புதன், 27 ஏப்ரல், 2022

கண்ணை மூடிருக்கும்போது தாலி கட்டிட்டார்" :சின்னத்திரை நடிகை பைரவி. DGP அலுவலகத்தில் தீக்குளிப்பு முயற்சி!

 கலைஞர் செய்திகள் : சினிமா எடுப்பதாகக் கூறி பண மோசடி செய்து, வலுக்கட்டாயமாகத் தன் கழுத்தில் தாலியும் கட்டிய நபரைக் கைது செய்ய வேண்டும் என சின்னத்திரை நடிகை பைரவி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார்.
சினிமா எடுப்பதாகக் கூறி பண மோசடி செய்து, வலுக்கட்டாயமாகத் தன் கழுத்தில் தாலியும் கட்டிய நபரைக் கைது செய்ய வேண்டும் என சின்னத்திரை நடிகை பைரவி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி என்கிற பைரவி, கடந்த மார்ச் 25-ஆம் தேதி போலிஸில் அளித்த புகாரில், ”நான் கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். வேலூரை சேர்ந்த ராஜாதேசிங்கு என்கிற சுப்பிரமணி, தயாரிப்பாளர் என அறிமுகமானார்.


எனக்கு சின்னத்திரையில் நடிக்க சில வாய்ப்புகள் வந்தது. நடிகையானால் இயக்குநர்களுடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பதால், உன்னை தயாரிப்பாளராக ஆக்குகிறேன் எனக் கூறினார். மயிலாடுதுறைக்கு சினிமா தயாரிப்பு தொடர்பாக என்னை அழைத்துச் சென்று அங்கு கோயிலில் கட்டாய தாலி கட்டினார்.

அந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், என்னை வற்புறுத்தி கட்டாயமாக உறவு கொண்டார். தற்போது என்னையும் எனது பெண் குழந்தையும் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துகிறார். என்னை போல பல பெண்களையும் அவர் ஏமாற்றியுள்ளார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அவர் ஏற்கெனவே போக்சோ சட்டத்தில் கைதானவர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த புகார் மீது நடவடிக்கை இல்லாததால், நேற்று மாலை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த பைரவி, தான் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸார் உரிய நேரத்தில் பைரவி மீது தண்ணீர் ஊற்றித் தடுத்தனர். இதையடுத்து மெரினா காவல்நிலைய போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: