சனி, 1 ஏப்ரல், 2017

காதலியை சுத்தியலால் அடித்து கொன்ற காதலன் தற்கொலை!

திருப்போரூர்: மாமல்லபுரம் சவுக்குத் தோப்பில் சுத்தியலால் இளம்பெண்ணை அடித்து கொலை செய்த காதலன், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் காணிக்கைதாஸ். இவரது மகன் ஜான் மாத்யூஸ் (22). இவர், தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார். சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகள் ஜெனிபர் (20). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பெண்கள் கல்லூரியில் 3-ம் ஆண்டு பிசிஏ படித்து வந்தார்.


பேருந்தில் செல்லும்போது ஜான் மாத்யூஸ், ஜெனிபர் இடையே ஏற்பட்ட நட்பு பிறகு காதலாக மாறியது. இந்நிலையில், சமீபத்தில் கல்லூரியில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் ஜெனிபருக்கு ₹15 ஆயிரம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. இதனால் நீயும் நல்ல வேலைக்கு சென்றால்தான் நம் திருமணத்தை பற்றி பெற்றோரிடம் கூற முடியும் என்று ஜெனிபர், காதலனிடம் கூறியுள்ளார். இதனால் ஜான் மாத்யூஸ் வேதனையடைந்தார். இந்நிலையில், நேற்று தனது பிறந்தநாளையொட்டி ஜெனிபர், புது ஆடை அணிந்து கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பற்றி பல இடத்தில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மாமல்லபுரம் புலிக்குகை அருகே சவுக்குத்தோப்பில் ஒரு பைக் அனாதையாக நின்றிருந்தது. அதன் அருகே ஒரு பெண் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் டிஎஸ்பி எட்வர்ட், இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் ஜெனிபரின் உறவினர்கள் சென்றனர். அங்கு இறந்துகிடந்தது ஜெனிபர் என்பது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தனர். உடல் அருகே பரிசு பார்சல், சுத்தியல் கிடந்தது.
இதையடுத்து, ஜெனிபருடன் வந்த ஜான் மாத்யூஸை அப்பகுதியில் போலீசார் தேடினர். ஜெனிபர் இறந்துகிடந்த இடத்தில்  இருந்து சுமார் 200 அடி தொலைவில் உள்ள ஒரு சவுக்கு மரத்தில், ஜெனிபரின் துப்பட்டாவில் தூக்கு மாட்டிய நிலையில் ஜான் மாத்யூஸ் இறந்துகிடந்தார்.

2 பேரின் பிணங்களையும் மாமல்லபுரம் போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குபிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி ஜெனிபரின் தந்தை இருதயராஜ் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை  கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் இருந்து கல்பாக்கம் வரை  அதிகளவு சவுக்கு மரங்கள் உள்ளன. இங்கு பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை மற்றும்  வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று  வருகின்றன. சென்னையில் இருந்து வரும் கள்ளக்காதல் ஜோடிகள், சவுக்குத்தோப்பில் காதல் லீலைகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்களை  அப்பகுதியை சேர்ந்த சமூகவிரோதிகள் மிரட்டி, வீட்டுக்கு தெரியாமல்  கள்ளக்காதலனுடன் ஓடிவரும் பெண்களை தங்களது இச்சைக்கு பயன்படுத்தி  கொள்கின்றனர். அதற்கு உடன்படாத பெண்களை தாக்கும் சம்பவங்களும்  அதிகளவில் நடைபெற்று வருகிறது.

போலீஸ் பற்றாக்குறைமாமல்லபுரம்  காவல் சரகத்தில் போலீசார் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இங்கு  சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து  விசாரிக்க போதிய போலீசார் பணியில் இல்லை. மேலும், மாமல்லபுரம் பகுதிக்கு  வரும் விவிஐபி.க்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது உபசரிப்பு பணிகளுக்கு  போலீசார் பயன்படுத்தப்படுவதால், மாமல்லபுரம் உள்ளிட்ட சவுக்கு தோப்பு  பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட முடியவில்லை.  இங்கு போலீசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள்  கூறுகின்றன.   தினகரன்

கருத்துகள் இல்லை: