ஞாயிறு, 18 நவம்பர், 2012

பிரிட்டிஷார் இந்தியாவில் எதையும் விட்டுவைக்கவில்லை.

எளிதில் கடக்க முடியாத கடந்தகாலம்


மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 17
பிரிட்டிஷாரின் வருகை பலமுனைத் தாக்குதலாகவே இருந்திருக்கிறது. அவர்கள் அறிமுகப்படுத்திய நவீனத் தொழில்கள், உள்நோக்கம் கொண்ட அரசியல் முடிவுகள், சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அணுகுமுறை, கலாசாரக் குறுக்கீடு, சமூக அமைப்பை நுனிப்புல் மேய்ந்து ‘தீர்வு’களை முன்வைத்தது என எல்லாமே ஆயிரம் கரங்கள் கொண்ட, ஆயிரத்திலும் வெவ்வேறு ஆயுதங்களைக் கொண்ட, அரக்கனின் தாக்குதலாகவே இருந்திருக்கிறது. குடியேற்ற நாடுகளுக்கு உலகை ஆளப்பிறந்தவர்களின் அன்புப் பரிசாக அதுவே எல்லா இடங்களிலும் இருந்தும் வந்திருக்கிறது.
இந்தியாவின் பல்வேறு தொழில்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் அழிந்துவிட்டன. அல்லது அழிவை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருந்தன. புதிய தொழில்களும் தேவையான அளவுக்கு வளரவில்லை. இதனால், விவசாயம் மீதான சார்பு பெருமளவுக்கு அதிகரித்தது. சுமார் 80 சதவிகிதம் பேர் விவசாயத்தை நம்பி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், பிரிட்டிஷார் அதையும் விட்டுவைக்கவில்லை. கொழுத்த ஆடுகளை வெட்டு என்பதுதான் அவர்களுடைய அணுகுமுறை.
பிரிட்டிஷார் வருவதற்கு முன்புவரை தன்னிறைவு பெற்றிருந்த இந்திய விவசாயத்துறை பெரும் சரிவைச் சந்தித்தது.  http://www.tamilpaper.net/
உணவுப் பயிர்களுக்குப் பதிலாக பணப்பயிர்களை நடும்படி விவசாயிகள் நிர்பந்திக்கப்பட்டனர். உற்பத்தித்திறனும் வெகுவாகக் குறைந்தது. உதாரணமாக செங்கப்பட்டுப் பகுதியில் 1788 வாக்கில் ஒரு ஹெக்டேருக்கு 2.5 டன் விளைச்சல் இருந்துவந்தது. ஒரு தலைமுறைக்குள் அது வெறும் 0.63 டன் ஆகக் குறைந்துவிட்டது.
அதோடு, விவசாயத்துக்கான வரியும் கண்மூடித்தனமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி மெட்ராஸில் முதன்முறையாக விதித்த நிலவரி நில உற்பத்தியில் 50% ஆக நிர்ணயிக்கப்பட்டது. காலப்போக்கில் இது தாறுமாறாக அதிகரிக்கவும் செய்தது.
இங்கிலாந்தில் நிலவரி ஐந்து முதல் 20 சதவிகிதமாக இருந்தது. 1793-க்கும் 1822-க்கும் இடையில் வங்காளத்தில் 90%மாகவும் வட இந்தியாவில் 80%க்கு மேலாகவும் இருந்தது.
வங்காளத்தின் கடைசி முகலாய ஆட்சியாளர் 1764-ல் 8,17,833 பவுண்ட் தொகையை நிலவருவாயாக ஈட்டினார். அதே பகுதியில் அடுத்த முப்பது வருடங்களுக்குள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 26,80,000 பவுண்ட் தொகையை அதாவது மூன்று மடங்கு அதிகமான வரியை வசூலித்தனர்.
அதிக வரி விதிப்பால் மூன்றில் ஒரு பங்கு நிலம் விவசாயத்தில் இருந்து முடங்கிப்போனது. வங்காளத்தில் ஏற்பட்ட செயற்கைப் பஞ்சத்தில் ஏராளமானவர்கள் மடிந்தனர். கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் 1772-ல் கம்பெனியின் இயக்குநர் குழுவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் மடிந்து விளைச்சல் குறைந்த பிறகும் 1768-ஐ விட 1771-ல் வரி வருவாய் அதிகமாக இருந்திருக்கிறது. அதற்கு தாங்கள் வரி வசூலிப்பதில் எடுத்த கடுமையான நடவடிக்கைகளே காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பிரிட்டிஷ் காலத்தில் வகுக்கப்பட்ட வர்த்தகக் கொள்கை முழுக்க முழுக்க அவர்களுடைய நலனை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தது. 1815-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்திப் பொருட்களின் மதிப்பு 1,00,000 பவுண்டாக இருந்தது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருத்திப் பொருட்களின் மதிப்பு 26,300 பவுண்டாக இருந்தது.  ஆனால், 1832-ல் இறக்குமதி 4,00,000 பவுண்ட்களைத் தாண்டியது. இதனால், இந்திய உற்பத்தித் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. 1813-ல் கல்கத்தா துறைமுகத்தில் இருந்து பிரிட்டனுக்கு 20,00,000 பவுண்ட் பருத்தி துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்த நிலைமை தலைகீழாக மாறி 1830-ல் பிரிட்டனில் இருந்து அதே அளவு ஜவுளிப் பொருட்கள் கல்கத்தாவுக்கு பிரிட்டனின் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
இந்திய-பிரிட்டிஷ் வர்த்தகம் மட்டுமல்லாமல் இந்தியா பிறநாடுகளுடன் செய்துவந்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. 1800-க்கும் பிறகு அமெரிக்கா, டென்மார்க், போர்ர்சுகல், அரபு நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி வெகுவாகக் குறைந்தது.
இந்தியாவின் நிகர வருவாயில் பாதிக்கு மேல் பிரிட்டனுக்குக் கடத்தப்பட்டன. கோஹினூர் வைரம் மட்டுமல்லாமல் வேறு பல விலை மதிப்பில்லா கற்களும் கொண்டுசெல்லப்பட்டன. மொகலாய சக்ரவர்த்திக்குச் சொந்தமான கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து எடுத்த 410 காரட் எடையுள்ள ஒரு வைரத்தை அப்போது சென்னையின் கவர்னராக இருந்த தாமஸ் பிட் வாங்கிக்கொண்டார். அவர் அதை சொந்தமாக்கிக்கொண்டதால் அதன் பிறகு அது பிட் வைரம் என்றே பெயரிடப்பட்டது. அந்தக் காலத்திலேயே 1,25,000 பவுண்டுக்கு மதிப்பிடப்பட்டது.
இந்தியாவில் கொள்ளையடித்ததை எல்லாம் இங்கிலாந்துக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரவேண்டி, தன் சொத்துகளையெல்லாம் வைரங்களாக மாற்றினார் ராபர்ட் கிளைவ். இதுபோல விலையுயர்ந்த கற்களையெல்லாம் எடுத்துச் சென்றதாலும், இந்தியாவிலிருந்து மூலப் பொருட்களை பிரிட்டனுக்கு எடுத்துச் சென்று, அவற்றிலிருந்து பொருள்களைத் தயாரித்து, இந்தியாவில் அதிக விலைக்கு விற்று சுதேசி தொழிற்சாலைகளை அழித்ததாலும் 1747ல் இருந்து 1947க்குள் பிரிட்டனின் தனி நபர் வருமானம் 347 விழுக்காடு அதிகரித்தது. அதே காலத்தில், இந்தியாவின் தனி நபர் வருமானம் கேவலம் 14 விழுக்காடுதான் அதிகரித்தது.
வருடா வருடம் இந்தியாவில் இருந்து ஒன்றரை மில்லியன் பவுண்டுக்கு அதிகமான தொகை பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அந்தத்தொகை கிழக்கிந்திய கம்பெனி இருந்தவரை அதன் லாபமாக அதன் பங்குதாரர்களுக்குச் சென்றது. அதன் பிறகு பிரிட்டிஷ் அரச நிர்வாகம், அதிகாரிகள், ராணுவ படைக்கான செலவு, தொழில் புரட்சிக்கான மூலதனம் என பலவகைகளில் பயன்படுத்தப்பட்டது.
இந்தச் சுரண்டல்கள் பிரிட்டிஷ் மக்களுக்கே பெரும் அவமானமாகப்பட்டதால்தான் சரித்திர சின்னங்களுக்குப் பெரும் முக்கியத்துவம் தரும் பிரிட்டிஷார் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமைக் கட்டடத்தையோ ராபர் கிளைவ் போன்றவர்களின் மாளிகைகளையோ தங்களுடைய பெருமைக்குரிய சின்னங்களாக மதித்துப் போற்றுவதில்லை. அடியாழத்தில் தாம் செய்த கொடூரச்செயல்களின் அடையாளமாகவே அவை தோன்றுவதால் ஒருவித விலகலையே கடைப்பிடித்துவருகின்றனர். நவீன உலகில் ஒப்பீட்டளவில் மேலான ஜனநாயகச் சிந்தனைகளுடன் வாழ்ந்துவரும் அவர்களுக்கு அந்தக் கடந்த காலம் தவிர்த்திருக்க வேண்டிய பெரும் பிழையாக, ஒரு கொடுங்கனவாகவே தோன்றுகிறது போலும். நம்மவர்களுக்குத்தான் அது இன்னும் வேண்டிய அளவுக்கு உரைத்திருக்கவில்லை.

கருத்துகள் இல்லை: