சனி, 16 மே, 2020

கணக்கும் கருணையும்” - ஜெ.ஜெயரஞ்சன் | J.Jeyaranjan வீடியோ

மின்னம்பலம் : பொருளாதார ஆராய்ச்சியாளரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நாள்தோறும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து மின்னம்பலம் யூ ட்யூப் சேனல் வழியாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களாக பிரதமரின் 20 லட்சம் கோடி ரூபாய் அறிவிப்பில் உள்ள முரண்களையும், அதன் தாக்கங்களை விளக்கி வருகிறார்.
20 லட்சம் கோடி அறிவிப்புகளில் ஏற்கனவே அறிவித்த திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவித்தவை, நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தது, சட்டங்களை மாற்றுவது உள்ளிட்டவற்றை சொல்லி பல லட்சத்திற்கு கணக்கு காண்பிக்கிறார்கள். அறிவிப்பின் ஒரு பகுதியாக கொரோனாவிற்காக ஜெயரஞ்சன் வீட்டில் இட்லி சுட்டார்கள் என்றெல்லாம் மத்திய நிதியமைச்சர் கணக்கு காண்பிப்பார் போல என்று சாடிய அவர்,

“அரசு அறிவித்த திட்டங்களின் வழியாக சென்றடைந்த பணம் அல்லது உணவு ஆகியவை மக்களுக்கு போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் என்பதை நிதியமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இந்த சமயத்தில் எவ்வளவு கொடுத்தாலும் பலருக்கு போதாது என்ற ஒரு வார்த்தையையும் அவர் குறிப்பிடுகிறார். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் உழைக்கும் மக்களின் கஷ்டங்களுக்கு அரசு இவ்வளவுதான் செவி சாய்க்கிறது. ” என்று கூறுகிறார்.
தொடர்ந்து, “இதன்மூலம் அரசு தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறது. பொறுப்பிலிருந்து விலகினாலும் மக்களிடமிருந்து பெறும் எதையும் நிறுத்திக்கொள்வதில்லை. உதாரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது இவர்கள் அதன் பலனை நுகர்வோர் அனுபவிக்க விடாமல் பெட்ரோல், டீசலுக்கான வரியை உயர்த்திக்கொண்டுதான் செல்கிறார்கள். ஜிஎஸ்டி வரியை எந்த பொருளுக்கும் குறைக்கவில்லை, வருமான வரியையும் குறைக்கவில்லை" எனச் சாடினார்.
மேலும், “கொரோனா வந்துவிட்டதால் எங்களிடம் நிதி இல்லை. வங்கிகள் வழியாக மக்களுக்கு கடன் கொடுக்கப்போகிறோம். கடன் வழியாக வாழ்ந்துகொள்ளுங்கள், எங்களிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால், வரி வருவாயைப் பாதுகாப்பதற்காக பெரும் பணம் படைத்தவர்கள் மீது ஒரு துரும்பு கூட விழாமல் பாதுகாக்கிறது இந்த அரசு” எனவும் விமர்சிக்கிறார். அவரது முழு உரையையும் கீழே உள்ள காணொளியில் காணலாம்.

கருத்துகள் இல்லை: