ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

கலிங்கம்பட்டியில் டாஸ்மாக் கடைகளை சூறையாடிய மக்கள்!! போலீஸார் தடியடி!தூத்துக்குடியிலும் ஆர்ப்பாட்டம்!

நெல்லை:
கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, அங்கிருந்த டாஸ்மாக் கடையை மதிமுகவினர் அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனைப் படம் பிடித்த செய்தியாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அவரது தாயார் நேற்று காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அந்த ஊருக்குள் நுழைய வைகோவுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றைக்குக் காலையில் போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு வைகோ உள்ளிட்ட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று பிற்பகலில் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு சென்றார். அங்கு அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 500 பேருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்
ஏராளமான பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இதனையடுத்து பதற்றமும், பரபரப்பும் ஏற்படவே கலிங்கபட்டியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக சுமார் 300 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்
இந்நிலையில், ம.தி.மு.க. தொண்டர் கணபதிபட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் அங்கு இருந்த செல்போன் டவரில் ஏறி மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கோரிக்கை விடுத்தார்
தற்கிடையே, ம.தி.மு.க. தொண்டர்கள் சிலர் அங்கிருந்த டாஸ்மாக் மதுபானக் கடையை அடித்து நொறுக்கினர். இதை காவல்துறையினர் தடுக்க வந்தபோது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயற்சித்தனர். போலீசார் நடத்திய தடியடியில் பொதுமக்கள், ம.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் போராட்ட களத்திற்கு விரைந்து வைகோவுடன் இணைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, போலீசார் வானத்தை நோக்கி சுட்டதாகவும், தன்னை நோக்கி 10 முறை போலீஸ் சுட்டதாகவும் கூறினார். இருப்பினும் தொண்டர்களை அமைதி காக்க அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள டாஸ் மாக் கடையை முன்னாள் எம்.எல்,ஏ.குமாரதாஸ் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளதாகவும்,17 பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Read more at: /tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை: