திங்கள், 27 மார்ச், 2017

பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'

முசாபர்நகர் : உ.பி.,யில், பசுக்களை கொன்றாலோ, அவமரியாதை செய்தாலோ, அவர்களின் கை, கால்களை உடைத்து விடுவதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத், சமீபத்தில் முதல்வராக பதவியேற்றார். இந்த மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம், மாநில அமைச்சர் சுரேஷ் ராணாவை பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது; அதில் பங்கேற்று பேசிய, பா.ஜ., - எம்.எல்.ஏ., விக்ரம் சைனி கூறியதாவது: பசுக்களை அனைவரும், தாயாக மதிக்க வேண்டும். பசுக்களை கொன்றாலோ, அவமரியாதை செய்தாலோ, அவர்களின் கை, கால்களை உடைப்பேன். 'வந்தே மாதரம்' எனச் சொல்ல தயங்குபவர்களையும், 'பாரத் மாதாவுக்கு ஜே' எனச் சொல்ல கஷ்டப்படுபவர்களையும், சும்மா விடமாட்டேன். அவர்களின் கை, கால்களையும் உடைப்பேன்.
தேர்தல் பிரசாரத்தின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தயாராக உள்ளோம். பசுக்களுக்கு எதிராக நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, எங்களிடம், இளைஞர்கள் குழு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். உ.பி.,யில், பசுக்களை கடத்த தடை விதிக்கப்படும் என்றும், சட்ட விரோத மாட்டிறைச்சி கூடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில், விக்ரம் சைனியின் மிரட்டல் பேச்சு, அந்த மாநிலத்தில் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தினமலர்

கருத்துகள் இல்லை: