dinamalar.com : தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் இருந்தாலும் பெல்வெதர் தொகுதியான வேடசந்தூர் தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சி தான் அரியணை ஏறும். இந்த உண்மை 2026 தேர்தலிலும் தொடருமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. அனைத்து முன்னிலை விவரங்கள், ஓட்டு எண்ணிக்கை விவரங்கள் அதன் பின்னர் படிப்படியாக அறிவிக்கப்பட இருக்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் கட்சித் தலைவர்களின் தொகுதிகள், முக்கிய கட்சிகளின் பாரம்பரிய தொகுதிகள் இருந்தாலும் ஒரேயொரு தொகுதியை தான் அனைத்து கட்சிகளும் உற்று நோக்கி வருகின்றன.
அந்த தொகுதியின் பெயர் வேடசந்தூர். இது ஒரு பெல்வெதர் (Bellwether) தொகுதி என்று அறியப்பட்டு வருகிறது. Bellwether என்ற ஆங்கில வார்த்தையானது ஓரு கூட்டத்தை வழிநடத்தும் ஆட்டுக்குட்டியை குறிக்கிறது. அதேபோல Bellwether Assembly Constituency என்றால் ஒரு மாநிலத்தில், ஒரு நாட்டில் எந்த கட்சியானது ஆட்சிக்கு வரக்கூடும், அரியணை ஏறும் என்பதை குறிப்பாக காட்டும் தொகுதியாகும்.
அதாவது, எந்த கட்சி வேட்பாளர் வெல்கிறாரோ, அந்த கட்சியே மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும். 60 ஆண்டுகாலமாக தேர்தல் முதல் வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெறும் நபர், அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த கட்சியே கோட்டையை பிடித்து இருக்கிறது, ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.
1967ல் திமுக கூட்டணியாக போட்டியிட்ட இந்திய கம்யூ. இந்த தொகுதியில் வென்றது. திமுக ஆட்சியை பிடித்தது. 1971ம் ஆண்டு திமுக வேட்பாளர் வெல்ல, அதே கட்சி அரியணை ஏறியது. 1977, 1980, 1984 ஆகிய 3 தேர்தல் காலங்களில் இங்கு அதிமுகவே வென்றது. அப்போது, 3 முறையும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான்.
எம்ஜிஆர் மறைந்த பின்னர், 1989ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வேடசந்தூரில் திமுக வெற்றி பெற, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1991ம் ஆண்டு வேடசந்தூரை அதிமுக கைப்பற்ற, அந்த கட்சியே அரியணையில் அமர்ந்தது. ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானார்.
1996ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி முதல்வராக அமர, வேடசந்தூரில் வென்றது திமுகதான். பின்னர் 2001ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் வெற்றி பெற, மீண்டும் அதிமுக ஆட்சியமைத்தது. 2வது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா.
நேரிடையாக பெரும் கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை இந்த தொகுதியில் போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கினாலும், தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர முடியாது என்பது தான் யதார்த்தம். 2006ல் இந்த தொகுதி திமுகவானது, கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியது. காங்கிரஸ் வேட்பாளரும் வென்றார்.
அந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையின்றி மைனாரிட்டி அரசான திமுக, காங்கிரஸ் துணையுடன் ஆட்சியை 5 ஆண்டுகாலம் நடத்தியது. 2011, 2016 தேர்தல்களில் அதிமுக வேட்பாளர் வெல்ல, அதிமுக ஆட்சி அமைத்தது. கடந்த 2021 தேர்தலில் இங்கு திமுக வேட்பாளர் வெல்ல, திமுக ஆட்சியில் அமர்ந்தது.
இப்படி பெல்வெதர் தொகுதியாக அறியப்படும் வேடசந்தூர் மீது தான் ஒட்டுமொத்த கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் கண் வைத்து காத்திருக்க ஆரம்பித்துள்ளனர். 2026ம் ஆண்டு எந்த வேட்பாளர் வெல்கிறோரோ, அந்த கட்சியை அரியணை ஏறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
ஆனால், 2026ம் ஆண்டு தேர்தலானது யாருக்கு வெற்றி என்பது கணிக்கமுடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. நடிகர் விஜயின் தவெக முதல்முறையாக களம் இறங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக வி.பி.பி. பரமசிவம் களம் இறக்கப்பட்டு உள்ளார். திமுக வேட்பாளராக டி. சாமிநாதன் போட்டியில் உள்ளார். மற்றொரு புதிய வரவான தவெகவில் நாகஜோதி வேட்பாளராக இருக்கிறார். நாம் தமிழர் வேட்பாளராக காஜா உசேன் அகமது உள்ளார்.
இம்முறை நான்குமுனை போட்டி என்றாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மாறுபட்டு இருப்பதே ஒரு காரணமாக கருதப்படுகிறது. தவெக வருகையால் இந்த தொகுதியின் பழைய அரசியல் கணக்குகள் மாறுமா? புதிய அத்தியாயம் தொடங்குமா என்பது நாளை மதியம் தெரிந்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக