சனி, 11 ஆகஸ்ட், 2012

சிறுவன் பலி ஜேப்பியார் மீண்டும் கைது? கல்லூரி கழிவுநீர் தொட்டியில்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜேப்பியார் மற்றுமொரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது 
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜேப்பியார் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த கல்லூரிக்கு ஏஐசிடிஇ அனுமதி உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகளும் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனால் கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான பூந்தமல்லி பனிமலர் இன்ஜினியரிங் கல்லூரியிலும் கட்டிட பணிகள் நடந்து வருகிறது. அங்குள்ள பெரிய கழிவுநீர் தொட்டி ஒன்று திறந்து கிடந்தது. கட்டிட வேலை செய்து வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த சாம்ராய் (எ) ராம்ஜி என்பவரின் மகன் சஞ்சய் தேஷ்முக் (7) அந்த தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தான்.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி நிர்வாகத்தின் அஜாக்கிரதையே, சிறுவன் பலியாக காரணம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இதுதொடர்பான வழக்கிலும் ஜேப்பியார் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.  நசரத்பேட்டை போலீசார், சிறுவனின் சாவை, ‘சந்தேக மரணம்’ என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அடுத்தடுத்து அலட்சிய சம்பவங்களால் உயிரிழப்பு தொடர்வதால், ஜேப்பியார் குழும கல்வி நிறுவனங்களில் படித்துவரும் மாணவர், மாணவிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர். அலட்சிய சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: