ஞாயிறு, 4 அக்டோபர், 2015

விஷ்ணுப்ரியா: நான் அமையாகிறேன்... அந்த 2 பக்கங்கள் .அதிகாரிகளின் அதிர்ச்சி...

போலீஸ் உயரதிகாரிகளின் டார்ச்சரால் சிக்கித் தவித்த, பெண் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா, தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதத்தில், 'நான் அமைதியாகிறேன்' என குறிப்பிட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா, 27, கடந்த மாதம், 18ல், தன் முகாம் அலுவலக மாடி அறையில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், மதுரை வழக்கறிஞர் மாளவியா, கீழக்கரை பெண் டி.எஸ்.பி., மகேஸ்வரி உள்ளிட்ட பலரிடம் விசாரித்துள்ளனர். ஆனால், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.இந்நிலையில், விஷ்ணுபிரியா தற்கொலை செய்த நாளன்று, இரண்டு பக்க கடிதமும், அதற்கு முன், ஜூலை, 15ல், ஒன்பது பக்கம் என, மொத்தம், 11 பக்கத்தில் கடிதம் எழுதி இருந்ததாகவும், போலீசார் தெரிவித்தனர். அதில் இரண்டு பக்கத்தை மறைத்து, ரகசியம் காத்து வந்தனர். அந்த இரு பக்கங்களும் தற்போது வெளியாகி இருப்பது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பக்கங்களில், விஷ்ணுபிரியா, தன் வங்கி, 'ஏ.டி.எம்., பின் நம்பர், மொபைல் பாஸ்வேர்டு, லேப்டாப் பாஸ்வேர்டு' போன்றவற்றை எழுதியிருந்ததுடன், 'என் உடலை போஸ்ட்மார்டம் செய்ய வேண்டாம்; எதற்காகவும் உடம்பில் கத்தி படக்கூடாது; நான் அமைதியாகிறேன்' என, முடித்துள்ளார். இதனால், போலீஸ் உயரதிகாரிகளின், 'டார்ச்சர்' காரணமாக, மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. எனினும், அரசு மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய, விஷ்ணுபிரியாவின் கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை பொதுமக்கள் மத்தியில் கசியவிட்டு வருவது, காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரிடமும் விசாரித்து வருகின்றனர். - நமது நிருபர் குழு - தினமலர்.com


கருத்துகள் இல்லை: