சனி, 28 மே, 2016

BBC : புதுச்சேரியின் முதலமைச்சராக நாராயணசாமி தேர்வு.. முன்னாள் மத்திய இணையமைச்சர்

புதுச்சேரியின் புதிய முதலமைச்சராக முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டுடன் சேர்ந்து புதுச்சேரிக்கும் மே 16ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 30 இடங்களில் 15 இடங்களைக் கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க. இரண்டு இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ், வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த போட்டி நிலவியது. முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முதல்வர் நாற்காலியைப் பிடிப்பதில் முனைப்புக் காட்டினார்கள்.


இதனால், தேர்தல் முடிவுகள் வெளிவந்து சுமார் பத்து நாட்கள் ஆன நிலையிலும் முதல்வர் தேர்வு செய்யப்படவில்லை. புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம், டெல்லி சென்று மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார். இந்த நிலையில், புதுச்சேரியின் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்ய மேலிடப் பார்வையாளர்கள் ஷீலா தீக்ஷித், முகுல் வாஸ்னிக் ஆகியோர் சனிக்கிழமை புதுச்சேரி வந்தனர். இவர்கள் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்திய நிலையில், புதிய முதலமைச்சராக நாராயணசாமியின் பெயரை வைத்தியலிங்கமும் நமச்சிவாயமும் முன்மொழிந்தனர். பிறகு அவர் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 புதிய முதல்வர் பதவியேற்கும் தேதி, அமைச்சரவை பட்டியல் ஆகியவை இன்னும் அறிவிக்கப்படவில்லை. முடிவுக்கு எதிராக போர்க்கொடி  போராட்டத்தில் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் புதிய முதலமைச்சராக நாராயணசாமி தேர்வுசெய்யப்பட்டதை எதிர்த்து புதுவை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்ற தனியார் விடுதிக்கு வெளியில் நாராயணசாமிக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நாராயணசாமி முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டது ஏன் என அவர்கள் கேள்வியெழுப்பினர். காங்கிரஸ் கொடியை தீ வைத்துக் கொளுத்தியதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். அதற்குப் பிறகுதான், மேலிடப் பார்வையாளர்களான ஷீலா தீட்சித் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டனர்

கருத்துகள் இல்லை: