புதன், 7 அக்டோபர், 2020

தமிழ்ப்படங்களில் முட்டாள் தனமான மருத்துவ காட்சிகள் .. வர்மா நான்சென்ஸ்

Anbu Mani : · திரைப்படங்கள் மருத்துவ உலகம் பற்றி உருவாக்கி வைத்துள்ள தவறான பொதுப் புத்தியினால் மருத்துவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள்

ஏராளம். தற்போது வர்மா என்ற பெயரில் ஒரு திரைப்படம். பாலா இயக்கத்தில். பிரசவ அறை. குழந்தையின் தலைக்கு பதிலாக கால் முதலில் வருகிறது. இதை footling presentation என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். நாயகன் டாக்டர். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர். யோசிக்கிறார்.
பையில் இருந்து ஒரு சிகரெட் லைட்டர் எடுத்து 🔥 தீச்சுவாலையால் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் குழந்தையின் பாதத்தில் சுடுகிறார்.
உடனே குழந்தை ரிஃப்ளெக்சிவாக காலை உள்ளே இழுத்துக் கொள்கிறது. இழுத்துக் கொண்டது மட்டும் அல்லாமல் அதே வேகத்தில் ஒரு குட்டிக் கரணம் அடித்து தலை கீழாக வந்து பிறப்பது போல கிராபிக்ஸ்சில் காட்டுகிறார்கள்.
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
படத்தில் காட்டப்பட்டுள்ளது போல செய்ய முடியாது.
இந்த நிலை இருந்தால் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையையும் தாயையும் காப்பாற்ற முடியும். 
இதைப் போன்ற எண்ணற்ற சிக்கலான பிரசவங்களை தமிழ் நாட்டில் நாள் தோறும் நூற்றுக் கணக்கில் அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள் வெற்றிகரமாக சமாளித்து வருகிறார்கள்.
இதைப் போன்று கால், புட்டம் போன்ற பகுதிகள் முதலில் வருகிறது என்றால் சிசேரியன் அறுவை தான் சிறந்த பாதுகாப்பான தீர்வு.
தமிழ் நாட்டில் நாற்பது கிலோமீட்டர் இடைவெளியில் சீமாங் எனப்படும் ஒருங்கிணைந்த தாய் சேய் நல அரசு மருத்துவமனைகள் உள்ளன. எந்த இடத்தில் இருந்தும் அதிக அளவு ஒரு மணி நேரத்தில் இந்த மருத்துவமனைக்கு வந்து விடலாம். திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது
போன்ற சிக்கலான பிரசவங்கள் வந்தால் ஒரு கிராமப்புற மருத்துவ மனைக்கு வந்தால் கூட அந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சீமாங் மருத்துவ மனைக்கு அனுப்பி வைப்பார்கள். முன் கூட்டியே தொலைபேசி வழியாக தகவல் தந்து விட்டு அனுப்பி வைப்பார்கள்.
தேவையற்ற ரிஸ்க் எதுவும் எடுப்பது இல்லை.
2020 இல் நவீன தமிழ் நாட்டின் மருத்துவத் துறையில் நடப்பு நிலை இது தான்.
முன்னொரு காலத்தில் இருந்தது போல மகப்பேறு பார்க்க மருத்துவர்கள் இல்லை , மருத்துவ மனைகள் இல்லை, சிசேரியன் அறுவை செய்ய ஆள் இல்லை என்பது போன்ற சூழல் இன்று இல்லை.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள், கதை ஆசிரியர்கள் கடற்கரை நட்சத்திர விடுதிகளில் நடக்கும் ஸ்டோரி டிஸ்கஷனுக்கு டாக்டர்களைக் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்குத் தெரிந்த ஒரு மருத்துவருக்கு தொலைபேசி வழியாகக் கேட்டாலே உண்மை என்ன என்று சொல்லி விடுவார்கள்.
இப்படிப் பட்ட அபத்தக் காட்சிகளைத் தவிர்க்கலாம்.
ஏற்கனவே திரைப்படத் தாக்கத்தால் வென்டிலேட்டர், சிசேரியன் உள்ளிட்ட மருத்துவ அறிவியல் சிகிச்சை முறைகள் மீது மக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளனர்.
வர்மா படத்திலிருந்து வரும் இத்தகைய காட்சி மூலம் வருங்காலத்தில் நம் மகப்பேறு மருத்துவர்கள் மேலும் பல சிக்கல்களை, வழக்குகளை, தாக்குதல்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது என்று மட்டும் எனக்குப் புரிகிறது.
வர்மா படத்திலிருந்து மேற்படி காட்சியை இயக்குனர் பாலா அவர்கள் நீக்க வேண்டுகிறேன்.
பட நாயகனின் நாயகத் தனத்தை காட்ட இரண்டரை மணி நேரப் படத்தில் பல காட்சிகள் வைக்க முடியும் உங்களால். இந்த அபத்தமான காட்சி மூலம் தான் அதைக் காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை தானே .
- மரு.மா.அன்புமணி.

கருத்துகள் இல்லை: