புதன், 25 மே, 2022

தமிழ்நாட்டின் 20 ஆயிரம் அரிசி பொதிகளும் 7500 கிலோ பால் மாவும் (நிவாரண உதவி) வடமாகாணத்திற்கு கிடைத்திருக்கிறது.

வீரகேசரி : தமிழ்நாடு அரசு இலங்கைக்கு வழங்கிய உதவித் திட்டத்தில் முதற்கட்டமாக  சுமார் 20 ஆயிரம் அரிசி பொதிகளும் 7500 கிலோ பால் மாவும் வடமாகாணத்திற்கு கிடைத்திருக்கிறது.
 இதனை முன்னுரிமை அடிப்படையில் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கவிருக்கின்றோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் (கலெக்டர்) கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பால்மாவைப் பொறுத்தவரையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
இதனை விட இந்திய அரசினால் மீனவர்கள் விடுத்த கோரிக்கைக்கிணங்க 15,000 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
அது மிக விரைவில் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு குறிப்பாக அனலைதீவு எழுவைதீவு நயினாதீவு நெடுந்தீவு பகுதி மீனவர்களுக்கும் மாத்திரம் பகிர்ந்தளிக்கப்படும்.
இது மீனவர் சங்கங்கள், கடற்றொழில் திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக பகிர்ந்தளிக்கப்படும்.சுமார் 705 மீனவர்கள் இந்த நன்மையைப் பெறவுள்ளனர், என அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: