வெள்ளி, 23 நவம்பர், 2012

ஜி.கே.வாசன். கார்த்தி சிதம்பரம் திருச்சி MP தொகுதி கோரி மனு

திருச்சி மக்களவைத் தொகுதியை பெறுவதற்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் மல்லுக்கட்டி வருகின்றனர் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தியால் திருச்சி மக்களவைத் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் மேலிடப் பார்வையாளரான கேரள மாநிலத்தின் பி.வி. தாம்பனிடம் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்களும் போட்டிபோட்டு மனுக்கொடுத்தனர். ஜி.கே.வாசனுக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் திருச்சி தொகுதியைக் கோரி மனு கொடுத்திருக்கின்றனர். அதேபோல் திமுக கூட்டணியிலேயே வரும் தேர்தலிலும் நீடிக்க வேண்டும் என்றும் இருதரப்பும் மனு கொடுத்திருக்கின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலாளரான ஜெரோம் ஆரோக்கியராஜுக்கும் திருச்சி மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்திருக்கின்றனர். மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ஜி.கே.வாசன், காவிரி டெல்டா தொகுதி ஒன்றில் போட்டியிட விரும்புகிறார். திருச்சி கிடைக்காமல் போனால் மயிலாடுதுறை, தஞ்சாவூரில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இருந்தால் திருச்சி எப்படியும் தங்களுக்கு கிடைக்கும் என கருதுகிறது. கடந்த தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருச்சியை காங்கிரஸ் இழந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: