திங்கள், 23 பிப்ரவரி, 2015

ரூ.16,350 கோடி மின் திட்டங்கள் என்ன ஆயிற்று? கலைஞர் ஆதரங்களுடன் கேள்வி ?

 நீலகிரி மாவட்டத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின்திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மின் நிலையங்கள் மற்றும் மின் தொடர் பாதைகள் அமைக்கும் திட்டம் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 20 ஆயிரம் புதிய மின் மாற்றிகள் அமைக்கும் திட்டம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் 850 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 16,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகம் விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்பதோடு, மின் நுகர்வோருக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும் என்றும் அறிவித்தார். என்ன ஆயிற்று இந்த அறிவிப்புகள்?.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தமிழக சட்டப்பேரவையில் இன்றைய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் இதுவரை முடிக்கப்பட்ட திட்டங்கள், நடுத்தர கால மற்றும் நீண்ட காலக்கொள்முதல் வாயிலாக 4,640 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது என்று பொத்தாம் பொதுவாக, குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டும் புள்ளி விவரங்கள் இல்லாமல் அறிவித்திருக்கிறார். 17-2-2015 அன்று இந்த அரசின் சார்பாக கவர்னர் ஆற்றிய உரையில், பக்கம் 25-ல், ‘‘மொத்தமாக மாநிலத்தின் மின் உற்பத்தித்திறன் கடந்த 4 ஆண்டுகளில் 3,358 மெகாவாட் அளவு அதிகரித்துள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியான தே.மு.தி.க. எம்.எல்.ஏ., மோகன்ராஜ் இதுபற்றிக் கூறும்போது, ‘‘தகவல் அறியும் சட்டத்தின்’’ அடிப்படையில் மின் உற்பத்தி பற்றி விவரம் கேட்டதாகவும், அதற்கு ஒரு மெகாவாட் மின்சாரம் கூட அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மின் உற்பத்தி செய்யப்படவில்லை என்று தெரிய வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு புதிய உற்பத்தித்திட்டத்தை உருவாக்கி, நிறைவேற்றி, அதன் மூலம் இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை என்று ஆதாரங்களோடு ஏடுகளும் எழுதியிருக்கின்றன. ஆனாலும் உண்மை என்ன என்பதைக்கூற ஆட்சியினர் இதுவரை முன்வரவில்லை.

2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வைத்த கொள்கை விளக்க குறிப்பில், தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களான வடசென்னை நிலை 2, மேட்டூர் நிலை 3, தமிழ்நாடு மின்சார வாரியமும் தேசிய அனல் மின்கழகமும் கூட்டு முயற்சியில் தொடங்கிய வல்லூர், தமிழ்நாடு மின்சார வாரியமும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் கூட்டு முயற்சியில் உருவாக்கிய தூத்துக்குடி ஆகிய 4 திட்டங்களின் மூலம், 2012-ம் ஆண்டு இறுதிக்குள் 3,228 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று தெரிவித்தார்களே, அந்த 4 திட்டங்களை நிறைவேற்றுவதில் அ.தி.மு.க. ஆட்சியினர் ஒழுங்காகத் தேவையான அக்கறை காட்டியிருந்தாலே, மின்வெட்டு என்ற நிலைமையே தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்காது.

ஆனாலும், தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட வடசென்னை விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 1,200 மெகாவாட், வல்லூர் 1,000 மெகாவாட், மேட்டூர் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 600 மெகாவாட் என்று இந்த புதிய அனல் மின் நிலையங்களில் இருந்து 2013-ம் ஆண்டு முதல் கூடுதலாக சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கிறது. இதன் காரணமாகத்தான் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த மின்தடை அறிவிப்பை 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விலக்கிக்கொள்வதாக அறிவித்தார்கள்.

ஆனால் அதன் பிறகு காற்றாலை மின் உற்பத்தி பெரிதும் பாதிப்புக்குள்ளானது. அதன் காரணமாக மின்தடை மீண்டும் நடைமுறைக்கு வந்து, கடந்த செப்டம்பர் 23-ந்தேதி முதல் தொழிற்சாலைகளுக்கு 20 சதவீதம் மின்வெட்டு செய்யப்பட்டது. 25-4-2013 அன்று ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் ஓர் அறிக்கை படித்தார். மீண்டும் 30-4-2013 அன்று, முதலில் படித்த அறிக்கைக்கு விளக்க உரை என்று ஒன்றைப் படித்தார்.

அதில் நீலகிரி மாவட்டத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின்திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மின் நிலையங்கள் மற்றும் மின் தொடர் பாதைகள் அமைக்கும் திட்டம் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 20 ஆயிரம் புதிய மின் மாற்றிகள் அமைக்கும் திட்டம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் 850 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 16,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகம் விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்பதோடு, மின் நுகர்வோருக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும் என்றும் அறிவித்தார். என்ன ஆயிற்று இந்த அறிவிப்புகள்?.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: