திங்கள், 25 மே, 2026

உதயநிதி ஸ்டாலின் : "பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம்; முதுகில் குத்துவிட்டார்கள்!

 தினமணி ஜீவகணேஷ்.ப : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் திமுக முதுகில் குத்திவிட்டதாகப் பேசியிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக உடனான கூட்டணியில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டிக்கு ஆதரவு வழங்குவதாக, தவெக-வுடன் கூட்டணி சேர்ந்தது காங்கிரஸ் கட்சி.
இதனைத் தொடர்ந்து திமுகவினர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் திமுக முதுகில் குத்திவிட்டதாகப் பேசியிருக்கிறார்.



"வெறும் 17 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் நாம் இன்று வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். இப்போது ஆட்சி அமைத்திருக்கக்கூடிய கட்சிக்குத் மெஜாரிட்டி கிடைக்காமல், நம்முடைய கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளின் ஆதரவால்தான் இன்று இந்த ஆட்சி அமைந்திருக்கிறது.

நம்முடைய கூட்டணியில் இருந்த சில கட்சிகள் நம் தலைவரிடம் வந்து, தலைவரின் உத்தரவைப் பெற்று, அனுமதியைப் பெற்று ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடைய முதுகின் மேல் ஏறி நின்று நம் மேல் சவாரி செய்த காங்கிரஸ் கட்சி, இன்று நம்முடைய முதுகில் குத்திவிட்டுப் போயிருக்கிறது; இதை யாரும் மறந்துவிடாதீர்கள்.
Tired of Ads? Subscribe Now

இந்தியாவில் பாஜகவின் தொடர் வெற்றிக்கு நான்கூட நரேந்திர மோடியும் அமித் ஷாவும்தான் காரணம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அதற்குக் காரணம், முதன்மைக் காரணம் அவர்கள் கிடையாது.

காங்கிரஸ் கட்சிதான் பாஜகவின் வெற்றிக்குக் காரணம் என்பது இப்போது புரிகிறது. அப்படிப்பட்ட அந்தக் காங்கிரஸையும் நம்முடைய தலைவர்தான் தோளில் சுமந்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் சுமந்துகொண்டிருந்தார்.

மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டும், பாஜகவைத் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்று நம்முடைய தொண்டர்களும் நாமும் இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற வைத்துக்கொண்டிருந்தோம்.

குறைந்தபட்ச ஒரு நன்றியோ, நாகரிகமோ இல்லாத காங்கிரஸை இனி எந்தக் காலத்திலும் நாம் நம்பக் கூடாது. எந்தக் காலத்திலும் நாம் அருகில் சேர்க்கக் கூடாது." எனக் கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: