சனி, 29 ஆகஸ்ட், 2015

தாய்லாந்து கோவில் குண்டுவெடிப்பு....துருக்கிய பயங்கரவாதி சிக்கினான்?

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரம்மா கோயில் வளாகத்தில் 20 உயிர்களை பலிவாங்கிய பயங்கர குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகிக்கப்பட்ட நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பிரசித்தி பெற்ற பிரம்மா கோயில் உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். கடந்த 17-ம் தேதி இரவு இந்த கோயில் வளாகத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில், 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். 123 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் 11 பேர் வெளிநாட்டவர்கள். 5 பேர் சீனாவை சேர்ந்தவர்கள், 4 பேர் மலேசியாவை சேர்ந்தவர்கள், ஒருவர் இந்தோனேஷியா, இன்னொருவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் ஆவர்.< அந்த கோயில் வளாகத்தை ஒட்டியுள்ள சாலையில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் குண்டுவெடிப்பு நடந்த சமயத்தில் பதிவான காட்சிகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, மஞ்சள் நிற டிசர்ட் அணிந்த வாலிபர் ஒருவர், தோள்பையுடன் கோயில் வளாகத்துக்கு வருவதும், சில நிமிடத்தில் வளாகத்தில் பையை வைத்து விட்டு அங்கிருந்து நைசாக கிளம்பி செல்போனில் பேசியபடி ஓடுவதும் பதிவாகி இருந்தது.
எனவே, அந்த வாலிபர்தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அவனது புகைப்படத்தை வெளியிட்ட போலீசார், துருக்கி நாட்டைச் சேர்ந்த அந்த வாலிபரை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கிழக்கு பாங்காக்கில் உள்ள நாங் சோக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த சந்தேகத்துக்குரிய ஒரு நபரை இன்று பிற்பகல் கைது செய்ததாக பாங்காக் போலீசார் தெரிவித்துள்ளனர். அவனிடம் இருந்து ஏராளமான வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று கைது செய்யப்பட்ட நபர், கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மஞ்சள் நிற டிசர்ட் அணிந்த வாலிபர் தானா? என்பதை உறுதிப்படுத்த போலீசார் மறுத்து விட்டதாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டுள்ளன மாலைமலர்.com 

கருத்துகள் இல்லை: