திங்கள், 31 ஆகஸ்ட், 2015

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பா.ஜ.க. அரசு கைவிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, உள்கட்டமைப்புகளை மிக வேகமாக மேம்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
இதற்காக முந்தைய காங்கிரஸ் அரசு கடந்த 2013–ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்தது. அந்த சட்டத்திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதல் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பா.ஜ.க. அரசு திருத்தங்கள் செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நாடெங்கும் உள்ள விவசாயிகளை இந்த சட்டத்திருத்தங்கள் பாதிக்கும் என்று கூறி போராட்டங்கள் நடத்தியது. சில எதிர்க்கட்சிகளும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ததை எதிர்த்தன.
இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்த பா.ஜ.க. அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்தது. 3 தடவை அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. என்றாலும் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்துக்கு மத்திய பா.ஜ.க. அரசால் ஒப்புதல் பெற முடியவில்லை.

பாராளுமன்ற மேல்–சபையில் பா.ஜனதாவுக்கு மெஜாரிட்டில் பலம் இல்லாததால் அந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் வருகிற 31–ந்தேதியுடன் காலாவதி ஆகிறது.
அந்த சட்டத்தை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டுமானால் மீண்டும் 4–வது தடவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவசர சட்டத்தை வெளியிட வேண்டும். ஆனால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இதை விரும்பவில்லை. நாடெங்கும் உள்ள எதிர்ப்பை சமாளிக்க அந்த சட்டத்திருத்தத்தை கைவிட தீர்மானித்தனர்.
நிலம் கையப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி நாடெங்கும் உள்ள விவசாயிகளை தூண்டிவிட முயல்வதையும் பிரதமர் உணர்ந்தார். எனவே அவசர சட்டத்தை கைவிட முடிவு செய்தார். அதன்படி நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தங்களை பா.ஜ.க. அரசு கைவிட்டுள்ளது.
இதற்கிடையே மத்திய அரசிடம் நிலம் கையகப்படுத்துவதற்கான சட்ட வரைமுறைகள் எதுவுமே இல்லாத சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக மத்திய அரசின் பல்வேறுத் துறை திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதைத் தவிர்க்க மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் மத்திய அரசுக்கு உருவானது.
இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக 13 சட்டங்களை உள்ளடக்கிய புதிய அரசு உத்தரவை மத்திய அரசு நேற்று பிறப்பித்தது. தேசிய நெடுஞ்சாலை சட்டம், ரெயில்வே சட்டம், பாதுகாப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 13 சட்டங்கள் இந்த புதிய அரசாணையில் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இந்த 13 சட்டங்களுக்கு உட்பட்டு மத்திய அரசின் பல்வேறுத் துறை திட்டங்களுக்கும் தேவையான நிலத்தை கையகப்படுத்த முடியும். இந்த 13 சட்டங்களின் அடிப்படையில் நிலத்தை கையகப்படுத்தும்போது அதற்கு வழங்க வேண்டிய இழப்பீடு பற்றியும் நேற்று வெளியிடப்பட்ட புதிய அரசாணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 13 சட்டங்களுக்கு உட்பட்டு கையகப்படுத்தும் நிலங்களுக்கு 4 மடங்கு இழப்பீடு வழங்க மத்திய அரச முடிவு செய்துள்ளது. அதாவது அரசின் திட்டங்களுக்கு நிலத்தை கொடுக்கும் விவசாயிகளுக்கு அவர்களது நிலத்துக்கு, தற்போதைய சந்தை மதிப்பு விலை போல 4 மடங்கு பணம் அதிகமாக கொடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் அவசரச் சட்டத்தில் இடம் பெற்றிருந்தபடி இழப்பீடுகள் வழங்க வழிவகை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கு போராடுவதற்கு பதில் மிகவும் தந்திரமான முறையில் இந்த மாற்று நடவடிக்கையில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது.
பீகார் தேர்தலுக்கு முன்பு மாற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதன் மூலம் விவசாயிகளிடம் திருப்தியான சுமூகமான சூழ்நிலையை உருவாக்க முடியும் என்று மத்திய பா.ஜ.க. அரசு கருதுகிறது மாலைமலர்.com

1 கருத்து:

Unknown சொன்னது…

Very Nice Blog, I like this Blog thanks for sharing this blog , I have got lots of information from this Blog. Do u know about Tamil cinema news