வெள்ளி, 11 மார்ச், 2022

தெலுங்கானா முதலவர் சந்திரசேகர ராவ் ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்ட காணொளி

 Noorul Ahamed Jahaber Ali -  e Oneindia Tamil  :  ஐதராபாத்: தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவுக்கு இடது கையில் வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் சோர்வுடன் காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில், தலைநகர் ஐதராபாத்தின் சோமாஜிகுடாவில் அமைந்துள்ள யசோதா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் அவரது மனைவி ஷோபா, மகள் கவிதா, மகனும் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் ஆகியோர் உடன் சென்றனர்.


இதுகுறித்து முதலமைச்சரின் தனி மருத்துவர் எம்.வி.ராவ் தெரிவிகையில், "ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது வழக்கம்.

கடந்த 2 நாட்களாக தனது உடல் நிலை சரியில்லை என முதலமைச்சர் தெரிவித்தார். இடது கையிலும் இடது காலிலும் வலி இருப்பதாகவும் அவர் கூறி வந்தார். அவருக்கு சி.டி.ஸ்கேன் செய்யப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகு அடுத்தக்கட்ட சிகிச்சை குறித்து தெரிவிப்போம். தற்போது முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் உடல்நிலை நன்றாக உள்ளது. இது ஒரு முன்னெச்சரிக்கை பரிசோதனை மட்டுமே." என்றார்.

மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவரது இரத்த குழாயில் அடைப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. தொடர் பணி அழுத்தம் காரணமாகவே அவருக்கு கை வலி ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பரிசோதனை முடிவுகள் வெளியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட இந்த உடல்நலக்குறைவு காரணமாக யதாத்ரி கோயில் பயணத்தை சந்திரசேகர் ராவ் கைவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: