வியாழன், 2 மே, 2024

பூதாகரமாகும் இசையா? மொழியா? : மொரிஷியஸில் இளையராஜா

 மின்னம்பலம் -  Selvam :  கடந்த ஒரு வாரமாக கோலிவுட் வட்டாரத்தில் வைரமுத்து – இளையராஜா பிரச்சனை பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற படிக்காத பக்கங்கள் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, “ஒரு பாடலில், இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது.
இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது மொழி. மொழி எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது இசை. இரண்டும் கூடினால்தான் அதற்குப் பாட்டு என்று பொருள். சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும், திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. புரிந்துகொள்ளாதவன் அஞ்ஞானி” என்று பேசியிருந்தார்.



இளையராஜாவை வைரமுத்து மறைமுகமாக விமர்சித்ததாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்தநிலையில், கங்கை அமரன் வெளியிட்ட வீடியோவில், “வைரமுத்துவின் பாடல்களை இளையராஜா செழுமைப்படுத்தாமல் இருந்திருந்தால் அவரது எதிர்காலமே ஜீரோவாக இருந்திருக்கும்.

வைரமுத்து நிச்சயமாக திறமை உள்ளவர் தான். ஆனால், அதிகமான பாப்புலரிட்டி அவர் பாடலுக்கு வந்தவுடன் கர்வம் தலைக்கேறிவிட்டது” என்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உழைப்பாளர் தினமான நேற்று வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் 1983-ஆம் ஆண்டு இளையராஜா இசையமைப்பில் வைரமுத்து பாடல் வரிகளில் வெளியான கண் சிவந்தால் மண் சிவக்கும் பாடலை பகிர்ந்து, “இந்த பாடல் உழைக்கும் தோழர் அனைவருக்கும் சொந்தம்” என்று தெரிவித்திருந்தார்.

இப்படி கோலிவுட்டில் இளையராஜா – வைரமுத்து சர்ச்சை மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இளையராஜா இந்த சர்ச்சைகளுக்கு பதில் சொல்லும் விதமாக எக்ஸ் தளத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

அதில் மொரிஷியஸ் கடற்கரை ஓரத்தில் பேண்ட், ஷர்ட் அணிந்துகொண்டு கூலாக காற்று வாங்குவது போன்ற படத்தை பகிர்ந்துள்ளார்.

வைரமுத்துவின் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இளையராஜா, கூலாக இருப்பதாக தனது போஸ்ட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்று இளையராஜா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

செல்வம்

கருத்துகள் இல்லை: