புதன், 24 ஏப்ரல், 2024

திரைப்பாடல்களுக்கு கவிஞர்களும் உரிமை கோரினால் என்னவாகும்? இளையராஜாவிற்கு நீதிமன்றம் கேள்வி!

 மின்னம்பலம் - Kavi  :  திரைப்பாடல்களுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும்? இளையராஜா பாடல்கள் வழக்கில் நீதிமன்றம் கேள்வி!
இளையராஜாவின் பாடல்கள் தொடர்பான வழக்கில் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இளையராஜா பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.



இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் இன்று (ஏப்ரல் 24) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “இசையமைத்ததற்காக இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்துவிட்டதால், அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும். தயாரிப்பாளரிடம் இருந்து உரிமை பெற்றுள்ளதால், பாடல்கள் தங்களுக்கு சொந்தமாகி விட்டது” கூறினார்.

இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், “இசையமைப்பு என்பது க்ரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது” என்று தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதிகள், “அப்படி என்றால் வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என கேள்வி எழுப்பினார்கள்.

தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதிகள், பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கும் சொந்தம் என்பது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் கூறினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கருத்துகள் இல்லை: