புதன், 28 ஏப்ரல், 2010

சங்கிலியன் மன்னனின் நிலத்தில் இந்தக் ஹோட்டல் அமைக்கப்படப்போவதில்லை.?

புராதன ஆலயமான நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சமீபமாக 80 அறைகள் கொண்ட நட்சத்திர ஹோட்டலை நிர்மாணிப்பதற்கான திட்டமானது உள்ளூர் தமிழ்ப் பிரமுகர்கள் மற்றும் எதிரணி அரசியல் கட்சிகளின் கடுமையான ஆட்சேபனையையடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இக் ஹோட்டலை கொழும்பிலுள்ள அரச ஆதரவுடனான நிதி நிறுவனமொன்று யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தது.
4 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சமீபமாக இந்தக் ஹோட்டலை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் விடயம் கடும் ஆட்சேபனைக்குரியதாக உள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பான்மையான இந்து தமிழர்கள் இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர். இரண்டாவதாக இந்தக் ஹோட்டல் அமைக்கப்படவுள்ள காணி பற்றிய ஆட்சேபனை காணப்படுகிறது. இது பண்டையகால தமிழ் மன்னரான சங்கிலியனின் கோட்டை அமைந்திருந்த இடமாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் அடிப்படை வசதிகள்,  பொருளாதாரத் தேவைகள் இன்னரும் பூர்த்தி செய்யப்படாதிருக்கும் நிலையில், 40 கோடி ரூபா செலவில் ஹோட்டல் அமைப்பதற்கான தேவையொன்று முக்கியமானதாக இருக்கவில்லையென்ற ஆட்சேபனை மூன்றாவதாகக் காணப்படுகிறது.     மேலும், பாரிய செலவினத்தில் இந்தக் ஹோட்டல் அமைக்கப்படுவதால் யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அது உதவியாக அமையாது என்ற அபிப்பிராயம் நான்காவது ஆட்சேபனையாகவுள்ளது.
குடாநாட்டு சாதாரண மற்றும் மத்தியதர வர்க்க மக்களுக்கு ஹோட்டல் அறைகள் பற்றாக்குறையாகவுள்ளன.    யாழ்.குடாநாட்டிற்குச் செல்லும் உல்லாசப் பயணிகளுக்கு 150 ஹோட்டல் அறைகள் மட்டுமே காணப்படுகின்றன.

இதேவேளை, ஹோட்டல்கள் உட்பட தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை மீளக்கட்டியெழுப்புவதற்கோ அல்லது விரிவுபடுத்துவதற்கோ உள்ளூர் தொழிற்துறையாளர்களுக்கு அதிகளவு நிதிச்சலுகைகள் தேவையாக இருப்பதாக யாழ்ப்பாண வர்த்தக சம்மேளன அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த மாதிரியான அத்தியாவசியமற்ற, ஆடம்பர ஹோட்டல்கள் போன்ற திட்டங்களானவை தென்னிலங்கையிலுள்ள செல்வந்தர்களுக்காகவே என்ற அபிப்பிராயம் காணப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்தக் ஹோட்டல் திட்டம் தொடர்பாக தெரிவிக்கப்படும் ஆட்சேபனைகள் வேண்டப்படாதவையென்று யாழ்ப்பாண மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.
முதலாவதாக இந்தக் ஹோட்டல் கோவிலுக்கு அண்மையாக நிர்மாணிக்கப்படப் போவதில்லை. ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திலேயே அது நிர்மாணிக்கப்படவுள்ளது. இரண்டாவதாக சங்கிலியன் மன்னனின் நிலத்தில் இந்தக் ஹோட்டல் அமைக்கப்படப்போவதில்லை. ஏனெனில் அந்த நிலமானது போர்த்துக்கேயர் காலத்திலேயே தனியாருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என்று யோகேஸ்வரி பற்குணராஜா கூறியுள்ளார்.
அதேவேளை, உள்ளூர் தலைவர்கள் மற்றும் கருத்துகளை தெரிவிப்போர் அடங்கிய கூட்டமொன்றை மே 10 ஆம் திகதி நடத்தப்போவதாகவும் அக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக விளங்கப்படுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை: