புதன், 5 ஆகஸ்ட், 2015

1971 இல் மதுவிலக்கை ரத்து செய்த திமுக 1974ஆம் ஆண்டிலேயே மீண்டும் மதுவிலக்கை அமுல்செய்தது! 1981இல் அதிமுகவே மதுவிலக்கை ரத்து செய்தது !

1971ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்த கலைஞருக்கு 44 ஆண்டுகள் கழித்து ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது” என்றெல்லாம் வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். 71ஆம் ஆண்டில் மது விலக்கை ரத்து செய்த தி.மு. கழகம்  1974ஆம் ஆண்டிலேயே மீண்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதையும், அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியிலேதான் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு விட்டது என்பதையும் வசதியாக மறைத்து விடலாம் என்று அவர் எண்ணுகிறார் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

நெஞ்சில் ஓர் வஞ்சமிலா நீட்டோலை! என்ற தலைப்பில் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உடன்பிறப்பே,

“திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு  வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று 21-7-2015 அன்று நான் அறிவித் திருந்த போதிலும், தமிழகமெங்கும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களின் தொடர்ச்சியாக, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை எதிரொலித்திடும் வகையில்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10-8-2015 திங்கள்கிழமையன்று மாவட்டத் தலைநகரங்களில்,  அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் மதுவிலக்கை நடை முறைப்படுத்தக் கோரி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று 3-8-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தேன்.   தொடர்ந்து 5-8-2015 தேதிய முரசொலியில்  எந்தெந்த இடங்களில் யார் யார் தலைமையில் அந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதற்கிடையே தி.மு.கழகத்தைப் பிடிக்காத ஒரு சில குறிப்பிட்ட கட்சியினரும், ஏன் தி.மு. கழகத்தை எதிர்க்காத ஒரு சில கட்சியினரும்கூட, இந்த மதுவிலக்குப் பிரச்சினை பற்றி தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோது தானே, மதுவிலக்கை ரத்து செய்தது, எனவே தி.மு.கழகத்தால் தான் எல்லாம் கெட்டுவிட்டது என்ற ரீதியில்  தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதற்கான விளக்கத்தை அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். 

தி.மு. கழகம் 1971ஆம் ஆண்டு மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது; அதற்கு முன்பும் பின்பும் என்ன நிலைமை என்பதையும் சற்று விரிவாக எடுத் துக் கூற வேண்டியது எனது கடமை என்று கருதுகிறேன்.

தி.மு. கழக ஆட்சியில் மது விலக்கு ஒத்தி வைக்கப் பட்டது என்றாலும், அப்போதே நான் கூறியிருக்கிறேன்; இதனை  திராவிட முன்னேற்றக் கழகம் முழு மனதோடு கொண்டு வரவில்லை என்றும், அப்போதுள்ள  தமிழகத் தின் நிதி நிலைமைதான் அதற்குக் காரணம் என்றும் விளக்கியிருக்கிறேன்.

மதுவிலக்கை தி.மு.கழகம் ஒத்தி வைக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்கு அப்போதைய நிதி நிலைமை தமிழக அரசிலே இருந்தது. அந்த முடிவை நாங்கள் எடுக்க முன்வந்த போது மூதறிஞர் ராஜாஜி அவர்களே,  என் இல்லத்திற்கு வருகை தந்து, அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவரிடம் நான் தமிழக அரசின் நிதி நிலைமைகளை எல்லாம் விளக்கிய பிறகு, அவர் உண்மையைப் புரிந்து கொண்டார். ஆனால் ராஜாஜி, ஏதோ கொட்டும்  மழையில் நனைந்து கொண்டே அவரது வீட்டிலிருந்து கோபாலபுரத்திற்கு நடந்தே வந்ததைப் போலவும்,  என்னிடம் ஏதோ மன்றாடிக் கேட்டுக் கொண்டதைப் போலவும், அதை நான் கேட்கவில்லை என்பதைப் போலவும் சிலர் இப்போது  பேசுகிறார்கள்.  அப்படிப் பேசுவதற்குப் பெயர்தான் அரசியல் ஆதாயம் தேடுவதாகும்.  அதுபோலவேதான் கண்ணியத்திற்கு உரிய  காயிதே மில்லத் அவர்களும் என்னைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.  அவரிடமும் நான் நிதி நிலைமையை விளக்கிக் கூறினேன்.  

மதுவிலக்கை ஒத்தி வைத்து  தமிழகச் சட்டப்பேரவை யில் நான் உரை நிகழ்த்தும்போது கூட, மிகுந்த வேதனை யுடன்தான் பேசினேன்.  “புனித நோக்கத்துடன் இந்தியப் புவி முழுவதும் எந்தக் கொள்கை விரிவாக்கப்பட வேண்டு மென்று காந்தியடிகள் கூறினாரோ,  அந்தக் கொள்கை  அவர் ஏந்திய கொடி நிழலில் அணி வகுத்து நின்ற அவர்தம் தானைத் தளபதிகளாம் மாநில முதல்வர்களாலேயே பின்பற்ற முடியாமல் போனது மட்டுமல்ல, மத்திய அரசினை நடாத்தும்  மகாத்மாவின் வாரிசுகளாலும்  புறக்கணிக்கப் பட்டது வேதனை தரும் செய்தியாகும்.  கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்” என்று சட்டப் பேரவையில் பேசினேனே தவிர, மனச்சாட்சி இடம் கொடுக்காத நிலையில்தான் மதுவிலக்குச் சட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தேன்.

என்னுடைய இந்தக் கருத்து அவ்வளவும் உண்மை என்பதற்கு ஓர் உதாரணம் கூற வேண்டுமேயானால், “தமிழக அரசியல் வரலாறு” என்ற தலைப்பில் சிறந்த எழுத்தாளர் ஆர். முத்துக்குமார் எழுதிய நூல் ஒன்றில்,  பக்கம் 282-283இல் குறிப்பிடும்போது, “தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த போது,  பலத்த நிதி நெருக்கடி இருப்பதால் மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்வது  அத்தியாவசிய நடவடிக்கை என்ற பேச்சுக்கள் எழுந்தன. நிதி நெருக்கடியைச் சமாளிக்க வேண்டுமென்றால்  மதுவிலக்கை ஒத்தி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றார் முதலமைச்சர் கருணாநிதி. பலத்த யோசனைக்குப் பிறகு மதுவிலக்கு ஒத்திவைப்பு விஷயத்தில் கருணா நிதிக்கு ஆதரவு கொடுக்கத் தயாரானார் எம்.ஜி.ஆர்.   அதனைக் கோவையில் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். மது விலக்கை அரசு தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது, நிரந்தரமாக அல்ல என்றார் எம்.ஜி.ஆர்.   மனச்சாட்சி இடம் கொடுக்காத நிலையிலும் நிதி நெருக்கடி யைக் கருத்தில் கொண்டு மதுவிலக்குச் சட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று சட்டமன்றத்தில் அறிவித்தார் கருணாநிதி.  மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நஷ்ட ஈடாக நிதி உதவி வழங்கும் புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. நிதி நெருக்கடியில் உழன்று கொண்டிருந்த தமிழக அரசு தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதைக் காரணம் காட்டி மத்திய அரசிடம் நிதி உதவி கோரியது. ஆனால் மத்திய அரசோ  கை  விரித்துவிட் டது.  புதிதாக மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி உதவி;  ஏற்கனவே  அமலில் இருக்கும் மாநிலங் களுக்கு அல்ல என்பது மத்திய அரசு சொன்ன காரணம்” என்று அந்த எழுத்தாளர் தனது நூலில் கூறியிருக்கிறார்.  

அப்போது மதுவிலக்குச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் போராட்டம் நடத்தி,  அவரது கட்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் மறியல் செய்து கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், அனைவரையும் விடுதலை செய்ய வேண்டு மென்றும் நான் கூறி அவ்வாறே செய்தேன். 

29-6-1971 அன்று நிதி நிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்குப் பதிலளித்து நான் உரையாற்றும்போது மதுவிலக்குக் கொள்கையை தி.மு. கழகம் ஒத்தி வைத்தது பற்றித்தான் நீண்ட நேரம் விளக்கமளித்தேன்.   உலகத்தின் பல்வேறு நாடுகளில் என்னென்ன நிலைமை ஏற்பட்டது என்பதையெல்லாம் விளக்கமாகக் கூறினேன்.   தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்த போது கள்ளச்சாராயம், வார்னிஷ் குடித்து எத்தனை பேர் இறந்தார்கள் என்ற புள்ளி விவரங்களையெல்லாம் எடுத்துக் காட்டினேன். இறுதியாக, “மதுவிலக்கு தோல்வியுற்று விட்டது.  அந்தச் சட்டம் இங்கே வெற்றிகரமாக நடைபெற முடியவில்லை என்பதை முன் இருந்த அமைச்சர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.   நாங்கள் அதைத் தாராளமாக ஒத்துக் கொள்கிறோம்.   மாண்புமிகு உறுப்பினர்களின் - தோழமைக் கட்சி நண்பர் களின் உணர்ச்சியை மதிக்கிறேன். பாராட்டுகிறேன்.   அவர்களில் சிலபேர் என்னைக் கெஞ்சிக் கூடக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  மன்றாடிக் கேட்பதாகக் கூடச் சொன்னார்கள்.  அவர்களை எல்லாம் விட நான் வயதிலே சிறியவன். அப்படி மன்றாடிக் கேட்டதை, கெஞ்சிக் கேட்டதைத் தயவு செய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்.   இதைத் தவிர வேறு வழி இல்லை என்ற காரணத்தால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். அதுவும் ஒத்தி வைத்திருக் கிறோம்.   இந்தியா முழுவதற்கும் மதுவிலக்குத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொள் ளும் வரையில் மதுவிலக்கை ஒத்தி வைத்திருக்கிறோம் என்றுதான் கூறியிருக்கிறோம்” என்றுதான் கூறினேன்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி வந்த தமிழகம்  -  நமது மாநிலத்திற்கு  அதனால் ஏற்பட்ட இழப்பை ஓரளவுக் காவது சரிக்கட்ட மத்திய அரசு முன்வராததாலும், அதற்காக எத்தனையோ முறை மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தும், அது பயனளிக்காத காரணத்தாலும்,  மதுவிலக்குக் கொள்கையை அகில இந்திய அளவில்  நடைமுறைப்படுத் தாததால்  ஏற்பட்ட இன்னல்களுக்கு தமிழகம் உள்ளாக வேண்டியிருந்ததாலும்,  நிதி நிலைமையைச் சமாளிப்பதற்காக மிகுந்த மன வேதனையுடன் - 1971ஆம் ஆண்டு மது விலக்கை ஒத்தி வைப்பதாக நான் அறிவித்திருந்த போதிலும்,  அண்ணல் காந்தி நெறி நின்று, அண்ணா வழியில் ஆட்சி நடத்திய எனக்கு  மதுவிலக்கை ஒத்தி வைத்ததின் காரண மாக நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது என்பதுதான் உண்மை.  என்னை உணர்ந்தவர்கள் இதனை நன்கறிவார்கள்.  தோழமைக் கட்சிகளும், எதிர்க் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்த நேரத்தில், அன்றிருந்த பல்வேறு நிலைமைகளை விளக்கி,  மதுவிலக்கை ஒத்தி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவித்தேன்.  

1971இல் தி.மு. கழக அரசு கள், சாராயக் கடைகளைத் திறந்தது என்றாலும், 1974இல் - தி.மு. கழக ஆட்சிக் காலத்திலேயே,  மீண்டும் மதுக்கடைகளை மூடி, மது விலக்கை நடைமுறைப்படுத்தியது.

ஒத்தி வைப்பது என்பது மீண்டும் நடைமுறைக்கு வரும் என்ற அடிப்படையில்தானே? அவ்வாறு நான் அறிவித்ததற்கிணங்க,  14-8-1974 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் முதல் துணை மதிப்பீடுகளை அவையிலே வைத்த போது,  “பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த செப்டம்பர் திங்கள் 15ஆம் நாள் அன்று அதே ஆண்டிலேயே மீண்டும் தமிழகத் தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவேன்” என்று மகிழ்ச்சியோடு அறிவித்தேன்.  

அப்படி நான் அறிவித்த போதே,  “நீண்ட நெடு நாட்களாக நல்லோர் பலரின் முறையீடாக இருந்து வருவதும், ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டதுமான குதிரைப் பந்தயத்தை அறவே ஒழிப்பது என்று அரசு முடிவு செய்கிறது” என்ற மற்றொரு அறிவிப்பினையும் செய்தேன்.  தி.மு. கழக ஆட்சிக் காலத்திலேயே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சட்ட முன்வடிவு தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக 22-8-1974 அன்று நிறைவேற்றப்பட்டது.  

ஆனால் அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன செய்தார்கள்?  தி.மு.கழக ஆட்சியிலே கொண்டு வந்த மதுவிலக்கு ரத்து என்பது, தி.மு. கழக ஆட்சியிலேயே  மீ   ண்டும் தமிழகத் தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவேன்” என்று மகிழ்ச்சியோடு அறிவித்தேன்.  

அப்படி நான் அறிவித்த போதே,  “நீண்ட நெடு நாட்களாக நல்லோர் பலரின் முறையீடாக இருந்து வருவதும், ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டதுமான குதிரைப் பந்தயத்தை அறவே ஒழிப்பது என்று அரசு முடிவு செய்கிறது” என்ற மற்றொரு அறிவிப்பினையும் செய்தேன்.  தி.மு. கழக ஆட்சிக் காலத்திலேயே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சட்ட முன்வடிவு தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக 22-8-1974 அன்று நிறைவேற்றப்பட்டது.  

ஆனால் அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன செய்தார்கள்?  தி.மு.கழக ஆட்சியிலே கொண்டு வந்த மதுவிலக்கு ரத்து என்பது, தி.மு. கழக ஆட்சியிலேயே  மீண்டும் திரும்பப் பெறப்பட்டு, மதுவிலக்கு நடைமுறைக்கு வந்து விட்டது என்பதுதான் உண்மை, உண்மை.

1977இல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மதுவை ஒழிக்க எவ்வளவோ பாடுபட்ட போதிலும், அவராலும் முடியவில்லை.  எனவே 1981இல் அதே எம்.ஜி.ஆர்.  மீண்டும் கள், சாராய விற்பனைக்காக, மதுவிலக்கை ரத்து செய்தார். அ.தி.மு.க. ஆட்சியில் 21-3-1981 அன்று அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, நிதியமைச்சர் நாவலர் பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இது பற்றி அறிவிக்கப்பட்டு, மதுவிலக்குச் சட்டத்திற்கு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அதற்குப் பிறகு, 2001இல் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது மது ஒழிப்பு பிரகடனம் செய்தார். எனினும்,  ஜெயலலிதா ஆட்சியின்  அந்த ஆண்டில் மட்டும் - மதுவிலக்கு சட்டத்தின்கீழ் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.   ஜெயலலிதா குறுகிய காலத்தில்  உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாகப் பதவி விலகி, ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, அந்நிய மது வகைகள், 100 மில்லி 15 ரூபாய் என்கிற மலிவு விலையில்  2002 ஜனவரி முதல் வாரத்திலிருந்து விற்பனைக்கு வரும் என்று அறிவித்தார். 

இந்த விவரங்களைப் பற்றி,  21-7-2015 தேதிய “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு, 1974ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு சாராயக் கடைகளையும், மதுக்கடைகளையும் மூடியது என்றும், 1981ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசு கள்ளுக்கடைகளைத் திறந்தது என்றும், 1982-83ஆம் ஆண்டு,  அதே அ.தி.மு.க. அரசு தனியார் துறையில் மது வகைகள் உற்பத்தி செய்ய அனுமதி அளித்தது என்றும்,  1987ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு மதுக்கடைகளைத் திறந்தது என்றும், 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசே மது விற்பனைக்காக   “டாஸ்மாக்” நிறுவனத்தைத் தொடங்கி, அரசே ஊருக்கு ஊர்  மது விற்பனைக் கடைகளைத் திறந்தது  என்றும் அந்த ஆங்கில நாளேடு எழுதியுள்ளது.   

“திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும்  தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்  மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கடந்த மாதம் நான் அறிவித்த பிறகு, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், முன்னணியினரும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும், மகளிர் அமைப்புகளும் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் என்னைத் தொடர்பு கொண்டு, அந்த அறிவிப்பை வரவேற்றதோடு, நல்ல முடிவு என்றும் கூறினார்கள்.   

ஆனால் பா.ம.க. நிறுவனர், டாக்டர் ராமதாஸ்,  “கலைஞர்  சொல்வதைக் கேட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்” என்று அறிக்கை வெளியிட்டார். “1971ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்த கலைஞருக்கு 44 ஆண்டுகள் கழித்து ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது” என்றெல்லாம் வார்த்தை களை அள்ளி வீசியிருக்கிறார்.  71ஆம் ஆண்டில் மது விலக்கை ரத்து செய்த தி.மு. கழகம்  1974ஆம் ஆண்டிலேயே மீண்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதை வசதியாக மறைத்து விடலாம் என்று அவர் எண்ணுகிறார்.  டாக்டர் ராமதாஸ் அவர்கள், ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்ட போது, மதுவிலக்கை ஒரு நிபந்தனையாக எந்தக் கட்டத்திலாவது  வைத்தது உண்டா? விழுப்புரத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, என்னையும் அங்கே அழைத்து, அந்த நாற்காலி முதல்வருக்கான நாற்காலி, அதிலே என்னை அமர வைக்கப் போவதாகப் பேசினாரே, அப்போது எனக்கு ஏற்பட்டதாகச் சொல்லும் ஞானோதயம் பற்றி எல்லாம் அவருக்குத் தெரியாமல் போய் விட்டதா?  

22-12-2008 அன்று  பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசும், மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் என்னைச் சந்தித்து தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டு மென்று வலியுறுத்திய போது, அவர்கள் கூறியதில் ஒத்த கருத்துடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு,  2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதிலும் 1300 மதுக் கூடங்களை (பார்) மூடியுள்ளது என்பதையும்,  அதேபோல் 128 சில்லறை மது விற்பனைக் கடைகளும்  மூடப்பட்டுள்ளன என்பதையும்  நினைவூட்டினேன். மேலும், தொடர்ந்து படிப்படியாக முழு மதுவிலக்கினை எய்திடுவதற் கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அது வரையில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள்,  மசூதிகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகில் மதுக்கடைகள் அமையாமல் நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவெடுத்துள்ளது  என்றும்,  மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் 1 மணி நேரத்தைக் குறைத்து - மதுக்கடைகள் இயங்கும் என்றும் அறிவித்ததோடு, அதற்கிணங்க ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. டாக்டர் ராமதாஸ் “கலைஞரின் வாக்குறுதிகள் காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்” என்று சொல்லியிருக்கிறார்.   எனது வாக்குறுதிகள் காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள் என்று அவர் கூறுகின்ற நேரத்தில், அவருடைய வேண்டு கோளை ஏற்று, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு தனியாக  20 சதவிகித இட ஒதுக்கீட்டை கழக அரசு வழங்கியதே, அதுவும் காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்தானா என்பதை டாக்டர் ராமதாஸ் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்.  

மதுவிலக்குக் கொள்கையைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் முதன் முதலாக மதுவிலக்கு ஒத்தி வைக்கப்பட்டதைப் போல சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.  இதுவும் உண்மையல்ல. 

1937இல்  ராஜாஜி  தலைமையில் சென்னை மாகாண அரசு அமைந்ததும், அதுவரை சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இல்லாத மதுவிலக்கை அமல்படுத்தினார்.  ஆனால் அதுவும்  1939இல் முடிவுக்கு வந்தது.  அந்த 1937ஆம் ஆண்டிலேகூட, ராஜாஜி முதலமைச்சராக இருந்த போதேகூட, சென்னை மாகாணத்தில் இருந்த 25 மாவட்டங்களில், நான்கு மாவட்டங்களில் மட்டும்தான், அதாவது சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில்தான் மதுவிலக்கு நடைமுறையில் இருந் தது.  மற்ற மாவட்டங்களில் 1937ஆம் ஆண்டிற்கு முன் பிருந்த நிலைமைதான் இருந்து வந்தது. 1948இல் ஓமந்தூரார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தான் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத் தினார்.  இது தவிர மற்ற காலங்களில்  அதாவது 1937க்கு முன்பும் சரி,  1939க்குப் பின்பு 1948ஆம் ஆண்டு வரையிலும் சரி, தமிழகத்திலே மதுவிலக்கு  நடைமுறையிலே இல்லை என்பதை சற்று யோசித்துப் பார்த்தால்,  தமிழகத்திலே தி.மு. கழக ஆட்சியில்தான் முதன் முதலாக மதுவைப் புகுத்தி விட்டார்கள் என்ற வாதம், எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.   

தி.மு. கழக ஆட்சிக் காலத்தில், மது பானங்களைத் தயாரிக்கும் உரிமம் சில கட்சிக்காரர்களுக்குக் கொடுக் கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டினை தொடர்ந்து கூறி வருகிறார்கள்.   செய்தியாளர்கள்கூட அதைப் பற்றி என்னிடம் கேட்டார்கள். தமிழகத்திலே  மதுவிலக்கினை நடைமுறைப்படுத்தி விட்டால், எல்லா மதுபானத் தொழிற் சாலைகளும் மூடப்பட்டு விடும். அதிலும் கூட தமிழகத் திலே தற்போது மதுபானங்கள் தயாரிக்கும் தொழிற் சாலைகள் 11  இருக்கிறது என்றால்,  முதன்  முதலாக அதற்கான உரிமம்  வழங்கப்பட்டதே அ.தி.மு.க. ஆட்சியிலே தான்! இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால்  “மிடாஸ்”  என்ற  ஒரு நிறுவனம் யாருடைய நிறுவனம்? அந்த நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது? அ.தி.மு.க. ஆட்சியில் அந்த நிறுவனத்திலிருந்து தான் அதிக அளவுக்கு  மது பானங்கள் வாங்கப்படுகின்றன என்பது அல்லவா உண்மை?  2013-2014ஆம் ஆண்டில் எந்தெந்த மதுபானத் தயாரிப்பு கம்பெனிகளிடம் இருந்து எவ்வளவு தொகைக்கு மது வாங்கப்பட்டது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விவரத்தைப் பார்த்தால், மிடாஸ் நிறுவனத்திடமிருந்துதான், மற்ற நிறுவனங்களை எல்லாம் விட அதிகமாக 2,280 கோடி ரூபாய்க்கு மது பானங்கள் வாங்கப்பட்டுள்ளன. 

உடன்பிறப்பே, நாடு விடுதலை அடைவதற்கு முன்பிருந்து தமிழகத்தில் மாறி மாறி வரும்  மதுவிலக்குக் கொள்கை பற்றிய விவரங்களையெல்லாம் தொகுத்துக் குறிப்பிட்டிருக்கிறேன்.  எனவே தி.மு. கழகம்தான் முதன் முதலாக தமிழகத்தில் மதுவிலக்குக் கொள்கையை  தளர்த்தியது என்பதே தவறான பிரச்சாரம். மேலும் அவ்வாறு 1971ஆம் ஆண்டு மதுவிலக்குக் கொள்கையை ஒத்தி வைத்த திராவிட முன்னேற்றக் கழக அரசு, 1974ஆம் ஆண்டிலேயே  மீண்டும் மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தி  விட்டதையும், அதற்குப் பிறகு வந்த  அ.தி.மு.க. ஆட்சியிலேதான் மதுவிலக்கு ரத்து செய்யப் பட்டு விட்டது என்பதையும்,  மது பானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டது  என்பதையும் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கலாம். இது நடந்து முடிந்த பிரச்சினை. இனி நடக்க வேண்டியது என்ன? தி.மு. கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  மது விலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என்று தெரிவித்தோம்.  ஆனால் தமிழகத்திலே உடனடியாக மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கோரிக்கை மேலெழுந்து போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.   இந்த நிலையில் அ.தி.மு.க. அரசு  உடனடி யாக தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே புத்திசாலித்தன மான நடவடிக்கையாக இருக்கும்.  ஆனால் அ.தி.மு.க. அரசு அப்படிப்பட்ட புத்திசாலித்தனமான நடவடிக்கையை மேற்கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.            nakkheeran,in 

கருத்துகள் இல்லை: