ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

அமெரிக்காவில் 40 க்கு மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழப்பு .. கொரோனா வைரஸ் .

தமிழ் இந்து : மரணத்தாண்டவம் ஆடி வரும் கரோனா வைரஸுக்கு அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அமெரிக்க-இந்தியர்கள் பலியாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இந்தியர்கள் 1,500 என்று அமெரிக்காவில் உள்ள இந்தியச் சமூகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று அமெரிக்காவில் 2,108 பேர் பலியாகி கரோனாவுக்கு ஒரே நாளில் அதிகம் பேர் பலியான நாடாகியது. கரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை 5 லட்சமாக அதிகரித்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக தரவுகள் கூறுகின்றன
நியூயார்க் நியூஜெர்சியில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த 17 பேர் குஜராத்தைச் சேர்ந்த 10 பேர் , பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் 4 பேர், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் 2 பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்தவர் ஒருவர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர், இதில் பலரும் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்றும் ஒரெயொருவர் மட்டும் 21 வயது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூஜெர்சியில் 12க்கும் மேற்பட்ட அமெரிக்க-இந்தியர்கள் பலியாகியுள்ளனர். லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் ஜெர்சி சிட்டி மற்றும் ஓக் ட்ரீ ரோடு பகுதிகளில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அதே போல் நியூயார்க்கில் வசிக்கும் 15 இந்திய-அமெரிக்கர்கள் பலியாகியுள்ளனர். பென்சில்வேனியா, புளோரிடாவில் 4 இந்தியர்கள் மரணமடைந்துள்ளனர். டெக்சாஸ், கலிபோர்னியாவில் தலா 1 இந்தியர் பலியாகியுள்ளனர்.
நியூஜெர்சியில் 400க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கரோனா பாசிட்டிவ், நியூயார்க்கில் 1,000 பேருக்கு மேல் கரோனா பாசிட்டிவ் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இந்திய சமூகத் தலைவர்கள் சமூகவலைத்தளங்களில் பிளாஸ்மா கொடுத்து உதவுபவர்களை அழைத்துள்ளனர். இதில் 2 பேருக்கு பிளாஸ்மா நன்கொடையாளர்கள் கிடைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: