வியாழன், 30 மார்ச், 2017

பன்னீர் மீது ஸ்டாலின் பாய்ச்சல் பின்னணி!

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சராம் அனல் பறக்கிறது. திமுக வேட்பாளர் மருது கணேஷ்க்கு வாக்கு கேட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கடந்த 28ஆம் தேதி ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் போட்டுப் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக-வின் கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்றன. கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஜெயலலிதா குறித்துப் பேசும்போது ‘அம்மையார் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் தாக்கிய செய்தி, அதன்பிறகு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு நடந்த சிகிச்சை, அதிலிருக்கும் மர்மங்களெல்லாம் பன்னீர்செல்வத்துக்கு தெரியுமா, தெரியாதா? கடைசி வரை முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தநேரத்தில், இரண்டாவது இடத்தில் நீங்கள்தானே அவரைப் பார்த்தது.
நீங்கள் சொன்னதுபோல சசிகலாவைப் பற்றி மீதமுள்ள 90 சதவிகித உண்மையை எங்கே வெளியிடப் போகிறீர்களோ இல்லையோ, ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில் வெளியிட்டாக வேண்டும். உங்களால் முடியுமா? உண்மையிலேயே, நீங்கள் ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தீர்கள் என்றால் அந்த ரகசியத்தை வெளியிட வேண்டும்’ என்று, பன்னீர்செல்வத்தை இறுக்கிப் பிடித்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் பேசிவந்தார். சசிகலா –பன்னீர்செல்வத்தின் மோதலின்போது சசிகலா, பன்னீர்செல்வத்தின் மீது வைத்த குற்றச்சாட்டு சட்டசபையில் பன்னீர்செல்வம் ஸ்டாலினைப் பார்த்து சிரித்தார் என்றார். அந்தளவுக்கு பன்னீரும் ஸ்டாலினும் நட்பாக இருந்தார்கள் என்ற பேச்சு எழுந்துவந்த நிலையில், ஆர்.கே.நகரில் 28இல் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலினின் பேச்சுகள் பெரும்பாலும் பன்னீர்செல்வம் மீது தாக்குதல்களாகவே இருந்தன. தவிர, பன்னீர் மீது பல்வேறு குற்றச்சாட்டு வைத்துப் பேசினார் ஸ்டாலின். ஏன் இந்த திடீர் தாக்குதல்கள் என்று திமுக தரப்பில் விசாரித்தோம்.’தொகுதி நிலவரம் எப்படியிருக்கிறது என்று தினசரி பல்ஸ் பார்த்து வருகிறார் ஸ்டாலின். இந்த தேர்தலை வைத்துத்தான் அடுத்து நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை கணக்குப் போட்டுப் பார்க்கிறார். இதனால் எப்படியாவது ஆர்.கே.நகரில் திமுக வெற்றி பெற வேண்டுமென்று திமுக வேலை செய்துவருகிறது. ஆர்.கே.நகரில் திமுக-வுக்கும் பன்னீர்செல்வத்தின் அணிக்கும்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது மக்களிடத்தில். ஆக, ஆர்.கே.நகரில் திமுக-வுக்கு போட்டியாக இருப்பது பன்னீர்செல்வத்தின் அணிதான் என்பதை ஸ்டாலின் நம்புகிறார். இப்போது களத்தில் இரண்டு அணிகளும்தான் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. தினகரனின் அணி மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது என்பதால் ஸ்டாலின் தரப்பு பன்னீர்செல்வத்தை கேள்விகளால் துளைக்கிறது’ என்றார்கள்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: