தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்த வாய்ப்பில்லை' என, அறிவித்த
அ.தி.மு.க.,வுக்கு, விதவைகள் மூலம், 'சென்டிமென்ட் அட்டாக்' கொடுக்க,
தி.மு.க., மேலிடம் திட்ட மிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
'தமிழகத்தில்
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை, சில மாதங்களுக்கு முன்
தீவிரமடைந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க., - ம.தி.மு.க., -
பா.ம.க., - காங்., உட்பட, பல கட்சி கள் போராட்டங்களை நடத்தின.
விஜயகாந்தும், மது விலக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதனால், சமீபத்திய சட்டசபை கூட்டத்தொடரில், மது விலக்கு தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு வெளியிடும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால், 'அது முடியாது' என, சட்டசபையில் தீர்க்கமாக அறிவித்தார், மின் மற்றும் கலால் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
இந்த அறிவிப்பை, தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு எதிராக பயன்படுத்தி, ஓட்டு அறுவடை செய்யும் ஆலோசனையில், தி.மு.க., ஆழ்ந்துள்ளது. இது தொடர்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழி, சில ஆலோசனைகளை கூறியுள்ளார். அதன்படி, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை எதிர்த்து, தி.மு.க., தரப்பில், மதுவால் உயிரிழந்தவர்களின் மனைவியை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, மதுவால் கணவனை இழந்த விதவைகளை தேடிப்பிடிக்கும் பணியில், தி.மு.க., மகளிர் அணியினர் முடுக்கி விடப்பட்டு உள்ளனர். இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக