய்திகள்  : திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல அடுத்த 72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கடந்த 6 மாதத்தில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு இரு முறை குறைத்துள்ளது. தற்போது பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ 8ம், டீசல் மீதான மத்திய கலால் வரி ரூ 6ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பை மாநில அரசும் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.


இதுதொடர்பாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளைப் பலமுறை உயர்த்தியபோதும், ஒருமுறை கூட மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. எந்தவொரு மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் கடுமையாக உயர்த்தியது.

தற்போது, வெறும் 50 சதவிகிதம் மட்டுமே வரியைக் குறைத்துவிட்டு மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது நியாயமே இல்லை” என்று கூறினார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பெட்ரோல் டீசல் விலை தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ”அரசியல் லாபத்துக்காக பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. நாங்கள் புதிதாக எதையும் வலியுறுத்தவில்லை. ஆனால் திமுக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று அறிவித்தது போல குறைக்க வேண்டும். அதுபோன்று சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும். 72 மணி நேரத்திற்குள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பாஜக கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்” என்றார்.

மேலும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய கருத்துக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, “ பிரதமர் மோடி அலுவலகத்தை விட்டு வெளியே வர வேண்டுமென்றால் கூட இவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் போல” என்று விமர்சித்தார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: