செவ்வாய், 28 ஜூன், 2016

அந்த 700 கோடி ரூபாய் விஜயகாந்துக்கு கிடைத்தது எப்படி ?ரகசியத்தை போட்டுடைத்த மக்கள் தேமுதிக சந்திரகுமார்

எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு விஜயகாந்த் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால் கட்சியை கைக்கழுவிவிட்டார் என்று மக்கள் தேமுதிக கட்சி நிர்வாகி சந்திரகுமார் புதிய புகாரை கிளப்பியுள்ளார்.
கடந்த சட்டப்பேரவை தேர்லில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டவர்கள் கட்சியில் இருந்து விலகி 'மக்கள் தேமுதிக' என்ற புதிய கட்சியை தொடங்கியதோடு, திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மக்கள் தேமுதிகவை திமுகவுடன் இணைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார்,எங்களை விஜயகாந்த் கடனாளியாக்கி விட்டு, தன்னை வளமாக்கி விட்டார். 60 லட்சம் தொண்டர்களின் வாழ்வை சீரழித்துவிட்டார்.
விஜயகாந்தின் சுயநலத்திற்காக தொண்டர்கள் வீட்டையும் இழந்து, நடு தெருவுக்கு வந்து விட்டார்கள். தமிழகத்தில் அதிமுக, திமுகவை தவிர வேறு கட்சிகளை மக்கள் ஏற்கவில்லை. இதை இந்த தேர்தல் நிரூபித்து இருக்கிறது. 10 சதவீதம் இருந்த வாக்கு வங்கியை விஜயகாந்த் வெறும் 2.4 சதவீதமாக ஆக்கிவிட்டார். அவர் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் கூட அவரால் வாங்க முடியவில்லை. மக்கள் விஜயகாந்தை நிராகரித்து விட்டனர். அடுத்த தேர்தலில் தேமுதிக இருக்காது.

தன்னுடைய வீட்டில் உள்ளவர்களையே விஜயகாந்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்றைக்கு 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்திற்கு உருக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார்கள். இதற்கு விஜயகாந்த் என்ன பதில் சொல்லப்போகிறார். எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு அவர் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால் கட்சியை கைக்கழுவிவிட்டார்.

நாங்கள் எங்கள் அமைப்பின் தீர்மானத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் காட்டி, திமுகவில் சேர விருப்பத்தை தெரிவிப்போம். அதன்பிறகு ஒரு மாநாட்டை நடத்தி, திமுகவில் இணைவோம்" என்றார்.

படம்: ஆ.முத்துக்குமார்

கருத்துகள் இல்லை: