வியாழன், 22 நவம்பர், 2012

கசாப் உடலை வாங்க பாகிஸ்தான் மறுப்பு

கசாப்பைத் தூக்கிலிடப் போவது குறித்து பாகிஸ்தானிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது. மேலும் அவர்கள் உடலை வாங்க மறுத்து விட்டதால் கசாப்பின் உடல் இந்தியாவிலேயே அடக்கம் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.
அதே போல அவனது உடல் எரவாடா சிறையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
கசாப் தூக்கிலிடப்பட்டது குறித்து அவர் கூறுகையில், எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப் தூக்கிலிடப்பட்டான். அவன் தாக்கல் செய்திருந்த கருணை மனுவை நவம்பர் 5ம் தேதி நிராகரித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

இதையடுத்து கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான கோப்பில் நான் நவம்பர் 6ம் தேதியே கையெழுத்து போட்டு விட்டேன். அது மகாராஷ்டிர அரசுக்கு நவம்பர் 8ம் தேதி சென்று அன்றே அங்கும் கையெழுத்தானது. இதையடுத்து 21ம் தேதி கசாப்பைத் தூக்கிலிடுவது என அன்றே தீர்மானிக்கப்பட்டது.
கசாப்பைத் தூக்கிலிடப் போகிறோம் என்பதை ஏற்கனவே பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவித்து விட்டோம். இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு கடிதம், பேக்ஸ், போன் மூலம் தகவல் தந்தோம்.
மேலும் உடலைப் பெற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்டு பாகிஸ்தான் தூதரகத்திற்குக் கடிதம் அனுப்பினோம். அதற்கு அவர்கள் பதிலே அனுப்பவில்லை. எனவே கசாப்பின் உடலை இந்தியாவிலேயே முறைப்படி அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார் ஷிண்டே.
கசாப் தூக்கிலிடப்பட்ட விவகாரத்தில் ரகசியம் காக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இதுபோன்ற அதி முக்கியமான சம்பவங்களில் ரகசியம் காக்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை, நியாயமான ஒன்றுதான் என்றார்.
கசாபுடன் இந்தியாவில் தாக்குதல் நடத்த வந்து பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மற்ற 9 தீவிரவாதிகளும் இந்தியாவிலேயே புதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: