வெள்ளி, 18 செப்டம்பர், 2015

பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடும் தீஸ்தா. மோடியின் சிம்ம சொப்பனம்!

தீஸ்தா சேதல்வாத்தேசத் துரோகி” என்று மோடி அரசால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளரான தீஸ்தா செதல்வாட், அவரைக் கைது செய்து சிறையிடத் துடிக்கும் மோடி கும்பலின் சதிகளிலிருந்து தற்காலிமாக மீண்டுள்ளார். மோடி அரசால் ‘தேசத்துரோகி’ எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் தீஸ்தா சேதல்வாத் தீஸ்தாவினுடைய சப்ரங் கம்யூனிகேஷன்ஸ், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் ஆகிய தன்னார்வ நிறுவனங்கள் 2004-லிருந்து 2006 வரையிலான காலத்தில் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் போர்டு பவுண்டேசனிடமிருந்து முறைகேடாக அந்நிய நிதியைப் பெற்றுள்ளதாகவும், அந்நிய நன்கொடை முறைப்படுத்துதல் சட்டத்திற்கு (FCRA) எதிராகச் செயல்பட்டதாகவும், கிரிமினல் சதிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி கடந்த ஜூலை 8 அன்று மோடி அரசின் கூண்டுக்கிளியான மையப் புலனாவுத்துறை தீஸ்தா மீது வழக்கு தொடுத்தது.
ஒப்பந்த அடிப்படையில் அயல்பணிகளுக்கான கட்டணமாகவே இந்த நன்கொடையைப் பெற்றுள்ளதாகவும், இதில் சட்டவிரோதமான எந்தத் தவறும் நடக்கவில்லை என்றும், இதன் கணக்கு விவரங்கள் முறைப்படி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தீஸ்தாவும் அவரது வழக்குரைஞர்களும் விளக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இருப்பினும், குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலேயே தீஸ்தாவைக் கைது செய்து, அவரது செயல்பாட்டை முடக்கத் துடித்தது மோடி அரசால் ஏவிவிடப்பட்ட சி.பி.ஐ.
கடந்த ஜூலை 14 அன்று தீஸ்தாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி, அந்நிய நன்கொடையைக் கொண்டு “ஜோதா அக்பர்’’, “பா” முதலான சினிமா பட சி-டிக்களை தீஸ்தா வாங்கியுள்ளதாகவும், முடி அலங்காரத்துக்கும், மூக்குக் கண்ணாடிக்கும் செலவிட்டுள்ளதாகவும், காது குடையும் தும்பு, நகவெட்டி, கொண்டை ஊசி வாங்கியுள்ளார் என்றெல்லாம் அற்ப விவகாரங்களை ஊதிப்பெருக்கி, ஏதோ நிதி மோசடியைக் கண்டுபிடித்துவிட்டதைப் போல அறிக்கை தயாரித்து அவரைக் கைது செய்ய சி.பி.ஐ. முயற்சித்தது. அது அம்பலப்பட்டுப் போனதால், தேசப் பாதுகாப்புக்கு தீஸ்தா அச்சுறுத்தலாக உள்ளார் என்றும், தீஸ்தாவின் சப்ரங் கம்யூனிகேஷன் என்ற தன்னார்வ அமைப்பானது மதவெறியைக் கிளறிவிடுவதாகவும், அந்நிய நிதியைக் கொண்டு இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் பொக்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய சி.பி.ஐ. துடித்தது.
இந்நிலையில் தீஸ்தா, தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். ஜூலை 24 அன்று சி.பி.ஐ. நீதிமன்றம் தீஸ்தாவின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தது. அதை எதிர்த்து தீஸ்தா மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட பின்னர், கடந்த ஆகஸ்டு 11 அன்று “தீஸ்தா இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானவர், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்” என்று வாதிட்ட சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டுகளை மறுத்து மும்பை உயர் நீதிமன்றம் தீஸ்தாவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இந்து வெறியாட்டத்துக்குத் துணையாக அரசு எந்திரத்தை ஏவிய மோடியின் உத்தரவுக்கு எதிராக நின்ற குற்றத்துக்காக, தற்போது மோடி அரசால் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள போலீசு உயரதிகாரி சஞ்சீவ் பட்.

2002-ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த பெஸ்ட் பேக்கரி இந்துவெறி கொலைவெறியாட்ட வழக்கில் முக்கிய சாட்சியான ஜாகிரா ஷேக் என்ற இளம்பெண்ணை மிரட்டி தீஸ்தாவுக்கு எதிராகப் புகார் கொடுக்க வைத்தது அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி கும்பல். அரசு அதிகார பலத்தோடு இந்துவெறி பாசிசம் கோலோச்சும் மாநிலத்தில், இதனைச் சட்ட ரீதியாக முறியடித்ததோடு, இந்துவெறி பயங்கரவாதக் குற்றவாளிகளுக்கு எதிரான தீர்ப்பையும் பெற்றுத் தந்தார் தீஸ்தா. இந்துவெறி பாசிச மோடி கும்பலுக்கு எதிராக நீதிமன்றத்தில் விடாப்பிடியான சட்டப் போராட்டத்தை நடத்துவதென்பது சாதாரண விசயமல்ல. குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத வெறியாட்டத்தை நடத்திய இந்துவெறியர்கள் 117 பேர் குற்றவாளிகள் என்று நீதித்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளதிலும், நரோடா பாட்டியா எனுமிடத்தில் நடந்த முஸ்லிம் படுகொலை வழக்கில் குஜராத்தின் அன்றைய மோடி ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 26 ஆண்டுகால சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதிலும் தீஸ்தாவின் பங்கும் அவரது கடும் உழைப்பும் முக்கியமானவை.

 2002 குஜராத் படுகொலைகளின் போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு வளாகத்தில் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த முன்னாள் காங்கிரசு எம்.பி. இஷான் ஜாப்ரியோடு பலரையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்தியவர்தான் தீஸ்தா செதல்வாட். அதனாலேயே குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் தீஸ்தாவும் அவரது கணவர் ஜாவீத் ஆனந்தும் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க நன்கொடை வசூலித்து கையாடல் செய்ததாகப் பொவழக்கு போட்டு அச்சுறுத்தியது மோடி கும்பல்.
கடந்த ஜூலை 27 அன்று இஷான் ஜாப்ரியின் துணைவியாரான ஜாகியா ஜாப்ரியின் மேல் முறையீடு வழக்கு விசாரணைக்கு வருவதால், அதில் சாட்சியங்களை முன்வைத்து தீஸ்தா வாதிட முடியாதபடி முடக்கவும், அச்சுறுத்திப் பணிய வைக்கவும் இப்போது புதியதொரு பொவழக்கைச் சோடித்து அவரைத் ‘தேசத்துரோகி’யாகச் சித்தரித்து கைது செய்து சிறையிட மோடி அரசு கீழ்த்தரமாக முயற்சித்தது. இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்குச் சட்டப்படி தண்டனை அளித்த குற்றத்துக்காக, மோடி ஆட்சியில் கொலை மிரட்டலுக்கு ஆளாகியுள்ள குஜராத்தின் சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோட்சனா யாக்னிக்.
தீஸ்தா மட்டுமல்ல, இந்துவெறி பாசிச மோடி கும்பலுக்கு எதிராக நிற்கும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு வருகின்றனர். குஜராத்தில் நடந்த சோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் அன்றைய மோடியின் குஜராத் அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியதில், உச்ச நீதிமன்றத்தின் நீதிமன்ற நண்பராகவும் முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞராகச் செயல்பட்டவருமான கோபால் சுப்பிரமணியத்தின் பங்கு முக்கியமானது. அவ்வழக்கில் குஜராத் அரசின் சட்டவிரோத நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டது. இதனாலேயே பிரதமராகியுள்ள மோடியின் அரசு கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு வன்மத்துடன் எதிர்ப்பு தெரிவித்தது.
குஜராத்தில் 2002-ல் கோத்ரா ரயில் தீ விபத்துக்குப் பிறகு நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளின் போது மாநில முதல்வராக இருந்த மோடி, “இந்துக்களின் கோபம் அடங்கும்வரை கண்டுகொள்ள வேண்டாம்” என்று உயர் போலீசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாவுக் குழுவிடம் அம்மாநில போலீசு உயரதிகாரியாகப் பணியாற்றிய சஞ்சீவ் பட் சாட்சியமளித்தார்.

ஆனால், அச்சிறப்புப் புலனாவுக் குழுவோ மோடிக்கு ஆதரவாகச் செயல்பட்டதால், தனது சாட்சியத்தை அவர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாகத் தாக்கல் செய்தார். அதனாலேயே 2011-ல் குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி அரசினால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பிரதமராகியுள்ள மோடியின் அரசால் இப்போது அவர் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு பழிவாங்கப்பட்டுளார்.
இதுமட்டுமல்ல, 2002-ல் குஜராத்தின் நரோடா பாட்டியாவில் நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பாபு பஜ்ராங்கி உள்ளிட்ட 32 பேருக்குத் தண்டனை அளித்த குஜராத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோட்சனா யாக்னிக் -க்கு மோடி ஆட்சியில் 22 முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அகமதாபாத் நகர கீழமை நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹிமான்ஷு திரிவேதி, மோடியின் இந்துத்துவத் திட்டங்களுக்கு உடன்பட மறுத்து 2003-ல் பதவி விலகினார். தற்போது நியூஜிலாந்தில் வசிக்கும் அவர், 2002 குஜராத் இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளுக்குப் பின்னர் குஜராத்தின் அன்றைய மோடி அரசு எங்களை முஸ்லிம்களுக்கு எதிராக நிற்க வேண்டுமென பலவழிகளிலும் அச்சுறுத்தியதாலேயே நான் பதவி விலகினேன் என்கிறார்.
தனது இந்துத்துவ – மறுகாலனியாதிக்கத் திட்டத்திற்கு எதிராக உள்ளவர்களை ஒடுக்குவதற்காக கீழ்த்தரமாக ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்கும் மோடி கும்பல், அதை வைத்து பொய்வழக்கு சோடித்து அச்சுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இப்படித்தான் அணுஉலைத் திட்ட எதிர்ப்பாளரும் சமூக அரசியல் விமர்சகருமான காலஞ்சென்ற பிரபுல் பித்வா, நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மேதா பட்கர் முதலானோரும் ‘இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரான அந்நிய சதிகாரர்’களாக மோடி அரசால் குற்றம் சாட்டப்பட்டனர். இன்டால்கோ மற்றும் எஸ்ஸார் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ம.பி.யில் பழங்குடி மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து வெளியேற்றுவதை அம்பலப்படுத்தி, இங்கிலாந்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்ற இலண்டனுக்குப் புறப்பட்ட கிரின்பீஸ் எனும் சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனத்தின் பிரச்சாரகரான பிரியா பிள்ளையை, இதனாலேயே தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவர் மீது பொய்வழக்கு போட்டு அவரை வெளிநாடுகளுக்குச் செல்லத் தடைவிதித்து முடக்கியது மோடி கும்பல்.
சி.பி.ஐ அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டம்.
தீஸ்தா மீது பொய்வழக்கு போடப்பட்டிருப்பதைக் கண்டித்து மும்பையிலுள்ள சி.பி.ஐ அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டம்.
இந்துத்துவ – மறுகாலனியாதிக்கத் திட்டத்திற்கு எதிராக நிற்பவர்கள், மோடியின் சதிகளுக்கு உடன்படாத பதவியிலுள்ள அதிகாரிகள், நீதிபதிகள்; குஜராத் இந்துவெறி படுகொலைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தும் மனித உரிமை அமைப்புகள்; சுரங்கங்கள், அணைக்கட்டுகள், அணு மின் திட்டங்கள், மரபணு மாற்றப் பயிர்கள் முதலான ‘வளர்ச்சி’த் திட்டங்களை எதிர்க்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்னார்வக் குழுவினர் முதலானோர் மோடியின் பார்வையில் தேசவிராத சக்திகளாவர்.
மறுபுறம், மோடி – அமித்ஷா குற்றக்கும்பல் ஆட்சிக்கு வந்ததும் இந்துவெறி பயங்கரவாதக் குற்றவாளிகள் எவ்வித எதிர்ப்புமில்லாமல் ஒவ்வொருவராக விடுதலையாவதும், சலுகைகளோடு அதிகாரத்தில் அமர்த்தப்படுவதும் வேகமாக அரங்கேறி வருகிறது. முன்னாள் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினரான இஷான் ஜாப்ரி இந்துவெறியர்களால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிரைம் பிரான்ச் கமிஷனரான ஏ.கே. சர்மா இன்று சி.பி.ஐ.யில் முக்கிய பொறுப்பில் மோடி அரசால் அமர்த்தப்பட்டுள்ளார். குஜராத் போலி மோதல் படுகொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்ட அரசு பயங்கரவாத போலீசு அதிகாரியான டி.ஜி. வன்சாராவும், நரோடா பாட்டியா வழக்கில் 26 ஆண்டுகால ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோத்னானியும் இப்போது நீதித்துறையால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மோடி ஆட்சியில் இந்துவெறி பாசிசம் புதிய பாய்ச்சலுடன் முன்னேறித் தாக்கி வருகிறது. மோடி கும்பலை அம்பலப்படுத்தி முடக்குவதற்கான வாய்ப்பாக இந்த விவகாரங்கள் உள்ள போதிலும், எதிர்க்கட்சிகள் போராடுவதில்லை. மதச் சார்பின்மை பேசும் கட்சிகள் இதற்கு எதிராக வாய் திறப்பதுமில்லை. பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடும் தீஸ்தா போன்றோர் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சட்டரீதியான போராட்டங்களுக்கான வாய்ப்புகள் மோடியின் ஆட்சியில் அருகிவிட்ட நிலையில், புரட்சிகர ஜனநாயக சக்திகளின் தலைமையில் அமைப்பு ரீதியிலான மக்கள்திரள் இயக்கங்களும் போராட்டங்களும் மட்டுமே இந்துவெறி பாசிச பயங்கரத்தை வீழ்த்துவதற்கான ஒரேவழியாக நம்முன்னே காத்திருக்கிறது.
– பாலன். வினவு.com
________________________________

கருத்துகள் இல்லை: